வாசகர்களே!
கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை-கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களது வினாக்களுக்கு வாசகர்களிடம் இருந்தே பதில் பெறப்போகிறோம். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம் வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். அத்துடன், சக்தி விகடனின் ‘உதவலாம் வாருங்கள்’ முகநூல் பக்கத்திலும் தங்களது சந்தேகங்களை பகிரலாம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘ஸ்ரீ ராகவேந்திரரின் ஸ்தோத்திரமாலா’ எனும் புத்தகம் தேவைப்படுகிறது. சக்தி விகடன் வாசகர்கள் எவரிடமேனும் இருந்தால் கொடுத்து உதவுங்களேன்.
- வி.வைத்தியநாதசாமி, காரைக்கால்
ஸ்ரீஅண்ணா க்ருஷ்ணப்ரேம் இயற்றிய ‘வாசுதேவ ப்ரம்மம்’ என்ற புத்தகம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த புத்தகம் கிடைக்கும் இடம் குறித்து தகவலை வாசகர்கள் யாரேனும் தெரிவித்தால் மகிழ்வேன்.
- லலிதா நாகராஜன், மயிலாடுதுறை
‘பாலா திரிபுரசுந்தரி தீப...’ எனும் தீப ஸ்தோத்திரம் உண்டு. அந்த ஸ்தோத்திரமும், அதன் நமஸ்கார முறையையும் அறிய விரும்புகிறேன். இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தகவல் தாருங்களேன்.
- சரஸ்வதி, சென்னை. வி.சாந்தா, மதுரை

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த நாங்கள், பல தலைமுறைகளாக சொந்த ஊரை விட்டு வேறு வேறு ஊர்களில் வசிக்கும் நிலை ஏற்பட்டதால், எங்கள் குடும்பத்தில் யாருக்கும் கோத்திரம் போன்ற விவரங்கள் தெரியவில்லை. அதனால், அந்த விவரங்களை எப்படி தெரிந்துகொள்வது என்று கூறினால் உதவியாக இருக்கும்.
- புஷ்பலதா, ஐதராபாத்
எங்களுடைய பூர்விகம் பழைய வட ஆற்காடு மாவட்டம் (தற்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ள) கந்தாடை எனும் ஊர். கடந்த சில தலைமுறைகளாகவே, வேலை காரணமாக, எங்கள் குடும்பத்தினர் இந்த ஊரைவிட்டு, வேறு ஊருக்கு குடிபெயர்ந்தனர். கடந்த சில தலைமுறைகளாக நாங்கள் வேறு வேறு ஊர்களிலேயே வசித்து வருகிறோம். எனவே, எங்களின் குல தெய்வம் குறித்து தெரியாமல் போய்விட்டது. கந்தாடை எனும் அந்த ஊர் குறித்தும், அங்குள்ள கோயில் மற்றும் குல தெய்வங்கள் குறித்தும் தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால் பயனடைவேன்.
- எஸ்.பாலசுப்பிரமணியன், சென்னை-49
தேவாரத் திருத்தலங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் தேவைப்படுகின்றன. இது குறித்து தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.
- வடலூர் செல்லக்காமு, வீரபாண்டி

வி.ஐ.பி. பதில்கள்
*எனது கனவில் அடிக்கடி ஆஞ்சநேயர் வருகிறார். இப்படி தொடர்ந்து கனவு வருவதால் என்ன பலன்?
- கீதா முருகானந்தம், தஞ்சாவூர்
கனவில் தெய்வங்கள் வந்தால் நீங்கள் மிகப் பெரிய செயலைச் சாதிக்கப்போகிறீர்கள் என்று பொருள். அது எத்தகைய செயல்கள் என்பதை உங்களால் மட்டுமே உணர முடியும். அதை சாத்தியப்படுத்த உங்கள் கனவில் வந்த தெய்வமே அதற்கு உறுதுணையாகவும் இருப்பார். அதனால், அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று, தீபமேற்றி கீழ்க்கண்ட பாடலைப் பாடி வழிபடலாம்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு ; அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்
** வீட்டில் கடவுளை பூஜிப்பதற்கும், கோயிலுக்குச் சென்று இறைவனைத் தரிசிப்பதற்கும் என்னென்ன வேறுபாடு? இதில் எது சிறந்தது?
-சத்திய நாராயணன், சென்னை.

வீட்டில் குளிப்பது சிறந்ததா? கடலில், அருவியில், ஆற்றில் குளிப்பது சிறந்ததா எனக் கேட்பது போல் இருக்கிறது கேள்வி! வீட்டுப் பூஜை என்பது நமக்கும், நம் குடும்பத்துக்குமானது. ஆலய வழிபாடு என்பது பொது வழிபாடு. வீட்டில் பணம் தேவை, குறைந்த அளவுதான் இருக்கிறது. உடனே போய் ஏ.டி.எம்-ல் எடுக்கிறோம். அதுபோல், வீட்டுப் பூஜையுடன் கோயில் வழிபாடும் அவசியத் தேவை. உங்களுக்காக மட்டும் நீங்கள் வேண்டினால், உங்கள் வீட்டிலேயே வேண்டிக்கொள்ளுங்கள். பிறருக்காகவும் வேண்டிக்கொள்ள விரும்பினால் ஆலயத்துக்கும் செல்லுங்கள்.
** சிவனுக்கு பிரதோஷமும், விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியும் சிறப்பான நாட்களாக வருவது ஏன்?
-எம்.செல்லையா, சாத்தூர்
சிவன் ஆலகால விஷம் உண்டபோது, ‘இவருக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ?’ என அனைவரும் பயந்ததால் சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கும் இடையில் நடனமாடி அவர்களின் மனக் கவலையை நீக்கினார். இதை முன்னிட்டே பிரதோஷத்தன்று நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே சிவபெருமானைத் தரிசிக்கிறோம். வளர்பிறை சதுர்த்தி தேவி பெருமை பெற்றதை எண்ணி, தேய்பிறை சதுர்த்தி தேவியானவள் தானும் விநாயகரை வழிபட்டு வரம் பெற்ற திருநாளே சங்கடஹர சதுர்த்தி திருநாள். சரி, சந்திரனுக்கும், சங்கடஹர சதுர்த்திக்கும் என்ன தொடர்பு?
சந்திரன் ஒருமுறை விநாயகரைப் பார்த்து இகழ்ச்சி தோன்ற நகைத்தான். அதன் பயனாக சாபமும் பெற்றான். பிறகு விநாயகரை வணங்கி தன் சங்கடம் தீரப் பெற்றான். அவன் சங்கடம் தீரப்பெற்ற அந்த நாளில், சந்திர உதயத்தில் சதுர்த்தி திதி இருக்கும்போது, நம் சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுவது உகந்தது; நல்ல பலனைத் தரும்.

உதவிக்கரம் நீட்டியவர்கள்...
சக்தி விகடன் 22.12.15 தேதியிட்ட இதழில், இழந்த பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கு அருள் பாலிக்கும் கார்த்தவீர்யார்ஜுனன் தெய்வத்தின் படம், அவரை வழிபடும் நியதிகள் மற்றும் அந்த தெய்வம் தொடர்பான இன்னும் பிற தகவல் களும் தேவைப்படுவதாக சேலம் வாசகர் கே.ராதாகிருஷ்ணன் கேட்டிருந்தார்.
இதைப் படித்துவிட்டு வாசகர்கள் பலரும் தகவல்கள் தந்திருந்தனர். அவற்றை இந்த பகுதியில் வெளியிட்டிருந்தோம். தற்போது, ‘மேலப்பாவூர் ஸ்ரீகார்த்தவீரியார்ஜுன ஸ்வாமி சேவா சமாஜ்’ அமைப்பினரும் அந்த தெய்வத்தின் படத்தை அனுப்பி வைத்திருந்தனர். அத்துடன் ஸ்ரீகார்த்தவீரியார்ஜுன ஸ்வாமி குறித்த மேலும் விவரங்கள் அறிவதற்குத் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தொலைபேசி எண்ணையும் அளித்திருக்கிறார்கள் (9791192040). ஸ்வாமியின் திருவுருவப் படம் சம்பந்தப்பட்ட சேலம் வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.