விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள வைரபுரத்தைச் சேர்ந்த அசோக் என்பவருக்கும், பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும், இந்தத் தம்பதிக்குக் குழந்தை இல்லையாம். கணவன், மனைவிக்குள் அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி குடும்பப் பிரச்னையின் காரணமாக ஷர்மிளா அவரது தாய் வீடு இருக்கும் பெரமண்டூருக்குச் சென்றிருக்கிறார். 26-ம் தேதி மாலை ஷர்மிளா வீட்டுக்குச் சென்ற அவரின் கணவர் அசோக், ஷர்மிளாவிடம் சமரசம் பேசி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அசோக் வெளியில் செனறிருந்த சமயத்தில், இரவில் ஷர்மிளா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகவும், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் ஷர்மிளாவின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஷர்மிளாவின் குடும்பத்தினர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடும்பப் பிரச்னை காரணமாக திருமணமான இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்நிலையில், "திருமணமாகி குழந்தை இல்லாததாலும், வரதட்சணை கேட்டும் அசோக், அவரின் குடும்பத்தார் என் பெண்ணை (ஷர்மிளா) அடித்துக் கொடுமைப்படுத்திவந்துள்ளனர். குடும்ப பிரச்னையால் அண்மையில் என் வீட்டுக்கு வந்திருந்த என் பெண்ணை, சமரசம் பேசி அழைத்துச் செல்ல வந்த அசோக், பெரமண்டூர் கிராமத்திலிருந்தே அடித்து துன்புறுத்தி அழைத்துச் சென்றிருக்கிறார். என்னுடைய மகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குக் கோழை இல்லை. அசோக், அவரின் குடும்பத்தினர்தான் அடித்துக் கொலை செய்திருக்க வேண்டும். எனவே, உரிய நீதி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று 27-ம் தேதியே ஷர்மிளாவின் தந்தை வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

புகாரைப் பெறறுக்கொண்ட காவல்துறையினர், இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் உடற்கூறாய்வு செய்வதற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையிலிருந்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உடற்கூறாய்வுக்குப் பின்னர், உடலை பெற்ற குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உரிய முறையில் அடக்கம் செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், "உயிரிழந்த பெண் தாக்கப்பட்டிருக்கிறார். ஆகவே, இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்ற வேண்டும். அசோக் என்பவரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உயிரிழந்த ஷர்மிளாவின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து விழுப்புரம் எஸ்.பி அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் (02.06.2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, புகார் மனு அளித்துள்ளனர். இதனால் விழுப்புரம் பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையே விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் காவல்துறை அதிகாரிகள்.

இந்த வழக்கின் நிலை குறித்து வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் தொடர்புகொண்டு பேசினோம். "174/3 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏ.எஸ்.பி சார் விசாரித்துவருகிறார். தனிப்படையும் அமைக்கப்பட்டு அசோக் என்பவரைத் தேடிவருகிறோம். இன்னும் ஓரிரு தினங்களில் பிடித்துவிடுவோம். உடற்கூறாய்வு முடிவு வரவேண்டியுள்ளது. அந்த முடிவின் அடிப்படையில், வழக்கின் பிரிவு மாற்றப்படலாம்" என்றார்கள்.