விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீ. இவருடைய மனைவி கலைச்செல்வி. இந்தத் தம்பதிக்கு கோவர்த்தனன், கௌதமன் என இரண்டு மகன்கள். இந்தத் தம்பதி, தங்கள் மூத்த மகன் கோவர்த்தனனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துவைத்தனர். பின்னர், கடந்த 2019-ம் ஆண்டு தங்களுடைய இளைய மகன் கௌதமனுக்கும் திருமணம் முடிப்பதற்காக ஏற்பாடுகளைச் செய்துவந்திருக்கின்றனர். திருமணத்துக்குக் குறைந்த நாள்களே இருந்த நிலையில், 2019-ம் ஆண்டு, மே 14-ம் தேதி இரவு ராஜீ, அவரின் மனைவி கலைச்செல்வி, இளையமகன் கௌதமன் ஆகியோர் ஒரே அறையில் உறங்கியிருக்கின்றனர்.
அப்போது, அதிகாலை சுமார் 3 மணி அளவில் அவர்கள் உறங்கிய அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். போலீஸார் விசாரணையில், ஏ.சி வெடித்து மூவரும் உயிரிழந்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்திருந்தார் ராஜீயின் மூத்த மகன் கோவர்தனன். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர் திண்டிவனம் காவல்துறையினர்.
போலீஸாரின் விசாரணையின்போது, ஏ.சி வெடித்து மூவரும் இறந்துகிடந்ததாகக் கூறப்பட்ட அறையில், ரத்தம் வழிந்தோடியதும், விபத்து நடந்த வீட்டில் மூத்த மகன் கோவர்த்தனனின் அறையில் பெட்ரோல் பாட்டில்கள் இருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து, 'தீ விபத்தா அல்லது சொத்துக்காக மூவரும் கொலை கொலைசெய்யப்பட்டார்களா?' என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். கோவர்த்தனனிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்திருக்கிறார். பெற்றோர், சகோதரன் இறந்த பின்னர் ஆம்புலன்ஸுக்கு போன் செய்த கோவர்த்தனன், 'யாரோ தனது பெற்றோரை வெட்டிவிட்டதாக' முதலில் கூறியிருக்கிறார். பின்னர் போலீஸாரிடத்தில் ஏ.சி வெடித்து இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், உயிரிழந்த கலைச்செல்வியின் சகோதரர் ஜெய்சங்கர், தனது மாமாவின் கழுத்தில் வெட்டுக் காயம் இருந்ததாகவும், மூவரின் மரணத்திலும் தனக்குச் சந்தேகம் இருப்பதாகவும் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களும் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, கோவர்த்தனன், அவர் மனைவி தீபா காயத்ரி ஆகியோரிடம் போலீஸார் தனித் தனியாக கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில், இருவரும் சொத்துக்காக மூவரையும் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, இந்த வழக்கு வெடிகுண்டு வழக்கு விசாரிக்கும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. போலீஸார் தரப்பில் விபத்து அல்ல கொலை என நிரூபிக்கப்பட்ட நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோவர்த்தனன், அவர் மனைவி தீபா காயத்ரி இருவருக்கும் தலா 4 தூக்கு, 2 ஆயுள் தண்டனை மற்றும் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடிகாட்டியிருக்கிறது.