
சோ.கார்த்திகேயன்
மின்னணுப் பங்கு ஆவணக் காப்பக நிறுவனமான சி.டி.எஸ்.எல் (Central Depositary Services Limited) இந்த மாதம் 19-ம் தேதி பங்கு வெளியீட்டுக்கு வரவிருக்கிறது. இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் சி.டி.எஸ்.எல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா என்கிற கேள்வி பல முதலீட்டாளர்களின் மனதில் எழுந்துள்ளது. நம் நாட்டில் இரண்டே இரண்டு டெபாசிட்டரி அமைப்புகள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று, தேசியப் பங்குச் சந்தையின் துணை நிறுவனமான நேஷனல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் (NSDL). மற்றொன்று, சி.டி.எஸ்.எல்.

சி.டி.எஸ்.எல் வருவாயைப் பொறுத்தவரை, டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் செலுத்தும் பரிவர்த்தனைக் கட்டணம், வருடாந்திரக் கட்டணம், கணக்குப் பராமரிப்பு கட்டணங்கள் ஆகியவை அடங்கும். இது தவிர, கார்ப்பரேட் நடவடிக்கைக் கட்டணம் மற்றும் மின் வாக்களிப்புக் கட்டணங்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் வருவாயில், வருடாந்திரக் கட்டணம் 39%, பரிவர்த்தனைக் கட்டணம் 21%, பிற கட்டணங்கள் 38%, ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் 2 சதவிகிதமாக உள்ளது.

சி.டி.எஸ்.எல் நிறுவனத்தில், மும்பை பங்குச் சந்தை (BSE), கொல்கத்தா பங்குச் சந்தை, எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை முதலீடு செய்துள்ளன. சி.டி.எஸ்.எல் நிறுவனம், இந்தப் பங்கு வெளியீடு மூலம் 3.50 கோடி பங்குகளை ஏல முறையில் விற்பனை செய்ய உள்ளது. இவற்றில் சி.டி.எஸ்.எல். நிறுவன ஊழியர்களுக்கு 7 லட்சம் பங்குகள் ஒதுக்கப்படுகிறன்றன. சி.டி.எஸ்.எல் பங்கானது என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சில் மட்டுமே பட்டியலிடப்படும். பி.எஸ்.இ-க்குச் சொந்தமானது இது என்பதால், இந்தப் பங்கு அதில் பட்டியலிடப்படாது. இந்தப் பங்கு வெளியீடு இந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி,21-ம் தேதி நிறைவடைகிறது. பங்கின் விலைப்பட்டை ரூ.145 - ரூ.149. இந்தப் பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து முதலீட்டு ஆலோசகர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.
“சி.டி.எஸ்.எல் ஐபிஓ-ல் தாராளமாக முதலீட்டை மேற்கொள்ளலாம். டெபாசிட்டரி அமைப்பான இது, நஷ்டத்தைச் சந்திப்பதற்கான வாய்ப்பு குறைவு. பங்குச் சந்தை மட்டுமில்ல, மியூச்சுவல் ஃபண்ட், பாண்ட் என முதலீடு அதிகரித்து வருவதால், ஒவ்வொரு ஆண்டும் சி.டி.எஸ்.எல் போன்ற டெபாசிட்டரி அமைப்பு வளர்ந்துகொண்டேதான் இருக்கும். முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மற்றும் வர்த்தகம் அதிகரிக்கும்பட்சத்தில் இந்நிறுவனத்தின் வருவாயும் கணிசமாக அதிகரிக்கும்.

சி.டி.எஸ்.எல்-ல் உள்ள ஒரே ஒரு சிக்கல் என்றால், இந்தியாவில் என்.எஸ்.டி.எல்-லில்தான் அதிகக் கணக்குகள் உள்ளன. என்.எஸ்.டி.எல் நிறுவனத்தைவிட, சி.டி.எஸ்.எல்-ன் சந்தை பங்களிப்பு கொஞ்சம் குறைவு. சி.டி.எஸ்.
எல் கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை மேற்கத்திய மாநிலங்களில் மட்டுமே அதிகம். இப்போது பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஜிடிபி வளர்ச்சி, எஃப்டிஐ வரத்து அதிகரிக்கும்போது பெரும்பாலும் பங்குச் சந்தையில்தான் பணத்தை முதலீடு செய்வார்கள். இது மட்டுமின்றி, மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி முறை முதலீடு பல மடங்கு அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, பரிவர்த்தனையும் உயரும் என்பதால், டெபாசிட்டரி அமைப்புகளுக்கு அதிக அளவில் வருமானம் வரும். தற்போதைய நிலையில் வருவாயைப் பொறுத்தவரை, என்.எஸ்.டி.எல்-ஐவிட, சி.டி.எஸ்.எல்.லின் வருவாய் குறைவாகவே இருக்கிறது. எனினும், இந்த நிறுவனம் தனது வளர்ச்சியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. சி.டி.எஸ்.எல் ஒரு பங்கின் விலை ரூ.145 முதல் ரூ.149 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது நியாயமான விலைதான். ஆகையால் தாராளமாக சி.டி.எஸ்.எல் ஐபிஓ-வில் முதலீட்டை மேற்கொண்டு லாபத்தை ஈட்டலாம்” என்றார்.
நிபுணர் சொல்கிறபடி, முதலீட்டாளர்கள் யோசித்து முடிவெடுக்கலாமே!