
உதவலாம் வாருங்கள்!
கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை-கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களின் வினாக்களுக்கு வாசகர்களே இருந்தே பதில் பெறப்போகிறார்கள் என்பதுதான். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம் வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். அத்துடன், சக்தி விகடனின் ‘உதவலாம் வாருங்கள்’ முகநூல் பக்கத்திலும் தங்களது சந்தேகங்களை பகிரலாம்.

பெளர்ணமி பூஜை எப்படி செய்யவேண்டும்? பாராயணம் செய்வதற்கு உரிய தமிழ் மந்திரங்கள் பாடல்கள் என்ன இருக்கின்றன? இதைப் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகம் வாசகர்களிடம் இருந்தால் தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
- கை.கணேசமூர்த்தி, கீழப்புலியூர்
கோத்திரங்கள் 64-க்கும் உண்டான ரிஷிகள் யார் யார், அவர்களுக்கு உரிய கோயில்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பது போன்ற விவரங்கள் அடங்கிய புத்தகம் பற்றி சக்தி விகடன் வாசகர்கள் தெரிவித்தால் வாங்கிப் படிக்க உதவியாக இருக்கும்.
- கே.என்.சுந்தர்லால், மதுரை-20
பாலதிரிபுரசுந்தரி தீப ஸ்தோத்திரம் மற்றும் நமஸ்கார பூஜை முறை புத்தகம் தேவைப்படுகிறது. யாரிடமேனும் இருந்தால் தகவல் தெரிவிக்கவும்.
- ஜி.வளர்மதி, கிருஷ்ணகிரி. லெட்சுமி சிவானந்தன், கோவை
சிவாலயங்களில் பாடப்படும் பஞ்ச புராணம் பற்றிய புத்தகம் யாரிடமேனும் இருந்தால் தந்து உதவுங்களேன்.
- கிருஷ்ணன், நெல்லை
ஆகம முறைப்படி தயாரிக்கப்படும் சுத்தமான விபூதி எங்கு கிடைக்கும்? விலாசம் தெரிந்தால் தகவல் தெரிக்கவும்.
- ஆனந்தலிங்கம், தூத்துக்குடி
வீட்டில் விளக்கு பூஜை செய்யலாமா? எப்படி செய்யவேண்டும்? அதற்கு வழிகாட்டும் வகையில் ஏதேனும் புத்தகம் உள்ளதா? விவரம் தெரிந்தவர்கள் கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.
- ஜி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை-93
நவகிரக அஷ்டோத்திர நாமாவளி பாராயணம் செய்து வருகின்றேன். எனக்கு தமிழ் அர்த்தத்துடன் கூடிய புத்தகம் தேவைப்படுகிறது. தகவல் தெரிவித்து உதவினால் அர்த்தம் உணர்ந்து பாராயணம் செய்ய உதவியாக இருக்கும்.
- கே.குணசேகரன், சேலம்-3
உதவிக்கரம் நீட்டியவர்கள்
சக்தி விகடன் 29.3.16 தேதியிட்ட ‘உதவலாம் வாருங்கள்’ பகுதியில் எஸ்.லோகேஸ் என்பவர் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் தமிழ் அர்த்தத்துடன் கேட்டு இருந்தார். அதற்கு சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த ஜி.கிருஷ்ணமூர்த்தி, சேலம் வாசகர் கே.குணசேகரன் ஆகியோர், ’ஸ்ரீலலிதா’ (லலிதா ஸஹஸ்ர நாமம்-விளக்கவுரை) என்ற பெயரில் டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய புத்தகம் கிரி டிரேடிங் ஏஜென்சியில் கிடைக்கிறது என்ற தகவலைத் தந்துள்ளார்கள்.
** சக்தி விகடன் 16.2.16 இதழில் ‘ஸ்ரீராகவேந்திர ஸ்தோத்திர மாலா’ எனும் புத்தகம் தேவைப்படுவதாக காரைக்காலைச் சேர்ந்த வாசகர் வைத்தியநாதசாமி கேட்டிருந்தார். அவருக்கு வாசகர்கள் திருச்சி சரோஜா சுதர்சன் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த வாசகர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் அனுப்பிய புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மும்பையைச் சேர்ந்த வாசகர் வி.இராமமூர்த்தி, ‘ஸ்ரீராகவேந்திர ஸ்தோத்திரமாலை’ எனும் புத்தகம், ஸ்ரீராகவேந்திர நிலையம், 23, கங்கையம்மன் கோயில் லேன், ராயப்பேட்டை, சென்னை-14 என்ற முகவரியில் கிடைக்கும் என்று தகவல் அனுப்பியுள்ளார்.

* சக்தி விகடன் 16.2.16 தேதியிட்ட இதழில் ‘தேவாரத் திருத்தலங்கள்’ புத்தகம் பற்றி வடலூர் செல்லக்காமு கேட்டிருந்தார். அதைப் படித்துவிட்டு வாசகர் என்.சந்தானம், தன்னை தொடர்புகொண்டால் அவருக்கு உதவுவதாகச் சொல்லியிருந்தார். மேலும் பெங்களூரைச் சேர்ந்த வாசகர் சிவசூரியன் அனுப்பிய ‘பன்னிரு திருமுறை குறுந்திரட்டு’ என்ற நூல் அவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எஸ்.சத்யபாமா என்ற வாசகர் ‘தேவாரத் திருத்தலங்கள் சிவக்களஞ்சியம்’ என்ற புத்தகம் அனுப்பியிருந்தார் அதுவும் அவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் ‘தமிழக சிவத்தலங் கள்’ (சுமார் 3000 கோயில்கள் பற்றிய விவரம் அடங்கியது) - ஆசிரியர் ஜி.ச.முரளி, சோமங்கலம், சதுர பதிப்பகம், சோமங்கலம் அஞ்சல், சென்னை-109 என்ற முகவரியைத் தந்திருக்கிறார், சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்த ஜி.கிருஷ்ணமூர்த்தி என்ற வாசகர்.
** சக்தி விகடன் 29.3.16 தேதியிட்ட இதழில், முருகன் அமர்ந்த நிலையில் தவம் செய்யும் கோலத்தில் இருக்கும் திருக்கோயில் ஏதேனும் தமிழகத்திலோ, வெளி மாநிலங்களிலோ உண்டா என விருத்தாசலத்தைச் சேர்ந்த பி.செல்லபெருமாள் கேட்டிருந்தார்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள வேங்கைவாசல் என்னும் தலத்தில், முருகன் அமர்ந்த நிலையில் தவம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறார். மேலும் விநாயகர் தன் திருக்கரத்தில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது என்று காரைக்குடியைச் சேர்ந்த வாசகர் கே.பத்மகிருஷ்ணன் கூறியிருக்கிறார். மேலும் விவரம் தேவைப்பட்டால், தன்னை 99943 94446 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
வி.ஐ.பி பதில்கள்
? கர்மவினையின் காரணமாக வாரிசு இல்லாமல் ஒருவர் இறந்த பிறகு, அவர்களுக்கு திதி கொடுக்க ஒருவரும் இல்லாத சூழ்நிலையில், இறந்தபிறகு அவர்கள் சொர்க்கம் சென்று விட்டார்கள் எனக் கருதலாமா அல்லது வாரிசுகள் இல்லை என்பதால் மறுஜன்மம் கிடையாது எனக் கருதலாமா?
கர்மவினை, அதிர்ஷ்டம், தெய்வம், தலையெழுத்து, விதி, பிராப்தம், கொடுத்து வைத்தவன், பாவம் பண்ணியவன், புண்ணியம் செய்தவன், பூர்வ புண்ணியம், கிரகக் கோளாறு ஆகிய அத்தனையும் முற்பிறவிகளில் சேமித்த செயல்பாட்டைச் சுட்டிக்காட்டுகின்றன. அதை ‘கர்ம சித்தாந்தம்’ என்கிறது சாஸ்திரம்.

‘மீண்டும் பிறப்பு, மீண்டும் இறப்பு, மீண்டும் கருவறையில் தோன்றுதல்... இப்படி பிறப்பு- இறப்பு எனும் சுழற்சியில் அகப்பட்டுத் தவிக்கிறார்கள்’ என்கிறார் ஆதிசங்கரர் (புனரபி ஜனனம், புனரபி மரணம், புனரபிஜனனீஜடரே சயனம்). அந்தப் பிறப்புக்குக் காரணம் கர்மவினை என்றும் கூறுகிறார். முற்பிறவியில் செய்த செயல்பாடுகளை, அதாவது இன்பம், துன்பம் இரண்டையும் உணர திரும்பவும் ஒரு பிறவி தேவைப்படுகிறது. ஆகையால், சேமித்த செயல்பாட்டை அனுபவிக்க பிறவி எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ‘ஆடைகள் கிழிந்து அல்லது நைந்துபோனால் அதைக் களைந்து புது ஆடைகளை ஏற்போம். ஆடை போன்ற உடல் தளர்ந்துபோனால், அதாவது உடலானது செயல்படும் தகுதியை இழந்துவிட்டால், அதைத் துறந்துவிட்டுப் புது உடலை ஏற்கவேண்டியது வரும்’ என்று கண்ணன் சொல்வான் (வாசாம்சி ஜீர்ணானியதாவிஹாய:....).
இப்படி, முற்பிறவி கர்மவினையானது மீண்டும் ஓர் உடலெடுக்கக் காரணம் ஆகாமல் இருக்கவேண்டும் எனில், கர்மவினையை உருத் தெரியாமல் கரைத்துவிடவேண்டும். அப்போது அதை அனுபவிக்க இடமில்லாததால், மறுபிறவி தேவையற்றுப் போகும். கர்ம வினையைக் கரைக்க ‘தவம்’ ஒன்றே கைகொடுக்கும். நாம் செய்த கர்ம வினையை நாமே செயல்பட்டுத் தவமிருந்து கரைக்கவேண்டும். தவம் என்பது நம்மைப்பொறுத்தவரையிலும் அறவழியில் நடத்தல். தர்மசாஸ்திரம் பரிந்துரைக்கும் அறங்களை முறையே கடைப்பிடித்துவந்தால், கர்மவினை கரைந்துபோகும். மறுபிறவி வாய்க்காது. அப்போது சிராத்தம் குறித்த சிந்தனைக்கே அவசியம் இல்லாமல் போகும்.
திருவிளக்கு நெறிகள்!

வீட்டில் தீபம் ஏற்றும்போது, நெய் தீபம் ஏற்றினால் அனைத்து சுகங்களும் உண்டாகும்: நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் பீடைகள் விலகும்: விளக்கெண்ணெய் தீபம் ஏற்றினால் புகழ், தம்பதி ஒற்றுமை போன்ற பலன்கள் உண்டாகும்:
ஆனால்...
கடன், துன்பம், வறுமை போன்ற அசுப பலன்கள் ஏற்படும் என்பதால் கடலை எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றக்கூடாது
- கே.சக்தி, கோவை