
எது துறவறம்?
துறவறத்தின் உண்மையான பொருள் பலருக்குப் புரிவதில்லை. பயிர் வாடியதைப் பார்த்து மனம் வாடிய வள்ளலார், துறவறத்துக்கு மிகச் சிறந்த உதாரணம். அப்படிப்பட்ட மனம் எல்லா துறவிகளுக்கும் வாய்க்குமா? வாய்க்கவேண்டும். அதுதான் அனைத்தையும் ஒருவர் துறந்ததற்கான அடையாளம்!
மாலை நேரம். பகல் முழுக்க வெயிலை பூமிக்கு அனுப்பி மக்களை வறுத்தெடுத்த பெருமையில் சூரியன் வேக வேகமாக மலை முகட்டில் இறங்கிக்கொண்டிருந்தான். அந்த மலையடிவாரத்துக்கு வந்த ஒரு துறவி, நடந்த களைப்புதீர ஒரு பாறையில் அமர்ந்தார். தன் தோளில் சாய்த்திருந்த சுரைக்குடுவையை எடுத்து, கொஞ்சம் நீர் பருகினார். மாலைக் காற்று இதமாக வீச ஆரம்பித்திருந்தது.
சற்று தூரத்திலிருந்து ஓர் ஆட்டு மந்தை அவரிருந்த இடம் நோக்கி வந்துகொண்டிருந்தது. ‘கூட்டமாக சில உயிர்களைப் பார்ப்பதும் அலாதி இன்பம்தானே!’ அந்தத் துறவி புன்னகைத்துக் கொண்டார். மந்தை அவரிருந்த இடம் நோக்கி வந்தபோதுதான் அவர் கவனித்தார். கடைசியாக ஒரு குட்டி ஆடு கால்களைத் தாங்கித் தாங்கி நடந்து வந்துகொண்டிருந்தது. அதன் காலில் ஏதோ அடிபட்டிருப்பதும் தெரிந்தது.
துறவி சட்டென்று எழுந்துகொண்டார். ‘`ஏம்ப்பா... இந்தக் குட்டி ஆட்டுக்கு என்ன ஆச்சு?’’ என்று ஆடு மேய்ப்பவனைக் கேட்டார். ஏனோ அவன் மிகுந்த எரிச்சலில் இருந்தான்... ‘`ஏன்... தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போறே?’’

‘`பாவம்... நடக்க முடியாம நடக்குதே... அதான் கேட்டேன்...’’
‘`இதுக்குக் கொழுப்பு. ஒரு பாறையிலருந்து கீழே விழுந்துடுச்சு...’’ அவன் ஆடுகளை விரட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
‘`நில்லுப்பா. இதாலதான் நடக்கமுடியலையே... நீதான் தோள்லவெச்சு தூக்கிட்டுப் போகலாம்ல?’’
அவன் முறைத்துப் பார்த்துவிட்டுச் சொன்னான். ‘`அவ்வளவு அக்கறையிருந்தா நீ ஊரு வரைக்கும் தூக்கிட்டு வாயேன்...’’ துறவி ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. குட்டி ஆட்டைத் தன் தோளில் தூக்கிக்கொண்டு மந்தையுடன் நடக்க ஆரம்பித்தார்.
அவர் ஊருக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்ததும் பலர் எழுந்து நின்றார்கள்; வணக்கம் செலுத்தினார்கள்.
ஆடு மேய்ப்பவன் ஆச்சர்யப்பட்டுப் போனான். அவர், குட்டி ஆட்டை பத்திரமாக இறக்கிவிட்டபோது கேட்டான்... ‘`ஐயா... நீங்க யாரு... உங்க பேரு என்ன?’’
‘`எனக்கு எத்தனையோ பேர் இருக்கு. புத்தன்னும் சொல்வாங்க’’ என்றார் அவர்!
ஒரு துளி சிந்தனை
‘தொலைந்துபோகாத ஒன்றை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது’ - ஜென் நீதி