இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் உணவுப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க முடியாமல் இந்தியாவுக்கு அகதிகளாக நுழையும் இலங்கை மக்களையும் பார்த்து வருகிறோம். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜா மான்சிங் மற்றும் அவர் நடத்தும் தாகம் ஃபவுண்டேஷன் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டச் சென்றுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுகுறித்து அவரிடம் பேசினோம். ``உணவுத் தட்டுப்பாடு, 13 மணி நேர மின்வெட்டு, பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு முதலிய சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். பலரும் வேலை இழந்துள்ளனர். அந்நிய செலவாணிப் பற்றாக்குறை இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதியைப் பெரிதளவு பாதித்துள்ளது. மக்கள் தெருவுக்கு வந்து போராடுகின்றனர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்தியாவுக்குத் தப்பி வர மக்கள் பலரும் முயலும் அளவு அங்கு சூழல் மோசமாக உள்ளது. அங்குள்ள மக்கள் திடீரென இயற்கை விவசாயத்துக்கு மாறியதால் உற்பத்தி குறைந்து, உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையின் நிலைமையைப் புரிந்துகொள்ள எங்கள் அறக்கட்டளை சார்பில் பத்து நாள்கள் இலங்கை முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். பசியில் வாடும் மக்கள் அதிகம் உள்ள `ஹங்கர் ஸ்பாட்ஸ்' எனப்படும் இடங்களைக் கண்டறியவே இந்தப் பத்து நாள் பயணம்.

மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடங்களையும் கஷ்ட்டபட்டு கடந்துதான் பயணித்தோம். ஹங்கர் ஸ்பாட்ஸை கண்டறிந்து அவ்விடங்களில் உள்ள மக்களுக்கு உணவளிப்பதுதான் எங்கள் திட்டம். இந்தப் பத்து நாள் பயணத்தின்போதே மக்கள் பலருக்கும் சமையல் பொருள்கள் அடங்கிய கிட்களை விநியோகித்தோம். போரால் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் உணவு கிட்களைக் கண்ணீரோடு பெற்றுச் சென்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளும்போது கண் கலங்கியவர்களைப் பார்த்தபோது பசியில் அவர்கள் எவ்வளவு தூரம் வாடியிருப்பார்கள் என்பது புரிந்தது. இங்குள்ளவர்களுக்கு உதவுவதே தற்போது எங்கள் நோக்கம். அதனால் இப்போது இந்தியா திரும்பும் திட்டம் இல்லை. இலங்கை மக்களுக்கு சமையல் செய்ய எரிவாயு, சமையல் பொருள்கள் உள்ளிட்டவை முக்கியமாகத் தேவைப்படுகின்றன. மருந்துப் பொருள்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும்.

இந்தியாவில் ஒருவருக்கான நல்ல சாப்பாட்டை 25 ரூபாய்க்குத் தயார்செய்துவிடலாம். இங்கு கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 80 ரூபாய் ஆகிறது. சமையலுக்குத் தேவையான எல்.பி.ஜி எரிவாயு, பிற பொருள்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. பத்து நாள் பயணத்தில் மட்டும் பத்து லட்சம் ரூபாய் செலவில் உணவுப் பொருள்கள் விநியோகித்துள்ளோம்.
இனியும் தொடர்ந்து இலங்கையில் உணவு விநியோகம் செய்ய மாதம் கிட்டத்தட்ட 50 லட்சம் வரை தேவைப்படலாம். இது குறைந்தபட்ச கணிப்புதான். இலங்கையில் உள்ள பிற அறக்கட்டளைகளுடன் இணைந்தும் செயல்படவிருக்கிறோம்.
நிலைமை சீராகும் வரை மட்டுமல்லாது இங்கேயே தங்கியிருந்து தொடர்ந்து பணியாற்றவும் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார். ராஜா மான்சிங் பெங்களூரில் சட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். அறக்கட்டளைத் தொடங்கிய ஆரம்பத்தில் வீடில்லாதவர்களுக்கு வாரம் ஒருமுறை உணவளித்து வந்தவர், பின்பு தினசரி உணவு விநியோகிக்கத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் தனி மனிதராக இந்தப் பணியைச் செய்துவந்தார் ராஜா. இப்போது 5,000 பேரோடு வளர்ந்து நிற்கிறது இவரது தாகம் ஃபவுண்டேஷன். சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வீடில்லாதவர்கள் பலருக்கும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பலருக்கு உணவும், மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களும் பெற்றத் தந்துள்ளனர். இந்த அறக்கட்டளை கிரவுடு ஃபண்டிங் முறையில் இணையத்தின் வழியாக நிதி திரட்டி சேவைகளைச் செய்து வருகிறது.