தோழியர்களுடன் கிளம்பினாள் சகுந்தலை. வழியில், ஒரு நதியில் அவர்கள் நீராடினர். அப்போது, சகுந்தலையின் விரலில் இருந்த மோதிரம் நழுவியது. அவனது பிரிவால் இளைத்துப் போயிருந்ததால், மோதிரம் சுலபமாக நழுவியது. இதை அறியும் மனநிலையில் அவள் இல்லை.
துஷ்யந்தன் எதிரில் போய் நின்றும், அவன் மறதியில் இருந்ததால், அவளை ஏற்க மறுத்தான். 'உன்னை நான் சந்தித்ததே இல்லை' என்றான்.
காந்தர்வத் திருமணத்துக்குச் சாட்சியாக அவன் தன் விரலில் அணிவித்த மோதிரத்தைக் காட்ட முனைந்தவள், விரலில் மோதிரம் இல்லாதது கண்டு திடுக்கிட்டாள். இதைக் கண்ட மன்னன், 'இவள் நாடகமாடுகிறாள்' என எண்ணி, அவையில் இருந்து அவளை வெளியேற்றினான். அப்போது அவளின் தாயார் மேனகை அங்கே தோன்றி சகுந்தலையை அழைத்துச் சென்று, முனிவரின் ஆஸ்ரமத்தில் சேர்த்தாள்.
இந்த நிலையில், நீரில் விழுந்த மோதிரத்தை மீன் விழுங்கிற்று; அந்த மீன், மீனவன் ஒருவனிடம் சிக்கியது. மீனின் வயிற்றில் மோதிரம் இருப்பதைக் கண்டவன், ஓடிப்போய் மன்னனிடம் மோதிரத்தைச் சேர்த்தான். அதைக் கண்டதுமே, துஷ்யந்தனுக்குச் சகுந்தலையின் நினைவு வந்தது. தேடி வந்தவளை விரட்டிவிட்டோமே என வருந்தினான்.
அந்த வேளையில், ஜமீன்தார் ஒருவர் இறந்துபோனார். அவருக்கு வாரிசு எவரும் இல்லாததால், அந்தச் சொத்து அரசைச் சேரும் என்பது சட்டம். எனவே, அந்தச் சொத்துக்களை அரசிடம் ஒப்படைக்க, அமைச்சர் குழு, மன்னரிடம் வந்தது. அவர்களிடம், 'இறந்தவருக்குப் பல மனைவிமார்கள் இருக்கக்கூடும். அவர்களில் எவரேனும் ஒருவருக்கு வாரிசு இருக்கலாம். எனவே, தீர விசாரித்து முடிவுக்கு வாருங்கள்' என்றான். உடனே அமைச்சர்கள், ''நாங்கள் விசாரித்துவிட்டோம். வாரிசு யாரும் இல்லை'' எனத் தெரிவித்தனர். ''ஒருவேளை, அவரது மனைவியரில் எவரேனும் கர்ப்பவதியாக இருக்கலாம். அப்படியெனில், பிறக்கும் வாரிசுக்கு அந்தச் சொத்து சென்றடையவேண்டும் அல்லவா?! அறத்துக்குப் புறம்பான வழியில், செல்வமானது அரசை அடைந்தால், அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையே சரிந்துவிடும். எனவே, தீர விசாரியுங்கள்'' என்றான் துஷ்யந்தன். அதாவது, காதல்வசப்பட்ட நிலையிலும், அலுவலில் தடையின்றி, ஆழ்ந்து கவனம் செலுத்தும் பாங்கு அவனிடம் இருந்தது. சோகத்தில் ஆழ்ந்த வேளையிலும் லோக க்ஷேமத்தின்மீது விழிப்புடன் செயல்பட்டான், அவன்.
எதிரியை அடக்க, துஷ்யந்தனை நாடினான் இந்திரன். அவனை அழைத்துவர, சாரதியுடன் தேரினை அனுப்பிவைத்தான். பூமியில் தேருடன் இறங்கிய சாரதி, துஷ்யந்தனைச் சந்தித்தான். ஆனால் அவனோ, கவலையில் ஆழ்ந்திருந்தான். இந்த நிலையில் அவனை அழைத்துச் சென்றால் பயனில்லை என எண்ணிய சாரதி, அருகில் இருந்த விதூஷகனின் கழுத்தை நெரித்தான். இதில் அவன் கூச்சலிட, சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்த மன்னன், வில்லில் பாணம் தொடுத்து, சாரதியை அடக்க முனைந்தான். உடனே சாரதி, 'நான் இந்திரனுக்காக வந்துள்ளேன். இந்திரனின் சத்ருவை நீங்களே அடக்கவேண்டும். வில்லோடு தேரில் ஏறுங்கள். தொடுக்க முனைந்த பாணம், சத்ருவின் மீது விழவேண்டும்' என்றான். சூழலை உணர்ந்த துஷ்யந்தன், விண்ணுலகம் சென்றான். தனது துக்கத்தை ஓரங்கட்டிவைத்துவிட்டு, இந்திரனுக்காகக் களமிறங்கினான். சுயநலத்தை மறந்து, பிறர் நலனுக்கு முன்னுரிமை தருபவனே அரசன் என்பதை மெய்ப்பித்தான் துஷ்யந்தன்.
பிறகு, விண்ணிலிருந்து பூமிக்குத் திரும்பும்போது, ஒரு ஆஸ்ரமத்தைக் கண்ட துஷ்யந்தன், அங்கு சென்று முனிவரை வணங்க எண்ணினான். அங்கே சிறுவன் ஒருவன், சிங்கக்குட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் இனம் புரியாத உணர்வு மன்னனுக்குள். சிறுவனுடன் பேச விரும்பி, ''சிங்கக்குட்டிகளுடன் என்ன செய்கிறாய்?'' என்று கேட்டான். ''சிங்கக்குட்டிக்கு எத்தனைப் பற்கள் உள்ளன என எண்ணிக் கொண்டிருக்கிறேன்'' என பதில் தந்தான் சிறுவன். அப்போது, அங்கே சகுந்தலை வந்தாள். அவளைக் கண்டதும், வியப்பிலும் மகிழ்ச்சியிலும் திளைத்தான் துஷ்யந்தன். பிறகு, அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல; தனக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன்தான் என அறிந்ததும், துஷ்யந்தனின் மகிழ்ச்சி இரட்டிப்பானது. அந்தச் சிறுவன்... பரதன்! அவனது பிறப்பால் பெருமை கொண்டது பாரதம். அதையடுத்து, சகுந்தலை மற்றும் பரதனுடன் நாடு திரும்பினான் துஷ்யந்தன் என்கிறது நாடகக் கதை!
நாடகம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; காட்சிகளை ரசிப்பதுடன் நிற்காமல், மக்களுக்கு நல்ல பண்புகளையும் கற்றுத் தருவதே, சிறந்த நாடகம்! அறநெறியுடன் வாழ்வதன் அவசியத்தை, அற வழியில் வாழ்ந்து காட்டியே, மக்களுக்கு உணர்த்தினான் துஷ்யந்தன். எத்தனை இன்னல்கள் வந்தாலும், கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து செயலாற்ற வேண்டும் என உலகுக்கு உணர்த்தியவன் சாகுந்தல நாயகன் துஷ்யந்தன்.
|