`மாணவர்கள் பள்ளிகளிலேயே கஞ்சாவுக்கும் மதுவுக்கும் அடிமையாகும் சூழல்!’- நீதிமன்றம் வேதனை
`தமிழக அரசின் வேலை வாய்ப்புகளுக்கே, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பது இல்லை. தமிழகத்தில் பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சாவுக்கும் மதுவுக்கும் அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது.’
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,``தமிழகத்தில் நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற தேர்வுகளுக்கு பல்வேறு பயிற்சி மையங்கள் இருக்கின்றன. ஆனால், பொறியியல் படிப்பு மற்றும் மருத்துவம் படிப்பைத் தவிர பிற மேற்படிப்பைத் தேர்வுசெய்ய விரும்பும் மாணவர்களுக்கு அது தொடர்பான வழிகாட்டல்களை வழங்க, போதுமான வாய்ப்புகள் இல்லை.

எனவே, நமது மாநிலத்தில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிற துறை உயர்கல்வி தொடர்பான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் குறித்தும், அதற்கான பயிற்சி அளிப்பதற்கும் பயிற்சி மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, தமிழகத்திலுள்ள மாணவர்களுக்கு பிற துறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை. தமிழக அரசின் வேலை வாய்ப்புகளுக்கே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பதில்லை. தமிழகத்தில் பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சாவுக்கும் மதுவுக்கும் அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது.
ஒரு காலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகப் பலரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த நிலையில், தற்போது விண்ணப்பிப்பதுகூட இல்லை. அரசு மட்டுமல்ல... அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தலாம். வாக்குக்காக அல்ல... வருங்கால தலைமுறையினர், வாய்ப்புகளைப் பயன்படுத்த அவர்களை உருவாக்கும் பணியிலும் அரசியல் கட்சிகள் ஈடுபட வேண்டும்’ என கருத்து தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.