'இறைவன் எங்கு இருக்கிறான்?' என்ற கேள்விக்கு, 'அவன் எங்கே இல்லை? இருப்பதெல்லாம் இறைவனே!' என்று பதில் அளிக்கிறது ஸநாதன தர்மம்.
உலகம் எவ்வளவு பழைமையானதோ, அவ்வளவு பழைமையானவை கடவுளைப் பற்றிய புரிதல்களும். 'எத்தனை மனிதர்களோ, அத்தனை மதங்கள்' என்றார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.
உலகின் பல நாகரிகங்கள் தோன்றியிராத காலத்தில், நம் ரிஷிகள் கடவுள் தத்துவம் குறித்து மிகத் தெளிவான பார்வை கொண்டிருந்தனர். இறைவனை இல்லை என்பவன், தன்னையே இல்லை என்று சொன்னவன் ஆகிறான். இறைவன் இருக்கிறான் என எவன் ஏற்கிறானோ, அவன் தன்னையே இறைவனாக உணர்கிறான். இப்படி, வேதத்தின் துணை கொண்டு கடவுளின் இருப்பினை அறிவுபூர்வமாக நிரூபிக்க அவர்களுக்குத் தெரிந்திருந்தது.
கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத, கண்ணையும் கருத்தையும் ஒளிர்விக்கிற, மாபெரும் தத்துவமான கடவுளைப் பற்றி வேதங்கள் நமக்குக் கூறுகின்றன.
ஒரு பொருளை அறிய வேண்டுமெனில், முதலில் அதன் இலக்கணத்தை அறியவேண்டும். வேதப்பொருளாக விளங்கும் திருக்குறளில் பரம்பொருளின் இலக்கணத்தை எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர்.
ஒரு விஷயத்தை அழுத்திச் சொல்ல, ஒரு முறைக்குப் பத்து முறை கூறு என்கிறோம். திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்துப் பகுதியில், பத்துக் குறட்பாக்களில் இறைவனின் இலக்கணங்களை அற்புதமாக அருளியிருக்கிறார். ஒவ்வொரு குறட்பாவிலிருந்தும் கடவுளைப் பற்றிய இலக்கணம், கடவுளை வழிபடும் முறை, அதனால் ஏற்படும் பயன் ஆகிய மூன்று அம்சங்களை அறிய முடிகிறது.
கடவுளைப் பற்றி திருவள்ளுவர் கூறும் இலக்கணங்களைக் கவனியுங்கள்... உலக முதல்வன், எல்லாம் அறிந்தவன் (வாலறிவன்), உள்ளத்தாமரையில் உணர்வாக இருப்பவன் (மலர்மிசை ஏகினான்), விருப்பு- வெறுப்பு அற்றவன் (வேண்டுதல் வேண்டாமை இலான்), எங்கும் நிறைந்திருப்பவன் (இறைவன்), ஆசையற்றவன் (பொறிவாயில் ஐந்தவித்தான்), தனக்குவமை இல்லாதான், அறக்கடலாக விளங்குபவன் (அறவாழி அந்தணன்), எண்குணத்தான்.
திருக்குறளில் கூறப்பட்டுள்ள கடவுள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்? திருநீறு, திருமண் போன்ற சமயச் சின்னங்களோ, கயிலாசம், வைகுண்டம் போன்ற இடங்களோ கூறப்படவில்லை. அதனால்தான் திருக்குறள் உலகப் பொதுமறையாக விளங்குகிறது.
ஜாதி- மதங்களுக்கு அப்பாற்பட்டவர் கடவுள். சமயச் சின்னங்களுக்குள் அவரை அடக்கிவிட முடியாது. பெயரும் வடிவமும் கடந்தது, பரம்பொருள்.
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
- என்று பாடினார் மாணிக்கவாசகர்.
ஆத்திசூடி இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங்கொண்டு பாற்கடல் மிசைகிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந் துணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே
அதனியல் ஒளியுறு அறிவாம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவம்
மகாகவி பாரதியார் இந்தப் பாடலில் கூறும் அறிவே உருவான ஆண்டவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? எந்த மதத்தையும் சாராதவர் என்றால், ஏன் இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடல், பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுவதில்லை?! அந்த இறைவனுக்கே வெளிச்சம்!
|