நடப்பு
Published:Updated:

2019-20 பட்ஜெட் எதிர்பார்ப்பு... பரம்பரைச் சொத்து வரி மீண்டும் விதிக்கப்படுமா?

2019-20 பட்ஜெட் எதிர்பார்ப்பு... பரம்பரைச் சொத்து வரி மீண்டும் விதிக்கப்படுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
2019-20 பட்ஜெட் எதிர்பார்ப்பு... பரம்பரைச் சொத்து வரி மீண்டும் விதிக்கப்படுமா?

பட்ஜெட்

டப்பு 2019-20-ம் நிதி ஆண்டுக்கான மத்திய முழு பட்ஜெட்டை ஜூலை 5 -ம்  தேதி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்திருப்பதால், இந்த பட்ஜெட்டில் அதிக வரிச் சலுகைகள் அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் எந்தெந்தத் துறையில் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். 

2019-20 பட்ஜெட் எதிர்பார்ப்பு... பரம்பரைச் சொத்து வரி மீண்டும் விதிக்கப்படுமா?

ஆஃம்பி அமைப்பின் எதிர்பார்ப்பு

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் அமைப்பான ஆஃம்பி பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வைத்திருக்கிறது.

2019-20 பட்ஜெட் எதிர்பார்ப்பு... பரம்பரைச் சொத்து வரி மீண்டும் விதிக்கப்படுமா?



“பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு விதிக்கப் பட்டிருக்கும் நீண்ட கால மூலதன ஆதாய வரியை நீக்கவேண்டும்.  பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் போல், கடன் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டங்களில் மாதந்தோறும் பணத்தைச் சேர்க்கிறமாதிரி டி.எல்.எஸ்.எஸ். (debt-linked savings scheme) கொண்டுவர வேண்டும். 

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு விதிக்கப்படும் பங்குப் பரிவர்த்தனை வரியை (எஸ்.டி.டி) நீக்கவேண்டும். என்.ஆர்.ஐ. களுக்குக் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி தற்போது 30 சதவிகிதமாக உள்ளது. இதை ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு உள்ளதுபோல, 15 சதவிகிதமாகக்  குறைக்கவேண்டும்” என ஆஃம்பி கோரிக்கை வைத்துள்ளது.

மழைநீர் சேகரிப்புக்கு அதிக ஒதுக்கீடு

ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் அக்ரி கமாடிட்டீஸ் ரிசர்ச் அனலிஸ்ட் ரித்தீஷ்குமார் சாஹு, ‘‘இடைக்கால பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 107% அதிகரிக்கப் பட்டது தொடரவேண்டும். முழு பட்ஜெட்டில் விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும்  பயன்படும் விதமாக மழைநீர் சேகரிப்புக்கு அதிக தொகையை ஒதுக்கீடு செய்யவேண்டும்” என்றார்.

2019-20 பட்ஜெட் எதிர்பார்ப்பு... பரம்பரைச் சொத்து வரி மீண்டும் விதிக்கப்படுமா?

ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் (மிட்கேப்) அமர்ஜீட் மவுரியா, ‘‘வாகனங்களுக்கு இப்போது ஜி.டி.எஸ் 28 சதவிகிதமாக இருப்பதை 18 சதவிகிதமாகக்  குறைக்கவேண்டும். அப்போதுதான் நாட்டில் வாகனங்கள் விற்பனை அதிகரித்து, அந்தத் துறை மந்தநிலையிலிருந்து மீண்டுவரும். நம் நாட்டில் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அதிக நிதிச் சிக்கலில் சிக்கியிருக்கின்றன. அவற்றுக்குப் புத்துயிர் கொடுக்க பட்ஜெட்டில் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, பழைய வாகனங்கள் வைத்திருப்ப வர்களுக்கு ஊக்கத் தொகை கொடுத்து புதிய வாகனங்கள் வாங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மின்சார வாகனம் தயாரிப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்” என்றார்.

ரியல் எஸ்டேட்டுக்கு தொழில் துறை அந்தஸ்து

ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங் இந்தியா (Knight Frank India)  நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் ஷிஷிர் பாய்ஜால் (Shishir Baijal), ‘‘நம்  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பைக் கொடுத்துவரும் ரியல் எஸ்டேட் துறைக்கு ‘தொழில் துறை அந்தஸ்து’  வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 80சி பிரிவின்கீழ், திரும்பக் கட்டும் வீட்டுக் கடன் அசலுக்கு மட்டும் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை அளிக்கவேண்டும்” என்றார். 

2019-20 பட்ஜெட் எதிர்பார்ப்பு... பரம்பரைச் சொத்து வரி மீண்டும் விதிக்கப்படுமா?

அனராக் பிராப்பர்டி கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் அனுஜ் பூரி, ‘‘80சி பிரிவின்கீழ் வரிச் சலுகைக்கான முதலீட்டு வரம்பு 2014-ம் ஆண்டு முதல் ரூ.1.5 லட்சமாக இருந்துவருகிறது. இதனை இந்த பட்ஜெட்டில் கணிசமாக அதிகப்படுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கு ஜி.எஸ்.டி-யில் உள்ளீட்டு வரியை மீண்டும் அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

பரம்பரைச் சொத்து வரி

சென்னையின் முன்னணி ஆடிட்டரும் ஓய்வுபெற்ற வருமான வரித் துறை ஆணையருமான எஸ்.ராஜரத்தினத்திடம் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டோம். ‘‘பணமதிப்பு நீக்கத்தின்மூலம் அதிகம் பேர் வருமான வரியைக் கட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் அரசுக்கு அதிக வரி வருமானம் கிடைத்திருக்கிறது. அந்த வகையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிக வரிச் சலுகை அளிக்கலாம்.

எஸ்டேட் டாக்ஸ் என்கிற பரம்பரைச் சொத்து வரி மீண்டும் கொண்டு வரப்படும் என்கிற பேச்சு அடிபட ஆரம்பித்திருக்கிறது. அதனைப் பெரும் பணக்காரர்களுக்குக் கொண்டுவருவதன்மூலம் அரசின் வரி வருமானம் அதிகரிக்கும். இந்த வரிப் பணத்தினைக் கொண்டு பல நலத் திட்டங்களை நிறைவேற்றலாம். 

இந்த பட்ஜெட்டில் பெரு நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட லாம். நம் நாட்டில் தொழில் துறை வளர்ச்சி காணவேண்டும் என்றால், வங்கித் துறை வலிமைப்படுத்தப்பட வேண்டும். வங்கிகள் தாராளமாகக் கடன் வழங்க போதிய நிதியை மத்திய அரசு வங்கிகளுக்கு அளிக்கவேண்டும்” என்றார்.

சென்னையைச் சேர்ந்த மூத்த ஆடிட்டர் ஜி.நாராயணசாமி,  ‘‘பரம்பரைச் சொத்து வரியை மீண்டும் கொண்டு வரக்கூடாது. அது மோசமான விளைவை ஏற்படுத்தும். அதிக வரி கட்டவேண்டும் என்பதற்காகப் பல பெரும் பணக்காரர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள்” என்று எச்சரித்தார்.

சி.சரவணன் - படம் : எஸ்.ரவிக்குமார்