தொடர்கள்
Published:Updated:

எப்போதும் இன்புற்றிருக்க...

எப்போதும் இன்புற்றிருக்க...


இளைஞர் சக்தி
எப்போதும் இன்புற்றிருக்க
எப்போதும் இன்புற்றிருக்க...
எப்போதும் இன்புற்றிருக்க...

'எந்தப் பிரச்னையும் இன்றி வாழவேண்டும். உயர்ந்த பதவி வேண்டும்; கௌரவம் வேண்டும்; எந்தச் சங்கடமும் இல்லாமல் பொருளீட்டவேண்டும்' எனச் சிலர் நினைப்பது, 'சாலையில் எந்த வாகனமும் செல்லாதபோதுதான் நான் வண்டியை ஓட்டுவேன்' என்று சொல்வதைப் போல!

நம் முன்னே தோன்றும் பிரச்னைகள், நம்மை திடப்படுத்துகின்றன; சில நேரங்களில் மேன்மைப்படுத்துகின்றன; நமது உள்ளத்தை இன்னும் விசாலமாக்குகின்றன. எதிர்ப்புகளுக்கு நடுவே வளரும்போதுதான், நம்முடைய உந்துசக்தி அதிகரித்து, நம் ஆற்றல் முழு அளவில் வெளிப்படுகிறது. சிறுத்தைகள் துரத்தும்வரை, மான்களுக்குத் தன்னால் இவ்வளவு வேகமாக ஓடமுடியுமா எனும் சந்தேகம் இருக்கவே செய்கிறது.

எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. சிறிதுநேரம் விலகியிருந்து, மனத்தை நிர்மலமாக மாற்றி, ஆழமாகச் சிந்தித்தால், விடை காணமுடியும்; மாறாக, அதிலேயே முழுவதுமாக மூழ்கினால், மூச்சுத் திணறிப் போய்விடுவோம்! நம்மால் எதையும் தீர்க்கமுடியும் என நம்புவதுதான், அந்தப் பிரச்னைக்கான காரணங்களையும், அவற்றைப் போக்கும் விதங்களையும், அவற்றால் ஏற்படுகிற எதிர்வினைகளையும் அலசி ஆராய்வதற்கு உதவியாக இருக்கும்.

சின்ன எதிர்ப்பைக்கூட மலையாக நினைப்பவர்கள்தான், மலைத்துப் போவார்கள்; வெறும் அலையாக நினைப்பவர்கள், அதிர்ந்துவிடாமல் துணிந்து நிற்பார்கள்.

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

''யானையின் எடையை எப்படி அறிவது?'' என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ''நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்'' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எப்போதும் இன்புற்றிருக்க...

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

பிரமாண்ட கோயில்களையும், கோபுரங்களையும் அந்தக் காலத்தில் எப்படி எழுப்பியிருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். சின்னச் சின்னப் பணிகளாகத் திட்டமிட்டு, பிறகு ஒவ்வொன்றையும் மும்முரத்துடன் செயலாக்கி, அந்த பிரமாண்ட வடிவங்களை உண்டாக்கினார்கள்.

செயல்களை மட்டுமல்ல, பிரச்னைகளையும் நாம் சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கவேண்டும். பிறகு, அவற்றைத் தீர்க்க வரிசையாக ஆலோசனைகளை மேற்கொள்ளவேண்டும்.

மகத்தான செயலைச் சரியாகத் திட்டமிடுகிற போதே, அந்தச் செயல் பாதி நிறைவேறிவிட்டதாக அர்த்தம். பிறகு, அதை ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்யவேண்டும். செயலைச் செய்கிறபோதே மகிழ்ச்சி ஏற்படவேண்டுமே தவிர, செய்து முடித்த பிறகு மகிழ்ச்சி தனியாக வரும் என்று எண்ணக்கூடாது.

சில நாடுகளில், நிறுவனங்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு 'மூளைப் புயல்' எனும் நிகழ்ச்சியை நடத்துவார்கள். இதற்கு, நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் அழைப்பார்கள். யார் வேண்டுமானாலும் தீர்வு சொல்லலாம். கடைநிலை ஊழியர்கள்கூட அந்தக் கூட்டத்தில், தங்களுக்குத் தோன்றும் வழிமுறைகளைச் சுதந்திரமாகச் சொல்ல முடியும். அந்தக் கூட்டத்தில் அனைவரும் சமம். சில நேரங்களில், எதிர்பாராத ஒரு நபரிடமிருந்துகூட, மிகச் சிறந்த ஆலோசனை வரலாம்.

தான் விரும்பிய படிப்பு கிடைக்காவிட்டாலோ, எதிர்பார்த்த வேலையை அடையாவிட்டாலோ, நேசித்த பெண்ணைத் திருமணம் செய்யமுடியாவிட்டாலோ சோர்ந்துவிடும் இளைஞர்கள் பலர் இங்கே உள்ளனர். தங்களின் மகிழ்ச்சி, ஒரே மண்டலத்தில் மையம் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்கிற வாழ்க்கை வானியல் நிபுணர்கள் அவர்கள்; எல்லா இடங்களிலும் ஏற்கெனவே பெய்துகொண்டிருக்கும் பருவமழையை ரசிக்கமுடியாதவர்கள்.

எப்போதும் இன்புற்றிருக்க...

இறந்தகாலத்தின் சக்கைகளை அசைபோடுபவர்களுக்கு, நிகழ்காலத்தின் சாரத்தைச் சுவைக்கமுடியாமல் போய் விடும். எதிர்பார்த்தவை நிறைவேறாவிட்டாலும் வாழ முடியும். ஆனால், வாழ்க்கையே பறிபோய்விட்டால், எதையுமே சாதிக்கமுடியாமல் போய்விடுமே?!

எத்தனையோ வகைகளில், நம் வாழ்வைப் பொருள் பொதிந்ததாக மாற்றிக்கொள்ள முடியும். அது, குறிப்பிட்ட படிப்பு, பணி, மனைவி என நிர்ணயிக்கப்படுவதில்லை! இலக்கை மனதில் வைத்து இயக்கத்தை மேற்கொள்வது நல்லதுதான். ஆனால், அது நிறைவேறாதபோது, அதற்குத் துணையான இலக்கை ஏற்கெனவே மனதில் தயார் செய்திருப்பது அவசியம். அப்போதுதான் சிறிதும் கவனம் பிசகாமல், நம் ஆற்றலை நேர்வழியில் செலுத்தமுடியும்.

'இன்ன பணியில்தான் உட்காருவேன்' என எல்லோரும் முடிவெடுத்தால், இந்த உலகம் சுழல்வது வெகு விரைவில் நின்றுபோகும். பணியின் உயர்வு, அர்ப்பணிப்பில் அடங்கியிருக்கிறதே தவிர, ஆர்ப்பரிப்பில் அர்த்தப்படுவதில்லை.

சாதாரணப் பணிகளைக்கூட, சாமர்த்தியமாகவும் அசாதாரணமாகவும் செய்து முடிக்கிற விற்பன்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள், தயிர் கடைவதைக்கூட வீணை வாசிப்பதைப் போல் அக்கறையுடன் செயலாற்றுவார்கள். ஒரு சிலர், கடம் வாசிப்பதைக்கூடக் கடனே என்று செய்கிறார்கள்.

பிரச்னைக்கான தீர்வு, வெளியே இருந்து வரும் என எதிர்பார்ப்பதாலேயே மகிழ்ச்சி பறிபோய்விடுகிறது. எல்லாப் பிரச்னைகளும் நம்மிடம் இருந்தே தொடங்கியவை. எனவே, அவற்றுக்கான தீர்வுகளும் நம்மிடம்தான் இருக்கின்றன.

பிரச்னைகள்தான் வெற்றிகளை உருவாக்குகின்றன. அது, நுண்ணறிவு உள்ளவர்களுக்கே முதலில் தென்படுகிறது. மனிதன் பறக்கமுடியாததுகூட ஒரு பிரச்னையாகக் கண்டறியப்பட்டதால்தான், ஆகாயவிமானம் கண்டு பிடிக்கப்பட்டது.

எல்லாப் பிரச்னைகளும், தொடுவானத்தை நோக்கி நம்மை உயர்த்துவதற்கான, கண்ணுக்குத் தெரியாத கணக்கற்ற சிறகுகளை ஒளித்துவைத்திருக்கின்றன என்பதை உணர்ந்தால், மகிழ்ச்சியானது மனதில் மையமிட்டுத் தங்கும்!

- (இன்பம் பொங்கும்)
படம் கே. ராஜசேகரன்