
- வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் -
புது மனை வாங்கி வீடு கட்டும்போது, அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் எப்படி என்பதை அறிவது அவசியம் அல்லவா? தற்போது மனையில் நிலத்தடி நீர் அளவைக் காண பல்வேறு விஞ்ஞான முறைகள் கையாளப்படுகின்றன. முற்காலத்தில், நிலத்தடி நீர் அளவை அறிய, வியக்கவைக்கும் அபூர்வமான சில வழிகாட்டுதல்கள் உண்டு!
‘நிலத்தடி நீர் காணும் முறை’ என்ற நூல், மதுரை, சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ளது. அதில், `குறிப்பிட்ட சில மரங்கள் அருகில் புற்று அமைந்திருந்து, அந்த மரத்தின் ஒரு பகுதிகிளை வடக்கே சாய்ந்து காணப்பட்டால், அந்த மனையில் சில அடிகளிலேயே தண்ணீர் இருக்கும் என்பதை அறியலாம்' என்ற தகவல் உள்ளது.
தற்காலத்தில், எல்லா மாதங்களிலும் தண்ணீருக்காக ‘போர்’ போடுகிறார்கள், சினேந்திரமாலை எனும் நூல் என்ன சொல்கிறது தெரியுமா? சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் கிணறு வெட்ட (போர் போடுதலுக்கு) உகந்த உத்தமமான மாதங்கள் என்கிறது. அதேபோல் ஆடி, ஆவணி ஆகியன மத்திம பலன் தருபவை; புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, மற்றும் பங்குனி மாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்கிறது அந்த நூல்.
அக்னி புராணத்திலும் நிலத்தடி நீரோட்டம் குறித்த சில தகவல்கள் உண்டு. இந்த நூல் ஏழு வகையான நீரோட்டங்களைப் பற்றி விவரிக்கிறது. அவை:
மஹேந்த்ரா: கிழக்கு நோக்கி நுரையோடு பாய்வது.
பூர்வசிரா அக்னி: கிழக்கில் இருந்து வருவது.
உத்தர கெளபோசிரா: வடக்கில் இருந்து வருவது
தட்சிணாசிரா: தெற்கிலிருந்து வருவது.
பஸ்மாசிரா: மேற்கிலிருந்து வருவது.
ஈசானாசிரா: வட கிழக்கிலிருந்து வருவது.
மஹாசிரா: கிணற்றின் நடுப்பக்கத்தில் இருந்து வருவது.