
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சரவண பவநிதி அறுமுக குருபர
சரவண பவநிதி அறுமுக குருபர
சரவண பவநிதி அறுமுக குருபர எனஓதித்
தமிழினில் உருகிய அடியவர் இடம்உறு
சனன மரணம்அதை ஒழிவுற சிவம்உற
தருபிணி துளவரம் எமதுயிர் சுகம்உற அருள்வாயே
கருணைய விழிபொழி ஒருதனி முதல்என
வருகரி திருமுகர் துணைகொளும் இளையவ
கவிதை அமுதமொழி தருபவர் உயிர்பெற அருள்நேயா
கடல்உல கினில்வரும் உயிர்படும் அவதிகள்
கலகம்இ னையதுள கழியவும் நிலைபெற
கதியும் உனதுதிரு வடிநிழல் தருவதும் ஒருநாளே
திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய
குமர ச மரபுரி தணிகையு மிகும்உயர்
சிவகிரி யிலும்வட மலையிலும் உலவிய வடிவேலா
தினமும் உனதுதுதி பரவிய அடியவர்
மனது குடியும்இரு பொருளிலும் இலகுவ
திமிர மலம்ஒழிய தினகரன் என வரு பெருவாழ்வே
அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
மருகன் எனவெவரும் அதிசயம் உடையவ
அமலி விமலிபரை உமையவள் அருளிய முருகோனே
அதல விதலமுதல் கிடுகிடு கிடுஎன
வருமயில் இனிதொளிர் ஷடுமையில் நடுவுற
அழகி னுடன் அமரும் அரகர சிவசிவ பெருமாளே!

கருத்து:
முப்புரங்களையும் எரித்த சிவபெருமானின் புதல்வரே! திருப்போரூர், தணிகை மலை, சிவகிரி, வடமலை ஆகிய தலங்களில் உலாவும் வடிவேலரே! தினமும் உமது புகழைப் பாடிப்பரவும் அடியார்களின் உள்ளத்தில் குடிகொண்டு அருட்செல்வம், பொருட்செல்வமாக விளங்குபவரே! ஆணவ மலம் நீங்க ஞானசூரியனாக வருபவரே! ஸ்ரீமந் நாராயணரின் மருகன் என்று கூறும் சிறப்பை உடையவரே! பார்வதியாள் பெற்ற மைந்தரே! உலகங்கள் நடுங்குமாறு வருகின்ற மயிலின் மீது ஒளிர்பவரே!
ஆறுகோணத்தின் நடுவில் அமர்ந்தவரே, ஹர ஹரா... சிவ சிவா..! பெருமிதம் உடையவரே, சரவண பவ நிதியே, ஆறுமுகா, குருபரா... இப்படி, தமிழில் துதித்து உருகும் அடியார்களின் பிறப்பு-இறப்பு நீங்கவும், அவர்கள் சிவப்பேறு பெறவும், நோய்கள் விலகவும், எமது உயிர் இன்புறவும் அருள்புரிவீராக.
கருணை உடையவரே, ஆனைமுகத்தானின் துணையை நாடும் இளையவரே, உயர் நற்கதி பெற அருள்பவரே, இந்த உலகினில் உயிர்கள் படும் துன்பங்கள் யாவும் அகலவும், நிலைபெறவும், தங்களின் திருவடி நிழல் தருவதுமாகிய நாள், அடியேனுக்கு என்று உண்டாகுமோ?!