தொடர்கள்
Published:Updated:

பொதுப் பலன்கள்

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

பொதுப் பலன்கள்
பொதுப் பலன்கள்
##~##
நி
கழும் நந்தன வருடம், கார்த்திகை மாதம் 17-ஆம் தேதி (2.12.12) ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, புனர்பூச நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவன் நிறைந்த சித்தயோகத்தில், சனிபகவான் ஹோரையில், பஞ்ச பட்சியில்- ஆந்தை அரசாட்சி செலுத்தும் நேரத்தில், காலை மணி 10:51-க்கு (சூரிய உதயம் புக) நாழிகை 12.71/2-க்கு விசாக நட்சத்திரம் 3-ஆம் பாதத்தில் சர வீடான துலாம் ராசியில் ராகு பகவானும்; கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் சர வீடான மேஷ ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள்.

ஆற்றல்- சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இந்த சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும்தான். எந்த கிரகத்துடன் சேர்கிறார்களோ, எந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கிறார்களோ, எந்த கிரகங்களால் பார்க்கப்படுகிறார்களோ... அதற்கு தகுந்தாற்போன்று... அதேநேரம், தனக்கென விதிக்கப்பட்ட பலனைத் தவறாமல் தருவதில் இவர்களுக்கு ஈடு இணை இல்லை.

ராகுவால் ஏற்படப் போகும் பலன்கள்

பொதுப் பலன்கள்

வியாபாரச் சின்னமான தராசு குறியைக் கொண்ட சுக்கிரனின் துலாம் ராசியில் ராகு அமர்வதால், பாரம்பரிய வியாபாரிகள் பாதிப்படைவார்கள். சுதேசிப் பொருட்களின் உற்பத்தி, விற்பனை குறையும். உணவு பதுக்கல் அதிகமாகும். விலைவாசி ஏற்றம் கடுமையாக இருக்கும். 7.6.13 முதல் 11.12.13 வரை சனியும் ராகுவும் யுத்தம் செய்வ தால் விமான விபத்து, நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு, விபத்துகள், பூமிக்கு அடியிலிருந்து மீத்தேன், ஈத்தேன், ஆர்கன் போன்ற மந்த வாயுக்கள் வெளிப்பட, அதனால் பாதிப்புகள் ஏற்படும். முடி உதிர்வது, நரைப்பதைத் தடுக்க புதிய மருந்து கண்டறியப்படும். முகச்சீரமைப்பு, இதய அறுவை சிகிச்சை துறை நவீனமாகும். மலை மற்றும் கடலோர நகரங்கள் பாதிப்படையும். தங்கத்தின் விலை 2013 ஜூன் மாதத்திலிருந்து குறைய வாய்ப்பு இருக்கிறது.  

மீண்டும் வளைகுடா நாடுகள் மீது அமெரிக்காவின் பார்வை திரும்பும். சமூக எதிர் நடவடிக்கை கும்பல்கள் புதுத் தாக்குதலை நடத்தும். போதை மருந்து, தங்கம் கடத்தல் அதிகரிக்கும். வன்முறையாளர்களைத் தடுக்க கடும் சட்டம் வரும். மத்தியில் கூட்டணி மாறும். ஆட்சியாளர்கள் ஆட்சியைத் தக்கவைக்க கடுமையாகப் போராட வேண்டியது இருக்கும். அனைத்து துறைகளிலும் பெண்கள் கை ஓங்கும். பெண் சாதனையாளர்கள் அதிகரிப்பார்கள். அதேநேரம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் அதிகரிக்கும். பாமர மக்கள் பயனடையும் வகையில் புது சட்டதிட்டங்கள் உருவாகும். சாதாரணமானவர்களும் பதவியில் அமர்வார்கள். ஆடம்பர வாழ்க்கைக்கு மக்கள் அடிமையாவார்கள். உலகப் பொருளாதார நிலை சற்றே உயரும். அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நம் நாட்டில் அதிக முதலீடு செய்வார்கள். ஐ.டி. நிறுவனங்கள் சரியும். வங்கிகளில் வராக்கடன்களை வசூலிக்க சட்டம் கடுமையாகும். அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும். புதிய கனிம- கரிம வளங்கள் கண்டு பிடிக்கப்படும். ராணுவத்தில் புதிய ஏவுணைகள் சேர்க்கப்படும். காடுகள் சேதமடையும்.

அயல்நாடுகளைப் போன்று இந்தியாவிலும் நவீனமான பெரிய கட்டடங்கள் உருவாகும். பால் பொருட்களின் விலை வீழ்ச்சியடையும். கம்ப்யூட்டர், ஆடியோ- வீடியோ சாதனங்களின் விலை வீழ்ச்சியடையும். செங்கல், சிமென்ட், மணல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயரும். பாலியல் கொடுமைகளுக்கு எதிராக சில கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும். பாலியல் சம்பந்தமான புதிய நோய்கள் உருவாகும். அவற்றுக்கான மருந்துகளும் கண்டறியப்படும். அணைக்கட்டுகள் உடையும். ஷேர் மார்க்கெட், தங்கத்தின் விலையில் ஏற்ற-இறக்கம் இருக்கும். வெள்ளி விலை உயரும். தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு உண்டாகும். முக்கிய தீவிரவாதிகள் பிடிபடுவார்கள். திரைத்துறை வளர்ச்சி அடையும்.  

கேதுவால் ஏற்படப் போகும் பலன்கள்

பொதுப் பலன்கள்

கேது பகவான் சுக்கிரனின் ஸ்திர வீடான ரிஷப ராசியை விட்டு விலகி சர வீடான மேஷ ராசியில் அமர்வதால், பூமி விலை உயரும். ரியல் எஸ்டேட் பாதிப்படையும். நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகள் வளர்ச்சி அடையும். புதிய நகரங்கள் உருவாக்கப்படும். பத்திரப் பதிவுத் துறையில் போலிகளைத் தடுக்க சட்டம் வரும். கூட்டுக் குடும்பங்கள் உடையும். மக்கள் மனதில் தன்னம்பிக்கை குறையும். நிம்மதி தேடி புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். ஆன்மிகத் தலைவர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள். பழைய கோயில்களில் புதையுண்டிருக்கும் மர்மங்கள் வெளி வரும். யோகாசனம், மூலிகை மருத்துவம் தழைக்கும். விபத்துகள் அதிகரிக்கும். காலபுருஷனின் முதல் வீட்டில் கேது அமர்வதால் ஒற்றைத் தலைவலி, மூளைக் காய்ச்சல் அதிகரிக்கும். விநோதமான முக அமைப்பில் உள்ள குழந்தைகள் அதிகம் பிறக்கும். ஈகோ, சந்தேகத்தால் விவாகரத்து அதிகரிக்கும். பூமி வெடிப்பால் நிலச்சரிவு அதிகரிக்கும். பாகப்பிரிவினை, சொத்துத் தகராறு ஆகியனவும் அதிகமாகும்.  

மாணவர்களுக்கு தேர்வு முறைகளில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும். கல்வி நிறுவனங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு, அவற்றின் தரம் மேம்படுத்தப்படும். நவீனரக க்ரேன், வாகனங்கள், எலெக்ட்ரானிக் பொருட் களின் உற்பத்தி அதிகரிக்கும். உண்ணாவிரதம், கடை

அடைப்பு மற்றும் வேலை நிறுத்தங்களும் ஆங்காங்கே அதிகமாக நடக்கும்.

ராகு கடந்து செல்லும் பாதை

2.12.12 - 2.2.13 வரை விசாகம் 3-ல்

3.2.13 - 6.4.13 வரை விசாகம் 2-ல்

7.4.13 - 6.6.13 வரை விசாகம் 1-ல்

7.6.13 - 8.8.13 வரை சுவாதி 4-ல்

9.8.13 - 11.10.13 வரை சுவாதி 3-ல்

12.10.13 - 11.12.13 வரை சுவாதி 2-ல்

12.12.13 - 13.2.14 வரை சுவாதி 1-ல்

14.2.14 - 17.4.14 வரை சித்திரை 4-ல்

18.4.14 - 21.6.14 வரை சித்திரை 3-ல்

கேது கடந்து செல்லும் பாதை

2.12.12 - 2.2.13 வரை கார்த்திகை 1-ல்

3.2.13 - 6.4.13 வரை பரணி 4-ல்

7.4.13 - 6.6.13 வரை பரணி 3-ல்

7.6.13 - 8.8.13 வரை பரணி 2-ல்

9.8.13 - 11.10.13 வரை பரணி 1-ல்

12.10.13 - 11.12.13 வரை அசுவனி 4-ல்

12.12.13 - 13.2.14 வரை அசுவனி 3-ல்

14.2.14 - 17.4.14 வரை அசுவனி 2-ல்

18.4.14 - 21.6.14 வரை அசுவனி 1-ல்

பரிகாரம்

மூளை, முயற்சி, முனைப்பு, தன்மானம், உணர்ச்சி கிரகமான செவ்வாயின் மேஷ வீட்டில் கேது அமர்வதால் ஜாதி- மதப் பற்றை விட்டுவிட்டு நாட்டுப் பற்று, மொழிப் பற்றை வளர்த்துக்கொள்வோம். உணவு, உடை, உல்லாசம், கலைக்கு உரிய கிரகமான சுக்கிரனின் துலாம் ராசியில் ராகு அமர்வதால் நவீன உடைகள் அணிவதை தவிர்த்து பாரம்பரிய உடைகளை அணிவதுடன் கலப்படமில்லா பாரம்பரிய உணவுகளையும் உட்கொள்வோம்.