தாய்மொழி, தாய்நாடு மீது அதிக அக்கறை கொண்ட நீங்கள், மாளிகையில் இருந்தாலும் மண்ணை நேசிப்பவர்கள். எதிலும் புரட்சிகரமான முடிவுகளை எடுக்கும் நீங்கள், மூடநம்பிக்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பவர்கள். லட்சிய கனவுகளுடன் வாழும் நீங்கள், காசு பணத்தை விடக் காலத்தால் அழியாத காரியங்களைச் செய்வதில் வல்லவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 12-வது வீட்டில் அமர்ந்து கொண்டு கைமீறிய செலவுகளையும், வீண்பழி, பகை, மன உளைச்சல் என உங்கள் நிம்மதியை இழக்கச் செய்த குருபகவான் இப்போது 22.4.2023 முதல் உங்கள் ராசிக்குள் நுழைந்து 1.5.2024 வரை ஜன்மகுருவாக சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். யோகா, தியானம் மற்றும் உணவு கட்டுப்பாடும் அவசியம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

‘‘ஜன்மத்தில் ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்’’ என்ற பாடல்படி கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன விவாதம், சண்டை வந்து நீங்கும். ஆனாலும் குருபகவான் உங்களுக்கு பிரபலயோகாதிபதி என்பதால் கெட்டதிலும் நல்லதையே செய்வார். குலதெய்வக் கோயிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள். உதவிக் கேட்டு வரும் உறவினர், நண்பர்களுக்கு வாக்குறுதி எதுவும் தரவேண்டாம். உங்களால் முடிந்ததை மட்டும் செய்யுங்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.
குருபகவானின் பார்வைப் பலன்கள்
குருவின் ஸ்தான பலம் குறைவாக இருந்தாலும் பார்வை பலம் உங்களுக்குப் பலவிதமான நன்மைகளைச் செய்யும். குருபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் மகன் மகள் பற்றிய கவலைகள் விலகும். குழந்தை இல்லாத தம்பதியருக்குப் பிள்ளை பாக்கியம் உண்டாகும். மகளின் திருமணம் ஏதோ ஒரு வகையில் தள்ளிப் போய்கொண்டே இருந்ததே! இனி கண்ணுக்கு அழகான மணமகன் வந்தமைவார். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக அமையும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். நெடுநாள்களாக வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குப் போக நினைத்தும் தடைப்பட்டுக் கொண்டிருந்ததே, இனி குடும்பத்துடன் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிப்பதால் கையிருப்பு கரையும். பாகப்பிரிவினை கொஞ்சம் பாரபட்சமாக இருந்தாலும் ஒத்துக்கொள்வது நல்லது.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவியின் பேச்சுக்கு முக்கியத்துவமளிப்பீர்கள். ஆனாலும் உங்களை அடக்குவதாக நினைப்பீர்கள். அவர்வழி சொந்தங்களால் ஆதாயமுண்டு. வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணம், சீமந்தம் நீங்கள் எதிர்பார்த்தைவிடச் சிறப்பாக முடியும். ஊர்க் கோயில் திருவிழாவைச் செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். இருந்தாலும் கடைசில் கெட்ட பெயர் தான் கிடைக்கும். சித்தர்கள் அறிமுகமாவார்கள். இழுபறியில் இருந்த வழக்குகளில் இனி வெற்றியுண்டு.
உங்களின் பாக்கிய வீடான 9-ம் வீட்டின் மீது குருபகவானின் பார்வை விழுவதால் வெகுநாள்களாக வராமலிருந்த பணம் தக்கசமயத்தில் வந்து கை கொடுக்கும். தந்தையின் உடல்நிலை சரியாகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல் போக்கு விலகும். முடிவெடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கி தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரிடம் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை உள்ள காலகட்டங்களில் குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால், அசுவனி நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நாள்களில் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெறுப்பு, சலிப்பு வந்து நீங்கும். தனிமையில் அமர்வதைத் தவிர்க்கப் பாருங்கள் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். பண இழப்பு, எதிர்பார்ப்பில் ஏமாற்றம், நெஞ்சுவலி, செரிமானக் கோளாறு, வீண்பழி, வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல், குடும்பத்தின் மீது பற்றின்மை வந்து நீங்கும்.

23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை குருபகவான் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் இந்த நட்சத்திரக்காரார்களுக்கு இக்காலகட்டத்தில் சிறு சிறு விபத்துகள், பொருள் இழப்பு, மறைமுக எதிர்ப்புகள், மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். காய்ச்சல், சளித் தொந்தரவு, வீண் அலைச்சல், டென்ஷன் வரக்கூடும்.
17.4.2024 முதல் 1.5.2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் அந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு அசதி, சோர்வு, மன இறுக்கம், ஏமாற்றம் வந்து போகும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
11.9.2023 முதல் 20.12.2023 வரை குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் செல்வதால் பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சார சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
வியாபாரம் மற்றும் வேலை
வியாபாரம் : மற்றவர்களின் ஆலோசனையை தவிர்த்து, சந்தை நிலவரங்களை அறிந்து கொண்டு புதுத் திட்டங்கள் தீட்டுங்கள். அதிக முதலீடுகளைத் தவிர்த்துவிடுங்கள். சிலரின் தவறான அறிவுரையால் நட்டப்படவேண்டியது வரும். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் சென்று உங்களை டென்ஷனாக்குவார்கள். தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். ஜூன் மாதம் மற்றும் பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். பக்கத்துக் கடைக்காரர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். ரியல் எஸ்டேட், உணவுக்கூடம், கெமிக்கல், ஏற்றுமதி இறக்குமதி, கமிஷன் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் அவ்வப்போது சலசலப்புகளும், ஒத்துழைப்பின்மையும் காணப்படும். என்றாலும் பெரியளவில் பாதிப்புகள் இருக்காது.

வேலை : மனப்போராட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், மேலதிகாரியின் ஒத்தாசையால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும். அவ்வப்போது உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று புழுங்குவீர்கள். சவால்களை, பிரச்சனைகளை சமாளிக்க புது தெம்பு பிறக்கும். புது வாய்ப்புகள் வரும்போது அவசரப்படாதீர்கள். அந்த நிறுவனத்தின் பலம் பலவீனத்தை அறிந்து முடிவெடுப்பது நல்லது. கௌரவப் பதவிகளால் ஓய்வெடுக்க முடியாதபடி உழைக்க வேண்டிய நிலை வரும். சக ஊழியர்கள் உங்களை எடுத்தெரிந்து பேசுகிறார்களே, என்று வருத்தப்படவேண்டாம். அதற்காக அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகள் மதிப்பார்கள். பதவியுயர்வுக்காகத் தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். ஜூன், பிப்ரவரி மாதங்களில் சம்பளத்துடன், சலுகைகளும் கூடும். ஆனால் அவ்வப்போது மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டி வரும். கணினித் துறையினருக்குப் புதிய நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரும். சம்பளம் உயரும்.
இந்த குருப்பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மாற்றமும் அவ்வப்போது குழப்பங்களையும், ஒருவித அச்சத்தையும் தந்தாலும், வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளையும், அனுபவ அறிவையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள தலம் திருலோக்கி. அகிலாண்டேஸ்வரியுடன் சுந்தரேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலம் குருபலம் அருள வல்லது. குடும்பத்துடன் இத்தலத்துக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; நன்மைகள் நடக்கும்.