சுவாதி நட்சத்திரத்தில் பிறக்கும் புத்தாண்டு வாழ்வில் ஒளியேற்றும்- 2019 ஆங்கிலப்புத்தாண்டு பொதுப்பலன்கள்!
நிகழும் விளம்பி வருடம் மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை தட்சிணாயனம் ஹேமந்த ருதுவில், கிருஷ்ண பட்சம், தசமி திதியில் சமநோக்குக் கொண்ட ஸ்வாதி நட்சத்திரம், துலாம் ராசி, கன்னி லக்னம், அமிர்தயோக நன்னாளில் நள்ளிரவு 12 மணிக்கு 2019ம் ஆண்டு பிறக்கிறது.
இந்த 2019-ம் ஆண்டு என்னவிதமான செய்திகளையும் பலன்களையும் தரப்போகிறது என்கிற ஆவல் எல்லோர் மனதிலும் இருப்பது இயற்கை. 2018-ம் ஆண்டு எல்லோரையும் மிகவும் துன்பப்படுத்தி விட்டது. ஆனால் அதற்கு மாறாக இந்த ஆண்டு எல்லோருக்குமே சிறப்பான ஆண்டாக அமையும். புத்தாண்டு பிறக்கும்போதே சுவாதி நட்சத்திரத்தில் பிறப்பதால், எல்லோருடைய வாழ்விலும் ஒளியேற்றும் விதமாக அமையும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஸ்வாதி நட்சத்திரத்தின் ராசி துலாம். இதன் ராசிநாதன் சுக்கிரன் என்பதால், குடும்பத்திலும் சமூகச் சூழலிலும் சுபிட்சம் நிலவும். பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேரும். நவநாகரிக வாழ்க்கையின் உந்துதலால் தனிக்குடித்தனம் போன பலரும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அருமையைத் தேடி வருவார்கள். உலகமெங்கும் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு மரியாதை கிடைக்கும்.
மனிதர்கள், எந்த அளவு நவீனம், நாகரிகத்தின் பின்னால் போனார்களோ, அந்த அளவுக்குப் பழைமையை நோக்கி வரத்தொடங்குவார்கள். மீண்டும் கிராமத்துச் சமையல் மண்பானைச் சமையல் ஆகியவற்றை விரும்புவார்கள்.
உடம்பு மற்றும் நோய் பற்றிய விழிப்பு உணர்வு மனிதர்களிடம் அதிகரிக்கும். சமூகத்தின் எல்லா தளங்களிலும் இருந்துவந்த பொருளாதார நெருக்கடி விலகும். இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்கம், பெட்ரோல், டீசல் ஆகிய பொருள்களின் விலை குறையும்.
சொந்த வீடு அமையாத பலருக்கும், இந்த ஆண்டு சொந்த வீடு அமையும். வாகனங்களின் பெருக்கம் அபரிமிதமாக இருக்கும். குறைந்த வட்டியில் வங்கிக் கடன் கிடைக்கும்.
2019 -ம் ஆண்டில் வேறு சில மாற்றங்களும் நிகழ இருக்கின்றன. மார்ச் மாதம் 13 -ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் மத்தியில் வரை கொஞ்சம் கடுமையான காலகட்டமாக இருக்கும். சனி, செவ்வாய் பார்வை, சனி, செவ்வாய் சேர்க்கை செவ்வாய், சூரியன் சேர்க்கை போன்ற கிரக அமைப்புகள் பாதிப்புகளை ஏற்படுத்தும். மழையின் அளவு அதிகமாக இருக்கும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்திருக்கும் மாவட்டங்களில் மழை அதிகமாகப் பெய்யும்.
சுக்கிரன் மழைக்கு உரிய கிரகம் என்பதால், இந்த ஆண்டு நல்ல மழை இருக்கும். ஆனால், தேவைப்படும் நேரத்தில் பெய்யாமல் பருவம் தப்பிப் பெய்யும். ஆனாலும் முதலுக்கு மோசமிருக்காது. ஓரளவு லாபம் கிடைக்கும். நீண்ட நாள்களாகத் திருமணம் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நல்லவிதமாக நடைபெறும். வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
துலாம் ராசியில் ஆண்டு பிறப்பதால், சுயமாகத் தொழில் செய்யலாம் என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். சம்பளத்துக்கு இருந்தவர்களில் சிலர், `நிறைய நிறுவனங்கள் மாறிவிட்டோம் சொந்தமாகத் தொழில் செய்வோம்' என முடிவெடுத்துத் தனியாக அலுவலகம் திறப்பார்கள். கல்வியில் நிறைய மாற்றங்கள் வரத்தொடங்கும்.
பொதுவாக மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டலாம் என்றிருந்தவர்கள் பலரும், தாத்தா, அப்பா ஆகியோரின் தொழில்களை சொந்த ஊரில் செய்யலாம் என்று முடிவெடுத்து தங்களின் படிப்பைத் தாண்டி தொழில்துறையில் கால்தடம் பதிப்பார்கள். மொத்தத்தில் போராட்டமாக இருந்த 2018-ம் ஆண்டைவிட, 2019-ம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும்.