
சேனா சரவணன்
தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அப்ரூவல் மனைகளை மறுவிற்பனை செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் ஆர்வலர்களிடம் புதிய உற்சாகம் பிறந்துள்ளது.
தமிழகத்தில் விவசாய விளைநிலங்கள் சட்ட விரோதமாக, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றப்படுவதால் விவசாயம் அழிந்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அங்கீகாரம் இல்லாத பஞ்சாயத்து மனைகளைப் பத்திரப்பதிவு செய்யத் தடை விதித்தது.

இதையொட்டித் தமிழக அரசு 2016, அக்டோபர் 20-ம் தேதி அரசாணை வெளியிட்டது. அதில், ‘பத்திரப்பதிவுச் சட்டம் பிரிவு 22 (ஏ)வின்படி, 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறுவிற்பனை செய்யலாம். அதற்குப் பிறகு லே அவுட் போடப்பட்ட மனைகளைப் பதிவு செய்யக்கூடாது’ என்று கூறியிருந்தது.
இந்த வழக்கு 2017, மார்ச் 28-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பத்திரப்பதிவுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையைத் தளர்த்தி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். பின்னர், இந்த வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி பிறப்பித்தத் தடையை நீட்டித்ததுடன், மார்ச் 28-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அங்கீகாரம் இல்லாத நிலங்களை வரையறை செய்யும் விதிமுறைகளை உருவாக்கி, தமிழக அரசு மே 5-ம் தேதி இரு அரசு ஆணைகளைப் பிறப்பித்தது. இந்த நிலையில், இந்த வழக்குத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘‘கடந்த மே 12-ல் இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளைப் பத்திரப்பதிவு செய்வது குறித்துச் சில சந்தேகங்கள் உள்ளன. அதைத் தெளிவுப்படுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் விவரம் பின்வருமாறு...
2016, அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு அங்கீகாரம் இல்லாத மற்றும் பஞ்சாயத்து அப்ரூவல் மனைகளை விற்பனை செய்திருந்தால், அந்த வீட்டு மனைகளை மறுவிற்பனை செய்யலாம். அதுபோன்ற மனைகளைச் சார்பதிவாளர்கள், பத்திரப் பதிவு செய்யலாம்.
அதேசமயம், இந்த உயர்நீதிமன்றம், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளைப் பத்திரப்பதிவு செய்ய, 2106 செப்டம்பர் 9-ம் தேதி தடை விதித்தது. இந்தத் தடை அமலில் இருந்தபோது (2016 செப்டம்பர் 9 முதல் 2017 மார்ச் 28 வரை) தடையை மீறிப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை, மறு விற்பனை செய்ய முடியாது.
அங்கீகாரம் இல்லாத மனைகளில் வீடு கட்டும்போது, தமிழக நகரமைப்புச் சட்டம் மற்றும் தமிழக அரசு பிறப்பித்த புதிய விதிமுறைகளைப் பின்பற்றி, அந்த மனைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது இந்த வழக்கு விசாரணை, வருகிற ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது. அப்போது என்ன தீர்வு வரும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.