திருவண்ணாமலை: சிறுமியைக் கடத்தி வன்கொடுமை? - மலை கிராமத்தைப் பதறவைத்த பாதிரியார்
ஜவ்வாதுமலையில், கிறிஸ்தவப் பாதிரியாரால் கடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட சிறுமி, சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டிருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த 45 வயதான கிறிஸ்தவ பாதிரியாரான ஜெயராஜ் என்பவர், ஜவ்வாதுமலை பெருங்காட்டூர் கிராமத்தில் தங்கி மதபோதனைகளைச் செய்துவந்திருக்கிறார். அங்கு வசிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாலை நேரத்தில் டியூஷனும் எடுத்திருக்கிறார். இந்தநிலையில், பாதிரியார் ஜெயராஜிடம் டியூஷன் சென்ற 13 வயது சிறுமி கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி திடீரென மாயமானார். அதே சமயம், பாதிரியாரையும் காணவில்லை.

மாணவியை மூளைச்சலவை செய்து பாதிரியார் கடத்திச் சென்றுவிட்டதாக மாணவியின் தந்தை ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். தனிப்படையும் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. இதற்கிடையே, திருவண்ணாமலையிலுள்ள தனது சகோதரி பரிமளாசெல்வியின் வீட்டில் மாணவியுடன் பாதிரியார் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு விரைவதற்குள் மாணவியுடன் பாதிரியார் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பாதிரியாரின் சகோதரியைக் கைதுசெய்த போலீஸார், நீதிமன்றக் காவலில் அவரைச் சிறையில் அடைத்தனர். அதன் பின்னரும் பாதிரியாரைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியாரின் சகோதரி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டன. இதையறிந்த பாதிரியார் ஜெயராஜ் சகோதரியைக் காப்பாற்றுவதற்காக மாணவியை நேற்று முன்தினம் பெருங்காட்டூர் மலைக் கிராமத்துக்கு அழைத்துவந்து விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.

இதையறிந்த போலீஸார், அந்த கிராமத்துக்குச் சென்று, மாணவியை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரணையில்,``பாதிரியார் தன்னை கடத்திச் செல்லவில்லை. பெங்களூருவிலுள்ள அரசுக் காப்பகத்தில் சேர்ப்பதற்காகத்தான் தன்னை அவர் அழைத்துச் சென்றார்’’ என்று சிறுமி கூறியிருக்கிறார்.
இருந்தபோதும், ``சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? பாதிரியாரின் மிரட்டலுக்குப் பயந்து இப்படி பொய் சொல்கிறாரா?’’ என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் பாதிரியார் ஜெயராஜையும் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். பாதிரியார் ஜெயராஜ் மீது ஏற்கெனவே கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், போக்சோ பிரிவிலும் வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.