ஏமாற்றி திருமணம் செய்தவரிடமிருந்து விவாகரத்துப் பெற என்ன செய்ய வேண்டும்?! #DoubtOfCommonMan

ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பும், ஓர் ஆணுக்கு 21 வயதுக்கு முன்பும் நடைபெறும் சட்டத்துக்குப் புறம்பான திருமணங்கள், அந்த நிமிடத்திலிருந்தே `செல்லாத் திருமண’மாகத்தான் (null and void) கருதப்படும்.
"என் கணவர் தீவிரமான மனநல பிரச்னையில் இருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் எனக்குத் திருமணமானது. திருமணத்துக்கு முன்பு, என் கணவருக்கு இருக்கும் மனநலப் பிரச்னை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது பிரச்னை தீவிரமாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். திருமணத்துக்கு முன்பே கணவருக்கு இப்பிரச்னை இருந்தும், அதை என்னிடம் மறைத்திருக்கிறார்கள். நான் விவாகரத்து கோரி வழக்குத் தொடுக்கமுடியுமா?" என விகடனின் #DoubtOfCommonMan பகுதியின் மூலம் கேட்டிருந்தார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு வாசகி.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசினோம்.
`திருமண முறிவு'க்கும், `செல்லாத திருமண'த்துக்கும் என்ன வித்தியாசம்?

கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழ விரும்பாமல் பரஸ்பரமாக அல்லது அவர்களில் ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் விவாகரத்து கோரலாம். ஆனால், திருமணமாகி ஓராண்டுக்குப் பிறகுதான் விவாகரத்து பெறமுடியும். `திருமண முறிவு' எனப்படும் இம்முறை, அனைத்து மதத்தினருக்குமான திருமணச் சட்டத்திற்கும் பொருந்தும்.
சட்டபூர்வமான வயதில் திருமணம் செய்த கணவன் அல்லது மனைவிக்கு, பெரிய உடல்ரீதியான மருத்துவப் பிரச்னை அல்லது மன ரீதியான பிரச்னை அல்லது முன்பு இன்னொரு திருமணம் செய்து அதை மறைத்திருப்பது அல்லது இருவரும் இணைந்து வாழ முடியாத அளவுக்கு ஏதாவதொரு பிரச்னை இருப்பது தெரியவருகிறது. மறைக்கப்பட்ட விஷயம், தனக்கு இழைக்கப்பட்ட பெரிய அநீதியாகவோ அல்லது தன் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடியது என்றோ கருதினால் மனுதாரர் விவாகரத்து கேட்டு வழக்குத் தொடுக்கலாம். இவ்விஷயத்தில் மனுதாரர் தரப்பில் நியாயம் இருந்தால், சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கும். இதற்கு `செல்லாத திருமணம்’ (nullity) என்று பெயர்.
மறைக்கப்பட்ட விஷயம், தனக்கு இழைக்கப்பட்ட பெரிய அநீதியாகவோ அல்லது தன் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடியது என்றோ கருதினால் மனுதாரர் விவாகரத்து கேட்டு வழக்குத் தொடுக்கலாம்.வழக்கறிஞர் அஜிதா
ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பும், ஓர் ஆணுக்கு 21 வயதுக்கு முன்பும் நடைபெறும் சட்டத்துக்குப் புறம்பான திருமணங்கள், அந்த நிமிடத்திலிருந்தே `செல்லாத் திருமண’மாகத்தான் (null and void) கருதப்படும்.
சட்டம் சொல்வது என்ன?

ஓர் ஆணோ அல்லது பெண்ணோ தனக்கிருக்கும் பெரிய பிரச்னையை வாழ்க்கைத் துணையிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் திருமணம் செய்திருக்கிறாரெனில், திருமணத்துக்குப் பிறகு அவ்விஷயம் தெரியவந்து, அவருடன் மேற்கொண்டு சேர்ந்து வாழ விரும்பவில்லை எனில். திருமணமாகி ஓராண்டுக்குள்ளாகியிருந்தாலும்கூட, `செல்லாத திருமண' முறையில் விவாகரத்துப் பெற வழக்குத் தொடுக்கலாம்.
அல்லது, மறைக்கப்பட்ட விஷயம் தெரிந்த உடனேயே விவாகரத்து வழக்கைத் தொடுக்கலாம். இவ்விஷயத்தில் தன் வாழ்க்கைத் துணை மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் மீது வழக்குத் தொடுக்கமுடியாது. மனுதாரர் சார்பில் அவரது பெற்றோர்/பாதுகாவலர் மீது வழக்குத் தொடுக்கலாம். வாழ்க்கைத் துணை மீது நாம் சுமத்தும் குற்றச்சாட்டு உண்மையெனில், அதற்கு உரிய மருத்துவர்களின் அறிக்கை உள்ளிட்ட வலுவான பிற ஆவணங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால், விரைவில் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கும்.
மன்னித்தோ அல்லது சகித்துக்கொண்டோ அவருடன் சில காலம் குடும்பம் நடத்திவிட்டு, பிறகு அந்தப் பிரச்னையை காரணமாகச் சொல்லி விவாகரத்து கேட்டால் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது.வழக்கறிஞர் அஜிதா
பெரிய விஷயத்தை கணவனோ அல்லது மனைவியோ மறைத்துத் திருமணம் செய்துகொண்டிருக்கலாம். திருமணத்துக்குப் பிறகு அப்பிரச்னை குறித்து தன் வாழ்க்கைத் துணையிடம் சொல்லிவிட்டார் என வைத்துக்கொள்வோம். அதன் பிறகு அவரை மன்னித்தோ அல்லது சகித்துக்கொண்டோ அவருடன் சில காலம் குடும்பம் நடத்திவிட்டு, பிறகு அந்தப் பிரச்னையை காரணமாகச் சொல்லி விவாகரத்து கேட்டால் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது.
எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது?

பெண்களுக்கு: திருமணமான ஊரில் அல்லது மனுதாரர் வாழும்/வாழ்ந்த ஊரில் அல்லது கடைசியாக கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து வாழ்ந்த ஊரிலுள்ள ஏதாவதொரு சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்.
ஆண்களுக்கு: எதிர்தரப்பினர் (மனைவி) வாழும் ஊர் அல்லது கணவன் - மனைவி இருவரும் கடைசியாக சேர்ந்து வாழ்ந்த ஊர் அல்லது திருமணமான ஊரிலுள்ள ஏதாவதொரு சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்.
தீர்ப்பு எப்போது கிடைக்கும்?
தங்கள் மீது தவறு இருக்கும்பட்சத்தில், அதை எதிர்த் தரப்பினர் உடனடியாக ஒப்புக்கொண்டால் அல்லது இரண்டு தரப்பினரும் சுமுகமாக ஒத்துப்போனால், விவாகரத்து வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்.வழக்கறிஞர் அஜிதா
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை எனில், அவர்கள் தரப்பில் குற்றமில்லை என்பதை நிரூபிக்க நீதிமன்றம் கால அவகாசம் வழங்கும். அதனால் கவுன்சிலிங், எதிர்தரப்பு மற்றும் வழக்குத் தொடுத்தவர்களின் விளக்கங்கள் எல்லாவற்றையும் பரீசிலித்து தீர்ப்பு கிடைக்க காலதாமதம் ஆகும்.
ஜீவனாம்சம் பெற முடியுமா?

இவ்விஷயத்தில் வழக்குத் தொடர்ந்தவர் பெண்ணாக இருக்கும்பட்சத்தில், வழக்கு முடியும்வரை தன் கணவரிடமிருந்து மாதம்தோறும் குறிப்பிட்டத் தொகையை ஜீவனாம்சமாகக் கேட்கலாம்.
வழக்குத் தொடுத்த பெண்ணுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டால், அத்தருணத்தில் ஒட்டுமொத்த இழப்பீடாகவும் (ஒருமுறை) முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறலாம்.

இதுபோன்று உங்களுக்கு எழும் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். பதிலைச் சொல்ல காத்திருக்கிறோம்.