
ஜோதிடத் தகவல்கள் திண்டுக்கல் முருகேசன்
உங்கள் வீட்டில் மங்கலம் நிறைந்திட, பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகிட அற்புதமான பல வழிபாடுகளைச் சொல்கின்றன ஞானநூல்கள். அவற்றில் குறிப்பிடத் தக்கது சுமங்கலிபூஜை.

வீட்டில் சுக்லபட்ச வெள்ளிக்கிழமையிலோ அல்லது சுத்தமான சுப நாளிலோ சுமங்கலி பூஜை செய்யவேண்டும். அதேபோல், வீட்டில் ஒரு வெள்ளிக்கிழமை,‘மகாலட்சுமி பூஜை’ செய்து வழிபடலாம். அந்த வழிபாட்டுக்கு சுமங்கலிகளை வரவழைத்து வணங்கலாம். அவர்களுக்கு அறுசுவை விருந்து படைத்து மகிழ்விக்கவேண்டும்.
பூஜையின் நிறைவில் மஞ்சள், குங்குமம், ரவிக்கைத் துணி, முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, பூ, பழம், வெற்றிலைப் பாக்கு, சந்தனம் ஆகியவற்றைத் தானம் செய்து அவர்களை நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்றால் மாங்கல்ய தோஷம் விலகும்.
இயன்றவர்கள் வீட்டில் மிருத்யுஞ்ஜய ஹோமமும் ஜபமும் செய்து வழிபடுவதால் விசேஷ பலன் கிடைக்கும்.
தெரிந்துகொள்வோம்!
மாவிலை தோரணங்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டக்கூடாது.
தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யக்கூடாது.

தினசரி பிரார்த்தனை என்பது நம் வீட்டு வாசலைத் தேடி வரும் புண்ணிய நதி போன்றது. எவர் ஒருவர் அதில் தன்னைச் சுத்தம் செய்து கொள்கிறாரோ, அவர் தன்னை மிகவும் புனிதமாக்கிக் கொள்கிறார்.
பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், சமித்துகள் போன்றவற்றைப் பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு, வாழை இலை போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது 3 வெற்றிலை, 1 பாக்கு என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்துப் பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்துப் பூசலாம்.
பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும், இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது சிறப்பு.
தேங்காய், இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.
காலையில் நின்று கொண்டு செய்யும் ஜபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகின்றன.அஷ்ட கந்தம்

அஷ்ட கந்தம்
சித்தர்களின் சிந்தனைத்தடாகத்தில் மலர்ந்த ஓர் அரிய பொக்கிஷம் அஷ்டகந்தம். ஆகும். அறு சமயக் கோட்பாட்டில் உள்ள உபாசகர்களும் ஏற்றுக் கொண்ட இறை சஞ்ஜீவி அது.
இதன் மகிமையை அறிந்த தியான வழிபாட்டினர் சிலரும், ஜோதிடர்கள் மற்றும் மந்திர வழிபாட்டினரில் சிலரும் அஷ்ட கந்தத்தை முறையாக தயாரித்து நெற்றியில் திலகமாக அணிவர் அல்லது அதை வெள்ளித் தாயத்தில் அடைத்து, உரு ஏற்றி அணிந்துகொள்வார்கள்.
1. பச்சைக் கற்பூரம்.
2. கஸ்தூரி
3. கோரோசனை
4. குங்குமப்பூ
5. புனுகு
6. சந்தனம்
7. ஜவ்வாது
8. அரகஜா
ஆகியவையே அஷ்ட கந்தம் ஆகும். பௌர்ணமி தொடங்கி ஒரு நாழிகை கடந்த பின், சாதகர் இந்த எட்டையும் கழுவத்தில் இட்டு, கிழக்கு முகமாக அமர்ந்து அரைக்கவேண்டும். அப்படி அரைப்பதற்கு முன்னதாக 7, 11 அல்லது 21 நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். இந்த நாள்களில் உபவாசம் மெளன விரதம் இருப்பார்கள்.
மனம், மெய், மொழி யாவும் தூய்மை கொண்டோர் - இறை வழிபாட்டில் நித்திய கைங்கரியத்தைத் தவறாமல் கடைப்பிடிக்கும் உபாசகர்கள் அஷ்டகந்த மருந்தைத் தயாரிப்பதில் ஈடுபடலாம்.
அஷ்டகந்தம் தெய்வ சக்தியைப் பெற்றுத் தரும். தீய சக்திகளைக் காட்டித் தரும். வாஸ்து ஆசான்கள் அஷ்ட கந்தம் இட்டு வாஸ்து பார்க்கிற போது, சல்லியத்தின் சூட்சுமம் விளங்கும் என்பார்கள்.