நவீன உலகில் அரசியல் கூட தொழில்நுட்பத்தைச் சார்ந்து இயங்க வேண்டிய சூழல் உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. உலகின் பல நாடுகளில் பல கட்சிகள் தேர்தலுக்காகச் செலவிடும் பணத்தில் கணிசமான தொகையை இணையதளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்காக உபயோகிக்கிறார்கள். இந்நிலையில் கூகுள் தனது தளத்தில் வெளியாகும் அரசியல் விளம்பரங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதற்கு முன்னால் விளம்பரதாரர்கள் வாக்காளர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் அரசியல் சார்பு நிலையை வைத்து விளம்பரங்கள் செய்து வாக்காளர்களை டார்க்கெட் செய்து வந்தனர். அதற்குத் தடை விதித்துள்ள கூகுள் நிறுவனம், இனி வாக்காளர்களின் வயது, பாலினம் மற்றும் வாழுமிடம் போன்ற விவரங்களை வைத்து மட்டுமே டார்க்கெட் செய்து விளம்பரங்கள் வெளியிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும் இதற்கு முன்பு கூகுள் பயனாளிகளின் தேடுதல் நடவடிக்கைகளை வைத்து அவர்கள் எந்தக் கட்சிக்கு சார்பாக இருக்கிறார்கள் என்பதை வகைப்படுத்த முடியும். இப்பொழுது அந்தத் தரவுகளையும் விளம்பரதாரர்கள் பயன்படுத்த கூகுள் தடை விதித்துள்ளது. சமீபகாலமாக, சமூக வலைதளங்கள் அதனுடைய பயனர்களின் விவரங்களை விற்கிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வரும் நிலையில், கூகுளின் இந்த முடிவு அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்துள்ளது. 2020ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கூகுளின் இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் பல விவாதங்களை எழுப்பியுள்ளது.
இந்தப் புதிய நடைமுறையை இங்கிலாந்தில் டிசம்பர் 12ம் தேதி நடக்க இருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன்பாக அறிமுகம் செய்ய இருக்கிறது கூகுள். அதன் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தில் வருடம் முடிவதற்கு முன்பாகவும், உலகின் மற்ற நாடுகளில் ஜனவரி 6, 2020 அன்று அறிமுகம் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது. ``அரசியல் விளம்பரங்கள் குறித்து சமீபத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளையும் சந்தேகங்களையும் கருத்தில்கொண்டு, எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் வாக்காளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக, இந்தப் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளோம்" எனத் தெரிவித்திருக்கிறார் கூகுளின் விளம்பரங்கள் பிரிவு தலைவரான ஸ்காட் ஸ்பென்சர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கூகுளின் இந்த முடிவால் பல அரசியல் கட்சிகள் தங்களுடைய விளம்பரங்களை தொலைக்காட்சிக்கும் மற்ற ஊடகங்களுக்கும் கொடுக்க முடிவெடுத்துள்ளனர். ``வரும் ஜனவரியோடு கூகுளின் விளம்பரச் சேவைகளைப் பயன்படுத்துவதை நாங்கள் நிறுத்திக்கொள்வோம். வாக்காளர் விவரங்களைப் பயன்படுத்தி பல வருடங்களாக வாக்களிக்காமல் இருக்கும் நபர்களை வாக்களிக்க வரச்சொல்லும் விளம்பரங்களை நாங்கள் வெளியிடுவோம். கூகுளின் இந்த முடிவால் பாதிக்கப்படுவது வசதியில்லாத சுயேச்சை வேட்பாளர்கள்தான்" எனக் கூறியிருக்கிறார் ஃப்லெக்ஸ் பாயின்ட் மீடியாவின் தலைமைச் செயலாளர் டிம் காமேரான்

மேலும் விளம்பரங்களில் தேர்தல் முடிவுகள் பற்றியோ அல்லது வேட்பாளர்கள் பற்றியோ தவறான தகவல்களை வெளியிடக் கூடாது என கூகுள் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே ட்விட்டர் தன்னுடைய தளத்தில் அரசியல் விளம்பரங்களை மொத்தமாக தடை செய்துவிட்டது. ஃபேஸ்புக் ``காம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா" சர்ச்சைக்குப் பின்னர் தன்னுடைய அரசியல் விளம்பரங்கள் கொள்கைகளை மாற்றுவது குறித்து ஆலோசித்து வரும் நிலையில், கூகுளின் இந்த முடிவு ஒரு முன் மாதிரியாக அமைந்துள்ளது.