திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

தெய்வ முத்திரைகள்! - ஆதி முத்திரை

தெய்வ முத்திரைகள்! - ஆதி முத்திரை
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வ முத்திரைகள்! - ஆதி முத்திரை

தெய்வ முத்திரைகள்! - ஆதி முத்திரை

‘‘பிறவிப் பெருங்கடலைக் கடந்து, இறைத்திருவடியாகிய முக்திப் பேற்றை அடைவதே மனிதராகப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். இந்தக் கலியுகத்தில் ஞானப் பயணம் கடின மானதுதான். ஆனால், தெய்வ முத்திரைகளுடன் கூடிய பயணத்தால் ஞானமும், ஆரோக்கியமும் எளிதில் கிடைக்கும் என்பது திண்ணம்’’ என்கிறார், வர்மக்கலை மற்றும் சித்த மருத்துவரான மெய்வழி கல்பனா.

‘‘இந்த நெடுவிரிபுவனம், ஆதியை முதலாகக் கொண்டது. ஒரு புள்ளியிலிருந்து விரிந்து அண்ட சராசரங்களாய் உருவானது. பஞ்சபூதங்களும் ஒவ்வொரு விகிதாசாரத்தில் கலந்து, அண்டமும் பிண்டமுமாகிய நம் உடல்கள் படைக்கப்பட்டன.

உடலுறுப்புகளில் கைகளுக்கு, அதிலும் கை விரல்களுக்கு அதீத முக்கியத்துவம் உண்டு. நம் கையில் நெருப்பு- கட்டை விரலாகவும், காற்று- ஆட்காட்டி விரலாகவும், ஆகாயம்- நடுவிரலாகவும், மண்- மோதிர விரலாகவும், நீர்- சுண்டு விரலாகவும் அமைந்துள்ளன. ஆக, பஞ்ச பூதங்களை அடக்கும் சக்தி நம் கைவிரல்களிலே உள்ளது. இதனால் நமது உடல் மற்றும் உள்ளத்தை ஆரோக்கியத்துடன் வாழ வைக்க, நம் கைவிரல்களே நமக்கு மருத்துவராக மாற முடியும்’’ எனக் கூறும் மெய்வழி கல்பனா, முத்திரைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றின் பலன்களையும், இந்த இதழ் முதல்  நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

தெய்வ முத்திரைகள்! - ஆதி முத்திரை

வாய்மொழி தொடங்குமுன் கைகளால் காட்டப்படும் சைகையே முதல் மொழியாக இருந்தது. கைகளில் செய்யப்படும் முத்திரைகள் தந்திர யோகத்தின் ஒரு பகுதியாகும். தந்திரம் என்பது தன் + திறம். அதாவது, தனது திறத்தால் கடினமானவற்றையும் எளிமையாகச் செய்து முடிப்பது. அத்துடன் மந்திரமும் சேர்ந்துகொண்டால், பலன்கள் இரட்டிப்பாகும்.

தெய்வங்களைத் தரிசிக்கும்போது, அந்த தெய்வ உருவங்கள் காட்டும் கை முத்திரைகளை நாம் என்றேனும் கவனித்திருக்கிறோமோ? கவனித்திருந்தால், அந்த முத்திரைகளின் மகத்துவமும் நமக்கு உணர்த்தப்பட்டிருக்கும். அத்தகைய தெய்வ முத்திரைகளில் முதன்மை யானது ஆதி முத்திரை.

தாயின் கருவறைக்குள் இருக்கும்போதே இம்முத்திரையை செய்யத் தொடங்கிவிடுகிறோம் என்பதால் இது ஆதி முத்திரை எனப்படுகிறது. குழந்தை பிறந்து சில நாட்கள் வரையிலும்கூட இம்முத்திரையைச் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

எப்படிச் செய்வது?: அமைதியான, வெளிச்சம் இல்லாத ஓர் அறையில் கண்களை மூடி, விரிப்பின் மீது சம்மணம் இட்டு, முதுகுத்தண்டு நிமிர்ந்திருக்கும்படி நேராக அமர்ந்து, வெறும் வயிற்றுடன், இரு வேளையும் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.

கட்டை விரலை மடக்கி, அதன் நுனியை சுண்டு விரலின் அடிமேட்டில் வைக்கவும். மீதமுள்ள நான்கு விரல்களால் கட்டை விரலைச் சுற்றிப் பிடித்து மடக்கவும். இதுவே ஆதி முத்திரை. இப்படியே பத்து நிமிடங்கள் வரை இருக்கவும். அதன் பிறகு, கையில் உள்ள ஆதி முத்திரையை விலக்காமல், ‘ம்ம்ம்’  என்ற ஒலியோடு மூச்சை மெதுவாக வெளிவிட வேண்டும். இப்படியே ஒன்பது முறை செய்ய வேண்டும். ஆதி முத்திரையை இரண்டு கைகளிலும் பிடித்திருப்பது அவசியம்.

பலன்கள்: இறை உணர்வோடு கலந்து தியானத்தில் அமர, இந்த முத்திரை பயன்படும்; ஐம்புலன்களுக் கான கதவுகளை அடைத்து, ஞானக் கண் திறக்க உதவும்.

கருவறையில் இருக்கும் வரை சிசுவின் ஐம்புலன்களுக்கு வேலை இல்லை. கருவறையிலிருந்து வெளிவந்த பின்பு ஐம்புலன்களை நம்மால் அடக்க முடியாது. ஆதி முத்திரையைச் செய்யும்போது, இயல்பாகவே நமது ஐம்புலன் களும் அடங்கி, நமக்குத் தேவையான தவ நிலையின் நன்மைகளை அளிப்பதை உணரலாம்.

காரணமற்ற பயம், நடுக்கம், படபடப்பு, கவலை ஆகியவை நீங்கும். தலைக்கு ரத்த ஒட்டம் அதிகமாகி, மூளை சுறுசுறுப்படையும். அதிர்ஷ்டம் பெருகும். பத்து வித வாயுக்களில் மிக முக்கியமான உதான வாயுவை தூண்டச் செய்து, தவநிலையை மேம்படுத்தும்.

குழப்பம் மற்றும் வீண் சிந்தனைகள் விலகி, இறைபொருள் நமக்குள்ளே இருப்பது போன்ற உணர்வைப் பெற முடியும். மேலும், நவகிரகங் களின் பிடியிலிருந்து நிரந்தரமாகத் தப்பிக்க இம் முத்திரையை நாள்தோறும் செய்து வரலாம்.

- முத்திரை பதிப்போம்...

தொகுப்பு: ப்ரீத்தி, படம்: ஜெ.வேங்கடராஜ்