ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ரசிக்க.. சில தகவல்கள்!

ரசிக்க.. சில தகவல்கள்!


இளைஞர் சக்தி
ரசிக்க.. சில தகவல்கள்!

வினோபாஷியின் தியானம்
ரசிக்க.. சில தகவல்கள்!

பர்மதி ஆஸ்ரமத்தில் காந்தியடிகளுடன் தங்கியிருந்த ஆச்சார்ய வினோபாபாவே, எவருடனும் அளவுக்கு அதிகமாகப் பேச மாட்டார்; தானுண்டு தனது வேலையுண்டு என்று இருப்பார். ஓய்வு நேரங்களில் பகவத் கீதை படிப்பார்.

ஒரு நாள், சபர்மதி ஆஸ்ரமத்துக்கு ஆச்சார்ய கிருபளானி வந்தார். காந்திஜியை சந்தித்த அவர், ''பாபுஜி, தியானம் என்றால் என்ன?'' என்று கேட்டார்.

உடனே, ''வாசலில் உட்கார்ந் திருக்கிறார் பார், வினோபா. அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்'' என்றார் காந்திஜி.

வாசலுக்கு வந்த கிருபளானி, வினோபாவை பலமுறை அழைத் தும் அவர் கண்டுகொள்ளவில்லை. கிருபளானி தன்னை அழைப்பதை கவனியாமல், பகவத் கீதை படிப்பதில் மும்முரமாக இருந்தார் வினோபாஜி.

இதனால் கிருபளானி சலிப்படைந்தார். அவர் மீண்டும் காந்திஜியிடம் சென்று, ''நான் வந்ததையே வினோபாஜி கண்டுகொள்ள வில்லை. நான் அழைப்பதைக்கூடக் கவனிக் காமல், படித்துக்கொண்டே இருக்கிறார்!'' என்றார்.

காந்திஜி புன்சிரிப்புடன் சொன்னார் ''தியானம் என்றால் என்னவென்று கேட்டாயே, அது இதுதான். மனத்தில் சிறிதுகூட சஞ்சலம் ஏற்படாமல், கவனத்தை ஒரே விஷயத்தில் செலுத்தியிருக்கிறாரே, அதுதான் தியானம்!''

- ஏ.கே. நாசர், டி.ஆர். பட்டினம்


'தனியே வா!'

ரசிக்க.. சில தகவல்கள்!

வியாச முனிவரின் மகன் சுக முனிவர். அவரை எல்லோரும் 'சுக பிரம்ம மகரிஷி' என்றே அழைப்பர்.

ஒருநாள் தன் தந்தையிடம், ''பிரும்ம ஞானம் பெற எனக்கு வழி சொல்லுங்கள்'' எனக் கேட்டார் சுக முனிவர்.

''மிதிலைக்குச் செல். அரசர் ஜனகரே உனக்குப் பிரம்ம ஞானம் வழங்கத் தகுதி உடையவர்'' என்றார் வியாசர்.

அதன்படி மிதிலை அரண்மனையை அடைந்தார் சுக முனிவர். காவலர்களிடம், ''உங்கள் அரசரிடம் போய் சுக பிரம்ம மகரிஷி வந்திருக்கிறார் என்று சொல்லுங்கள்'' என்றார்.

காவலாளிகளும் ஜனகரிடம் சென்று, சுக பிரம்ம மகரிஷி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். அதற்கு ஜனகர், ''அவருடன் வந்திருக்கும் மற்ற இருவரை விட்டுவிட்டு, அவரை மட்டும் தனியாக வரச் சொல்லுங்கள்'' என்றார்.

''அரசே! அவர் தனியாகத்தான் வந்திருக்கிறார்'' என்றார்கள் காவலாளிகள்.

ஜனகர், ''நான் சொன்னதை மட்டும் அவரிடம் சொல்லுங்கள்!'' என்றார் கண்டிப்புடன்.

சுக முனிவரிடம் வந்த காவலர்கள், அரசர் கூறியதை அப்படியே அவரிடம் தெரிவித்தனர்.

அதைக் கேட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தார் சுக முனிவர். பின்னர், காவலாளிகளுடன் சென்று அரசரைச் சந்தித்து, ''நான் சுக பிரம்மம் வந்திருக்கிறேன்'' என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இப்போது ஜனகர் என்ன சொன்னார் தெரியுமா? ''உங்களைத் தனியாகத்தானே வரச் சொன்னேன்..! இப்போதும் துணைக்கு ஒருவரை வைத்துக்கொண்டிருக்கிறீரே?'' என்று கேட்டாராம்.

சுகருக்கு இப்போதுதான் தனது தவறு புரிந்தது. அவர் சொன்னார்... ''மன்னிக்கவும். நான் சுகன் வந்திருக்கிறேன்!''

ஆம்... பிரம்ம ஞானத்தை அடைய விரும்புபவர்களுக்கு, அகங்காரம் அறவே கூடாது!

- சு. கண்ணகி, மிட்டூர்


விவேகானந்தரை சோதித்த பரமஹம்சர்!

ரசிக்க.. சில தகவல்கள்!

ம்மிடம் சீடனாகச் சேர வந்திருந்த சுவாமி விவேகானந்தருக்கு சிறிய சோதனை ஒன்று வைத்தார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

விவேகானந்தரின் நாக்கை நீட்டச் சொல்லி, அதில் சிறிய வெல்லக்கட்டி ஒன்றை வைத்து, வாயை மூடிக்கொள்ளச் சொன்னார். சிறிது நேரம் கழித்து நாக்கை நீட்டச் சொல்லி, வெல்லக்கட்டியைப் பார்த்தார். அது, அவர் வைத்தது போலவே, சிறிதும் கரையாமல் இருந்தது.

எவராக இருந்தாலும் வெல்லத்தை வாயில் போட்டதும் எச்சில் ஊறும்; வெல்லக்கட்டி சிறிதாவது கரையும். விவேகானந்தர் விஷயத்தில் அப்படி நடக்காதது கண்டு, பரமஹம்சருக்கு ஆச்சரியம்!

''இந்த அளவுக்கு உன்னிடம் மனக்கட்டுப்பாடு உள்ளதே... உன்னை சீடனாக ஏற்றுக்கொள்கிறேன்'' என்றார்.

- கே.என். மகாலிங்கம், பாண்டிச்சேரி-4