தமிழ்நாட்டையே அதிரவைத்த கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை எனப் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கோயில் திருவிழா நடந்துகொண்டிருந்தது. அப்போது முன்விரோதத்தில் கச்சநத்ததுக்குள் புகுந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த கும்பல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளைச் சேதப்படுத்தி, அவர்கள்மீது அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவர் கொலைசெய்யப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்தப் படுகொலைச் சம்பவத்துக்கு நியாயம் கேட்டு பல்வேறு அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தின. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டவர்கள் மதுரையில் நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஸ் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். சிவகங்கை எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்தது. இடையில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் உயிரிழந்தனர். மூன்று சிறுவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
வழக்கு விசாரணைகள் முடிந்த நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி முத்துக்குமரன்,

தண்டனை விவரத்தை 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து, பின்பு 5 -ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். இந்த நிலையில் இன்று குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் ஆயுள்தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.