
சேனா சரவணன்

பஞ்சாயத்து அப்ரூவல் மனைகளை வாங்கவோ, விற்கவோ தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தபிறகு தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் கொஞ்சம் சுறுசுறுப்பாகி இருக்கிறது.
பொதுவாக, புதிதாக லே அவுட் போடும்போது நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கும் முனை மனைக்கு (கார்னர் பிளாட்) தனியாகக் கூடுதல் விலை சொல்வது இல்லை.
முதலீட்டு நோக்கில் மனை வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்த கார்னர் பிளாட்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவார்கள். பிற்காலத்தில் அந்த லே அவுட் வளரும் நிலையில், இந்த கார்னர் பிளாட்களுக்கு நல்ல தேவையிருக்கும். அதாவது, கடைகள் வைக்க இதுபோன்ற மனைகளை விரும்பி வாங்குவார்கள். அப்போது நல்ல விலை போகும். மேலும், வீடு கட்டுவதாக இருந்தால் இரண்டு திசைகளில் நுழைவு வாயில் வைக்க முடியும். நன்கு காற்றோட்டமும் இருக்கும்.
எனவே, முதலீட்டு நோக்கில் மனை வாங்குவதாக இருந்தால், லே அவுட் போட்டவுடன் முதலிலேயே முனை மனைகளை வாங்கிப்போட்டால் பிற்காலத்தில் நல்ல விலை கிடைக்கும். லே அவுட்களில் வீடுகள் வந்தபிறகு, கார்னர் பிளாட் குறைந்த விலைக்குக் கிடைப்பது கஷ்டம்.
சில லே அவுட்களில் முனை மனைகளை
லே அவுட் போடும்போதே, ‘விற்றுவிட்டது’ என்று புரமோட்டர்கள் முடக்கிவைப்பதன் ரகசியம் இதுதான். முனை மனைகளில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்கள், கார்னர் பிளாட்தான் வேண்டும் என்று உறுதியாகச் சொன்னால் உங்களுக்கு அதனை ஒதுக்கித் தர வாய்ப்பிருக்கிறது. அல்லது சற்றுக் கூடுதல் தொகை வாங்கிக்கொண்டு ஒதுக்கித் தரவும் வாய்ப்பு உண்டு!