தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

தைப்பூச தரிசனம்! - குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்!

தைப்பூச தரிசனம்! - குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்!
பிரீமியம் ஸ்டோரி
News
தைப்பூச தரிசனம்! - குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்!

தைப்பூச தரிசனம்! - குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்!

சனின் ஆறு முகங்களில் உள்ள நெற்றிக்கண்களின்  வழியே அருள்சுடராக வந்துதித்தவன் முருகன். எங்கும் நிறைந்த பரப்பிரம்மத்தின் எழில் வடிவமாகத் தோன்றி கலியுகவரதனாகச் சகலரையும் காத்து ரட்சிப்பவன் முருகப்பெருமான். மூன்று சக்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாகத் தோன்றுபவன் குமரன். கந்தனை வணங்கினால் காலமே நம்மைக் கைதொழும் என்பார் வாரியார் ஸ்வாமிகள்.  தமிழர்களின் ஆதித் தெய்வமான முருகப்பெருமான் குழந்தை வடிவில் அருளும் தலங்களுள் அழகானது பாலமதி. 

தைப்பூச தரிசனம்! - குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்!

குறிஞ்சி நிலத்தெய்வமான குமரன், வேலூர் மாவட்டத்தில் மலைகள் சூழ்ந்த பல தலங்களில் குடிகொண்டுள்ளான். அவற்றில் ஒரு திருத்தலம், வேலூரிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள பாலமதி.இங்கு கடல் மட்டத்திலிருந்து 1800 அடி உயரத்தில் உள்ள பாலமதி மலைக்குன்றில் குழந்தை வேலாயுத ஸ்வாமி ஆலயம் உள்ளது.

தைப்பூச தரிசனம்! - குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்!



சென்னையிலிருந்து காஞ்சிபுரம், காவேரிப்பாக்கம், ஆற்காடு மார்க்கத்தில் பயணித்து, ஆரணி அருகிலுள்ள கண்ணமங்கலம் வழியே பாலமதி மலையை அடையலாம்.  எட்டு கொண்டை ஊசி வளைவு களைக் கொண்ட இந்த மலை மீது பயணிப்பதே அலாதியான சுகத்தை அளிக்கும். மலைமீது பயணத்தை முடித்ததும் அழகிய ராஜகோபுரம் நம்மை வாவென்று வரவேற்கிறது. காண்பவரைக் கரைசேர்க்கும் அற்புதத் தோணியாம் குழந்தை வேலாயுதனை தரிசிக்க படிகள்  கடந்து கோயிலுக்குள் நுழைந்தால், வலது புறம் வலம்புரி விநாயகரும் இடது புறம் விசிறி சுவாமியாரும் வீற்றிருக்கிறார்கள்.

அவர்களை வணங்கிவிட்டு உள்ளே நுழையச் சிலிர்த்துப்போகிறோம். வேலேந்திய தேவசேனாபதி இங்கு குழந்தையாக, குளுமையாக அருள் கிறார். பார்க்கப் பார்க்க பரவசம் அள்ளித்தரும் இந்த பாலமுருகனை நாள்முழுவதும் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்... அவ்வளவு அழகு.

`மு' எனும் முகுந்தனும், `ரு' எனும் ருத்திரனும், `க' எனும் கமல வாசனும் (பிரம்மா) இணைந்த பிரமாண்ட வடிவம் இங்கே குழந்தை யாகக் காட்சியளிக்கிறது. ராஜ அலங்காரத்தோடு புன்முறுவல் காட்டி அருளும் இந்த முருகப்பெருமான், இந்த மலைக்கு வந்த திருக்கதையை மிகச் சரியாக சொல்லமுடியவில்லை. எனினும், அங்கிருந்த ஆன்மிகப் பெரியோர்கள் சில ஆன்மிக விளக்கங்களைச் சொன்னார்கள்.

`பாலமதி என்ற திருநாமம் இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. பால என்றால் குழந்தை; மதி என்றால் சந்திரன், சந்திரன் குழந்தையாக வழிபட்ட தலமாக இருக்கலாம். பால என்று வடமொழியில் உச்சரித்தால் நெற்றி (கபாலம்). நெற்றியில் பிறையை அணிந்த முருகன் என்றும் பொருள் கொள்ளலாம்' என்பது அவர்களின் விளக்கம். இந்த முருகனை வணங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தைப்பூச தரிசனம்! - குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்!

நூறாயிரம் ஆதித்யர்கள் ஒருங்கிணைந்த பிரகாசத்தைக் கொண்டவன் முருகன். முருகன் ஒரு தொகுப்பு தெய்வம் என ஆன்மிக நூல்கள் கூறும். அதாவது, முருகனின் ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு கடவுளின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தரும் என்பார்கள். பிரம்மனின் அறியாமையை நீக்கி சிவகுருநாதனாகவும் காட்சியளித்து லீலை புரிந்த குழந்தை வேலவனை தரிசித்து விட்டு திருக்கோயிலை வலம் வந்தோம்.

அழகிய உற்சவர் இரு தேவியரோடும் காட்சி தர மனம் குளிர தரிசித்தோம். பின்னர் உள் பிராகாரத்தை வலம் வருகையில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்,  திருஞான சம்பந்தர், அருணகிரி நாதர், பாம்பன் ஸ்வாமிகள், தேவியர்களோடு கூடிய நவகிரகங்கள், சிவலிங்கங்கள் எனப் பல சந்நிதிகளை தரிசித்து வணங்கி வெளிவந்தோம்.

ஆலயத்தின் வெளிப்புறம் மலையின் வலது புறம் ஒரு பாறையின் மேல் வளர்ந்து உள்ள பெரிய ஆலமரம் ஓர் அதிசயம் எனலாம். ஆலயத்தின்  தென்புறத்தில் இரண்டு வற்றாத சுனைகள் உள்ளன. இச்சுனைகளின் நீர் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் உள்ளது.

இதனால் இவற்றை வள்ளி, தெய்வானைச் சுனைகள் எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆலயத்தின் வலது புறமாக சமீபத்தில் ஸித்தியான ஸ்ரீராமகிருஷ்ண சாது அவர்களின் ஜீவசமாதி எழுப்பட்டு வருகிறது. யார் இந்த சாது என்று விசாரித்தோம். ஒரு நெகிழ்ச்சியான வரலாறே கிடைத்தது.

தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் புதிய பொலிவுடன் திகழக் காரணமாக இருந்தவர் இந்த மகான். இவரே இந்த கோயிலை நிர்வகித்து, படிப்படியாக உருவாக்கி நமக்கு தந்தவர். எளிமையான தோற்றத்துடன் ஒரு ஆன்ம ஞானிக்குரிய இலக்கணத்துடன் வாழ்ந்து ஜீவன் முக்தியை அடைந்தவர் இவர் என இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். 

தைப்பூச தரிசனம்! - குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்!

ஸ்ரீராமகிருஷ்ண சாது 1930-ம் ஆண்டு நீலகிரிப் பகுதியில் பிறந்தார். சிறுவயது முதலே ஆன்மிக விஷயங்களில் நாட்டம் கொண்டு வளர்ந்து வந்தார். உள்ளொளிப் பெருக்கி, உண்டியைச் சுருக்கி, உலகத்து உயிர்களை யெல்லாம் நேசித்து உவப்பிலா ஆனந்தம் பெற்று வாழ்ந்தார். இறைவனின் பெருங் கருணையால் கனவில் தரிசனம் பெற்றநிலையில், அவருக்கு பாலமதி மலைக்குச் செல் என்ற உத்தரவும் வந்தது. எங்கெங்கோ விசாரித்தும் அவருக்கு பாலமதி எங்கிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை.

இந்நிலையில் ஒருமுறை திருப்பதிக்குச் சென்றார் சாது ஸ்வாமிகள். அங்கு பாலமதி யைச் சேர்ந்த ஒரு அன்பரைச் சந்தித்து அந்த தலத்தின் பெருமைகள் அறிந்து அவரோடு இங்கு வந்தார். 1971-ம் ஆண்டு தனது 41-ம் வயதில் வந்த ஸ்வாமிகள், 47 ஆண்டுகள் இங்கேயே வாழ்ந்து சிதிலமடைந்துக் கிடந்த இந்த குழந்தை வேலாயுத ஸ்வாமி ஆலயத்தைப்  புனரமைத்தும் கொடுத்தார். முதன்முதலில் இங்கு வந்தபோது ஸ்வாமிகளுக்கு முருகப் பெருமான் குழந்தை வடிவில் காட்சி தந்து அருள்செய்தாராம். அதே வடிவிலேயே முருகப் பெருமான் திகழ, அவன் கோயிலுக்குத் திருப்பணி செய்யவேண்டும் என்று விரும்பி அதற்கான செயல்களைத் தொடங்கினார். 

தைப்பூச தரிசனம்! - குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்!

தனது கழுத்தில் ஒரு உண்டியலைச் சுமந்து ஊரெங்கும் திரிந்து பணம் வசூல் செய்திருக் கிறார். மக்களிடையே இவர் புரிந்த அதிசயங்கள் இவரை உண்டியல் சித்தர் என்ற புகழத் தேடித் தந்தது. இவரிடம் வந்தவர்கள் சகல நன்மைகளும் அடைந்தனர். இதனால் பெருகிய செல்வங்களைக் கொண்டு இந்த ஆலயத்தை எழுப்பினார். எளியோர்க்கு எளியராக வாழ்ந்த இந்த சாது ஸ்வாமிகள் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி இந்த ஆலயத்துள்ளேயே ஜீவசமாதி அடைந்தார். ஆலய வெளிப் பிராகாரத்தில் இவருக்கான மணிமண்டபம் உருவாகி வருகிறது

பாலமதி மலையின் வலதுபுறமாக காரமலை என்ற மலையும் தெற்கு பகுதியில் பெருங்காமலை என்ற மலையும் அமைந்துள்ளன. பாலமதி மலையைச் சுற்றி பல குன்றுகள் அமைந்து மிக ரம்மியமாக அமைந்துள்ளன. கோயிலில் இருந்து பின்புறமாக வேலூர் சாலை செல்லும் பாதையில் இறங்கும்போது, அழகிய இயற்கை காட்சிகளை தரிசிக்கலாம். அழகு என்றாலே முருகப்பெருமான் என்பதால் இந்த பாலமதியே முருகப்பெருமானின் வடிவமாகித் திகழ்கிறது என்றே சொல்லலாம்!

வரும் தைப்பூசத் தினத்தன்று (21.1.19) பாலமதி குழந்தை வேலாயுத ஸ்வாமி ஆலயத்தில் வெகு விமர்சையான விழா நடைபெறவுள்ளது. அன்பர்கள் சென்று பாலமுருகனை தரிசித்து இன்புறலாம். 

மு.ஹரி காமராஜ் - படங்கள்: வெங்கடேசன், ச.மஹாவீர்