
மீ.கண்ணன், மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிக மாற்றங்களை, சீரமைப்பு என்கிற பெயரில் கொண்டுவர முடிவெடுத் திருக்கிறது பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் கட்டுப்பாட்டு வாரியமான செபி. அது என்ன சீரமைப்பு என்பதைத் தெரிந்துகொள்ளும்முன், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் தற்போதைய நிலை என்னவென்று பார்த்து விடுவோம்.

குழப்பும் திட்டங்கள்
கடந்த ஒரு வருடத்தில் சரிவிகிதத் திட்டம் எனப்படும் பேலன்ஸ்டு திட்டங்கள் முதலீட்டாளர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளன. சரிவிகிதத் திட்டம் எனப் பெயர் வைத்திருந்தாலும், இதில் பங்கும், கடன் சார்ந்த முதலீடும் ஒருபோதும் சரிவிகிதத்தில் இருப்பதில்லை. தற்போதைய சரிவிகிதத் திட்டங்களில் நிறைய சின்ன சின்ன வேறுபாடுகளைச் செய்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடத்துகின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், பேலன்ஸ்டு திட்டங்கள், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் திட்டங்கள், டைனமிக் திட்டங்கள் என்று பல பெயர்களில் ஃபண்ட் களை வெளியிட்டு வருகின்றன. இந்த வகையில் ஃபண்ட் நிறுவனங்கள், முன்னர் வேறு பெயர்களிலிருந்த திட்டங்களை ‘பேலன்ஸ்டு திட்டங்கள்’ என்று பெயர் மாற்றி விற்பதும் நடக்கிறது.
செபி இப்போது எடுத்துவரும் நடவடிக் கைக்கு, இந்தப் பெயர் மாற்றம் மட்டுமே காரணமல்ல. வேறு பல விஷயங்களும் உள்ளன. இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம்.
வரிச் சேமிப்பு என்கிற பெயரில்...
வரிச் சேமிப்புத் திட்டங்கள் எனப் பல ஃபண்டு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை நடத்தி வருகின்றன. இவை எல்லாவற்றிலும் வரிச் சேமிப்பு என்கிற பெயர் அந்தத் திட்டத்துடன் இணைந்திருக்கும். சமீபத்தில், புதிதாக வந்த ஃபண்ட் நிறுவனங்கள் இந்தப் போக்கை சற்றே மாற்றி, வரிச் சேமிப்பு என்ற வார்த்தையைத் திட்டத்தின் பெயருடன் சேர்க்காமல், நீண்ட காலப் பங்குத் திட்டம் (Long Term Equity Fund) என்ற பெயருடன் வெளியிட்டு வருகிறது.

இந்தத் திட்டங்களில் சில நம்பர் ஒன் திட்டங்களாகவும் உள்ளன. சில ஃபண்டுகளில் பெயரை இப்படி மாற்றி வைப்பதன் மூலம் முதலீட்டாளர்களுக்குப் பெரிய நன்மை எதுவும் இல்லை. ஆனால், பழைய திட்டத்துக்குப் புதிய பெயர் வைத்துள்ளதைப் பார்த்து முதலீட்டாளர்கள் குழம்பவே செய்கின்றனர்.
ஆப்பிளும் ஆரஞ்சும்
தற்போது 42-க்கும் மேற்பட்ட ஃபண்ட் நிறுவனங்கள், சுமார் 2,000 திட்டங்களுக்கு மேல் வழங்கி வருகின்றன. இந்தத் திட்டங்களின் தன்மை, செயல்படுத்தப்படும் முறை ஆகியவற்றைப் புரிந்துகொண்டு முதலீடு செய்வது எல்லோருக்கும் எளிதான விஷயமல்ல. காரணம், ஒரு நிறுவனத்தின் லார்ஜ் கேப் திட்டமும் மற்றொரு நிறுவனத்தின் லார்ஜ் கேப் திட்டமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதனால், நாம் ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிட்டு ஆராய்கிறோம். இதனால், எந்த நன்மையும் கிடைக்காது என்பதுடன், தவறான முதலீட்டுக்கே முதலீட்டாளர்களைக் கொண்டு செல்லும்.
குறைந்த என்.ஏ.வி-தான் பெஸ்ட்டா?
ஃபண்ட் நிறுவனங்கள், தங்களிடமுள்ள திட்டங்களுக்குப் புதிதாக முதலீட்டாளர்களைக் கொண்டுவர முடியாமல், புதுப்புதுத் திட்டங்களைச் சின்னச் சின்ன மாறுதல்களோடு, கவர்ச்சிகரமான பெயர்களில் அறிமுகப்படுத்தி முதலீட்டாளர்களை ஈர்க்கின்றன. முதலீட்டாளர்கள், தற்போதிருக்கும் திட்டங்களில் அதிகமாக என்.ஏ.வி இருக்கும் பட்சத்தில், அதில் முதலீடு செய்யாமல், என்.ஏ.வி குறைவாக உள்ள திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். என்.ஏ.வி குறைவு, கூடுதல் என்று பார்த்து ஒரு ஃபண்டில் முதலீடு செய்யக்கூடாது. அதன் கடந்த கால வருமானம் உள்பட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்தே முதலீடு செய்ய வேண்டும்.
சுதாரித்த செபி
இது மாதிரி சிலபல குழப்பங்கள் நடந்து வருவதைப் பார்த்துச் சுதாரித்துக்கொண்ட செபி, ஒரே நிறுவனத்திலிருந்து ஒரே மாதிரியான திட்டங்கள் வருவதற்கும், புதுப்புதுத் திட்டங்கள் வருவதற்கும் கடிவாளம்போட ஆரம்பித்தது. மேலும், நிறுவனங்கள் ஏற்கெனவே நடத்திவரும் பல்வேறு திட்டங்களை மறுபரிசீலனைச் செய்து, ஒரே மாதிரியான திட்டங்களாக மாற்றிவிடுமாறு கூறியது.
இருந்தபோதிலும், செபியின் இந்த வேண்டு கோளை ஃபண்ட் நிறுவனங்கள் நடைமுறை படுத்தத் தயக்கம் காட்டின. எனவே, தற்போது செபி ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
செபியின் இந்த உத்தரவின்படி, எல்லா வகையான ஓப்பன் திட்டங்களும் ஐந்து வகையில் வகைப்படுத்தப்படும். ஒன்று, பங்கு சார்ந்தவை (Equity). இரண்டு, கடன் பத்திரங்கள் (Debt). மூன்று, கலப்பினங்கள் (Hybrid). நான்காவது, குறிக்கோளுடன் கூடிய திட்டங்கள். ஐந்து, இ.டி.எஃப் போன்ற மற்ற திட்டங்கள்.
பங்கு சார்ந்த திட்டங்கள் 10 வகையான உள்பிரிவாகவும், கடன் பத்திரங்கள் 16 வகையான உள்பிரிவாகவும், கலப்பினப் பத்திரங்கள் ஆறு வகையான உள்பிரிவாகவும், குறிக்கோளுடன் கூடிய திட்டங்கள் இரண்டு பிரிவாகவும், மற்றவை ஒரு வகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
மேலும், பங்குகளின் மார்க்கெட் கேப்பிட் டலைசேஷன் குறித்த விளக்கங்களும் ‘செபி’ யினால் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. சந்தையில் மார்க்கெட் கேப் அதிகமுள்ள முதல் நூறு நிறுவனங்கள் லார்ஜ் கேப் பங்குகளாகும். இவற்றின் மார்க்கெட் கேப் ரூ.26,000 கோடிக்கு மேல்.
அடுத்த 150 நிறுவனங்கள் அதாவது, மார்க்கெட் கேப் அடிப்படையில் அமைந்த 101 முதல் 250 வரையிலான மிட்கேப் என்று அழைக்கப்படும். மார்க்கெட் கேப் ரூ.26,000 முதல் ரூ.5,200 வரையிலான மற்ற எல்லா நிறுவனங்களும் இதன் கீழ் வரும். ரூ.5,000 கோடிக்கும் குறைவான மார்க்கெட் கேப் கொண்ட நிறுவனங்கள் ஸ்மால் கேப் என்றும் வகைப்படுத்தப்படும்.
முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை?
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செபி செய்ய நினைக்கும் இந்த மாற்றங்களில் முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?
முதலாவதாக, முதலீட்டாளர்கள் பல்வேறு திட்டங்களை ஆராய்ந்து குழப்பிக்கொள்ளாமல், தங்களுக்கேற்றத் திட்டத்தைத் தேர்வு செய்துகொள்ள முடிகிற அளவுக்கு எளிமையாக இருக்கும். இரண்டாவதாக, இரு நிறுவனங்களின் ஒரே மாதிரியான திட்டங்களை ஒப்பீடு செய்யும் போது சரியான முறையில் ஒப்பீடு செய்ய முடியும். மூன்றாவதாக, இணையதளங்களிலும் ஒரே மாதிரியாக வகைப்படுத்தி இருக்கும்போது திட்டங்களைப் பற்றி ஆராய்ந்து நல்ல முடிவுகளை எடுக்க முடியும்,
நான்காவதாக, வருங்காலத்தில் இந்தத் திட்டங்கள் சேர்க்கப்படும்போது, இதனால் முதலீட்டாளர்களுக்கு எந்த வகையான புதிய வரியும் செலுத்த வேண்டிய தேவை ஏற்படாது. இந்தத் திட்டங்கள் சேர்க்கப்படும்போது, இது விற்ற வகையில் கணக்கில் வராது. அதே திட்டத்தை நாம் வைத்திருப்பது போன்றே கணக்கிடப்படும்.
இன்னும் அறுபது நாள்களுக்குள் செபி சொன்ன விஷயங்கள் நடக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.