
தமிழரின் தனிப்பெருங்கடவுளான முருகப்பெருமானின் வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும் சேவலும். இவை இரண்டும் பிரணவத்தின் தத்துவமென்று தத்துவ நூல்கள் கூறுகின்றன.
முருகன் தேவேந்திரலோகத்தில் சிம்மாசனத்தில் அரசராக வீற்றிருப்பவர். எனவே, அவருக்குச் செங்கோல் உரித்தாகுகிறது. மயில் வடிவத்தை உச்சியில் கொண்ட தண்டமே முருகனின் செங்கோலாக விளங்குகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மயில் நாகங்களைக் கடிவாளமாகவும், ரத்தினத்தாலான சேணத்தையும் கொண்டிருக்கிறது. பழநியில் உள்ள மயில்களில் அழகிய கடிவாளமும் சேணமும் சித்திரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் விழா `மயூர வாகன சேவை' என்று சிறப்புடன் போற்றப்படுகிறது.
மயில் தோகையை விரித்து நிற்பது ஓங்காரமாகத் தோன்றுகிறது. அதன்மீது மந்திர ரகசியங்களின் தலைவனாகக் குகன் எழுந்தருள்கிறான். இக்காட்சியே குக ரகசியம், தகராலய ரகசியம் எனப்படும்.
சிவபெருமானுக்கு வேதம் எவ்வாறு விடை வாகனமாக இருக்கிறதோ அவ்வாறே முருகனுக்கு வேதம் மயிலாகத் திகழ்கிறது.
திரிபுரகனத்தின் போது, திருமால் தன் மைத்துனனான சிவபெருமானை இடப வடிவம்கொண்டு தாங்கினார். அதுபோல சூரசம்ஹாரத்தின்போது, முருகனின் மாமனான இந்திரன், மயில் வடிவம்கொண்டு தன் மருமகனைத் தாங்கினார்.