
அருண வசந்தன்

வானுலகின் கற்பகவிருட்சமே பூவுலகில் பனை மரமாகத் திகழ்கிறது என்பார்கள் பெரியோர்கள். மரம், மட்டை, ஓலை, பழம், நுங்கு, பாளை என அதன் ஒவ்வோர் அங்கமும் மக்களுக்குப் பயனுள்ளதாகத் திகழ்வதால், பனையைப் பூலோகத்துக் கற்பக விருட்சம் என்று சிறப்பிக்கிறார்கள்.
திருக்கச்சூரில் பனை மரத்தடியில் அருளும் பிள்ளையாருக்குக் கருக்கடி விநாயகர் என்றே திருப்பெயர். பனைக்கு ‘கருக்கு’ என்றும் ஒரு பெயர் உண்டு.
திருவோத்தூர் தலத்தில் அடியவர் ஒருவருக்காகத் திருஞான சம்பந்தர், பதிகம் பாடி ஆண் பனைகளைப் பெண் பனைகளாக மாற்றியருளிய திருக்கதை நடந்தது. அந்தத் தலத்தின் ஸ்தல விருட்சம் பனை மரமே.
திருப்போரூரில் பனையின் கீழ் எழுந்தருளி, சிதம்பரம் சுவாமிகளுக்கு முருகப்பெருமான் காட்சியளித்ததாகத் தல வரலாறு கூறும். அந்தத் தலத்தில் அருளும் முருகப்பெருமானின் வடிவம் பனை மரத்தாலும் புற்று மண்ணாலும் அமைந்ததென்று கூறுவர்.
பனம் பழத்தைச் சுட்டு உண்பார்கள். தெய்விகத்தன்மை வாய்ந்த பனை மரத்தின் அடியில் எழுந்தருள்வதால் இறைவனுக்குப் பனையப்பன், பனங்காடன் என்றெல்லாம் திருப்பெயர்கள் உண்டு.