கடந்த சில நாள்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதத்திற்கு வந்த பொதுநல வழக்கு ஒன்றில் கருத்து கூறிய நீதிபதிகள், திருமணத்திற்குப் பின்பு கணவன், மனைவியின் அனுமதியின்றி கட்டாய உறவுகொள்வதை Marital rape ஆகக் கருதுவது பற்றி ஆலோசித்தனர். அதை சட்டப்படி குற்றமாக்குவது குறித்து சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது பற்றியும் கூறியிருந்தனர். இது ஆண்கள் மத்தியில் கடும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், சமூக வலைதளங்களில் திருமணத்தை புறக்கணிக்கும் #MarriageStrike என்ற ஹேஷ்டேக் ஆண்களால் டிரெண்ட் செய்யப்பட்டது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனைத் தொடர்ந்து, இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தன் பதிலைச் சமர்ப்பித்திருக்கிறது மத்திய அரசு. அதில், ``பல மேற்கத்திய நாடுகளும் `மெரைட்டல் ரேப்' என்பதை குற்றமாக்கியுள்ளன. ஆனால் அதற்காக இந்தியாவும் கண்ணை மூடிக்கொண்டு அதைப் பின்பற்ற வேண்டும் என்பது இல்லை. இந்தியாவில் இருக்கும் பிரச்னைகளில், படிப்பறிவின்மை, பெரும்பாலான பெண்களின் பொருளாதார சுயசார்பின்மை, சமூக மனப்பான்மை, வறுமை எனப் பல காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. Marital rape-ஐ குற்றம் ஆக்குவதற்கு முன்னர், இவை எல்லாம் கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டும்.
Marital rape குறித்து எந்தவொரு சட்டத்திலும் வரையறுக்கப்படவில்லை. IPC-யின் 375-வது பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், Marital rape பற்றிய வரையறைக்கு சமூகத்தில் பரந்த அளவில் கருத்துக்கேட்பு நடக்க வேண்டும். Marital rape-ஐ குற்றமாக்குவதற்கு முன்னர், எது Marital rape, எது Marital rape அல்ல என்பது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்.
பாலியல் வன்கொடுமையைப் பொறுத்தவரை, உடலில் உள்ள காயங்கள், குறிப்பாக மார்பு, பெண் உறுப்பில் உள்ள காயங்கள் மருத்துவ ஆதாரங்களாகக் கொள்ளப்படும். ஆனால், Marital rape புகாரில் இதுபோன்ற ஆதாரங்கள் சாத்தியமில்லாமல் போகும்'' என்று மத்திய அரசு கடிதத்தில் தெரிவித்துள்ளது.

தன் நிலைப்பாட்டை இப்படி எடுத்துரைத்துள்ள மத்திய அரசு, இது குறித்து நீதிமன்றத்தில் இன்னும் வாதிடவில்லை. இக்கடிதம் குறித்து கூறியுள்ள சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் `ஆக்கபூர்வமான அணுகுமுறை'யை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்வது குறித்து பல அதிகாரிகளிடமிருந்து பரிந்துரைகளை கோரியுள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், Marital rape-ஐ குற்றமாக்குவதில் குடும்பப் பிரச்னைகள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், பெண்ணின் கண்ணியத்தை உள்ளடக்கிய இந்தப் பிரச்னையை குறுகிய பார்வையில் அணுகக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.