தஞ்சாவூர் அருகே பட்டதாரி இளைஞர் ஒருவர், ` இந்தச் சமூகத்தில் சாதி, மதம்தான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அதில் எனக்கு நம்பிக்கையில்லை' என உருக்கமாக ஆங்கிலத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள திருக்கானூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பென்கர் என்ற இளைஞர் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்திருக்கிறார். இவருடைய அம்மா அருள் சகாயராணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், ஆங்கிலத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு பென்கர், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பென்கர் எழுதிய கடிதத்தில், `அம்மா! நீங்கள் என்னை வளர்ப்பதற்கு எதிர்கொண்ட பிரச்னைகள், நீங்கள் எடுத்த முயற்சிகளை நான் நன்கு அறிவேன். என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தெரியும். கடவுள் இருக்கிறார் என்பதை நான் எந்த வகையிலும் நம்பவில்லை என்பதை தர்க்கரீதியான மற்றும் உணர்வு நிறைந்த முழு உண்மைகளை மட்டுமே நான் நம்பினேன். குறைந்தபட்சம் நீங்கள் என்னைப் புரிந்துகொள்ள முயல்வீர்கள்.
இந்தச் சமூகம் சாதி, மதம் பார்ப்பதால் நீங்களும் உங்கள் சொந்த மகனின் மகிழ்ச்சியைப் பார்க்கவில்லை. என் தரப்பை விளக்குவதற்குக்கூட எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. நான் ஓட விரும்பவில்லை. நான் எடுத்த மருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு உள்உறுப்புகளையும் சேதப்படுத்தும். எனவே, எஞ்சியதைப் மற்றவர்கள் பயன்பெற தானம் செய்யவும். கண்கள் இதனால் பாதிக்கப்படாது. எனவே, தேவைப்பட்டால் கண்களை நன்கொடையாக அளியுங்கள்.
நான் வழக்கமாக ரத்ததானம் செய்து வந்தேன். நான் ஒருபோதும் குடித்ததில்லை, புகைபிடித்ததில்லை. எனவே, என் உடலிலிருந்து தானம் செய்யக்கூடிய எதையும் பயன்படுத்த தயங்காதீர்கள். எஞ்சியவை மின்சார கல்லறையில் சாம்பலாக இருக்க வேண்டும். எனது கடைசி ஆசையாவது நிறைவேறும் என்று நம்புகிறேன்' எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``பென்கர் எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடியவன். அவனுக்கு சாதி, மதம் என்ற அடையாளம் பிடிக்காது. மற்றவர்கள் அதைப் பார்ப்பதும் பிடிக்காது. இந்தச் சமூகத்தில் சாதி மதம்தான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது, மனிதனை பார்ப்பதில்லை என நண்பர்களிடத்தில் அடிக்கடி புலம்புவான்.
இந்த நிலையில் அவன் பயின்ற கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் உள்ள நுட்பத்தைப் பயன்படுத்தி அவனே வேதிப்பொருள் கலந்து தற்கொலை செய்துகொண்டுள்ளான். அவனது இழப்பைத் தாங்க முடியாமல் அவனது அம்மா தவித்ததைப் பார்க்கும்போது, மிகவும் கஷ்டமாக இருந்தது" என வேதனைப்பட்டனர்.