ஏழு தலைமுறைக்கும் அருளும் ஏழைப் பிள்ளையார்!


திருச்சி என்றாலே மலைக்கோட்டையும், அதன் உச்சியில் அற்புதமாகக் காட்சி தரும் ஸ்ரீஉச்சிப்பிள்ளையாரும்தான் நம் நினைவுக்கு வருவார்கள். இந்த மலையை வலம் வந்து பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் ஏராளம். அப்படி கிரிவலம் வரும்போது, உச்சிப்பிள்ளையாரையும் சேர்த்துப் பன்னிரண்டு விநாயகர்களைத் தரிசிக்கலாம்.
இவர்களில்... ஏழாவதாக அமைந்துள்ள விநாயகர் ரொம்பவே விசேஷம்! ஏழாவது விநாயகர் என்றே ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட இந்தப் பிள்ளையாரை, காலப்போக்கில் பக்தர்கள் 'ஏழை விநாயகர்’ என அழைக்கத் தொடங்கியதாகச் சொல்வர்.
இந்த ஆலயத்தின் இன்னொரு விசேஷம்... விநாயகர் மட்டுமே குடிகொண்டிருக்கிற கோயில் இது. இவர் தவிர, நாகர் விக்கிரகங்கள் அமைந்துள்ளன. ஆனாலும், இந்தக் கோயிலை சப்தரிஷீஸ்வரர் ஆலயம் என்று சொல்கிறார்கள்.
சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தபோது, விநாயகப் பெருமான் அவர்களுக்குச் சிவ- பார்வதியாகக் காட்சி தந்ததாகச் சொல்வர். எனவே, இது ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறதாம். அதேபோல், ஏழாம் எண்காரர்கள் கட்டாயம் வந்து வணங்கவேண்டிய பிள்ளையார் இவர் என்றும் சொல்லிச் சிலாகிக்கின்றனர், பக்தர்கள்.

உலகையே மயக்கும் வல்லமை நம்மிடம் மட்டுமே உள்ளது என்று சப்த ஸ்வர தேவதைகள் ஒருமுறை கர்வம் கொண்டன. இதனால் கோபமுற்ற ஸ்ரீசரஸ்வதி தேவி, அவர்களுக்குச் சாபமிட்டாள். இதில் நொந்துபோன தேவதைகள் தங்களை மன்னித்து அருளும்படி தேவியிடம் வேண்டினர். 'உச்சியில் உள்ள விநாயகரையும், மலையைச் சுற்றியுள்ள 12 விநாயகர்களில் ஏழாவது விநாயகரையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், சாப விமோசனம் பெறுவீர்கள்’ என அருளினாள் கலைவாணி. அதன்படியே, சப்த ஸ்வர தேவதைகளும் வணங்கித் தொழுது வரம் பெற்ற தலம் இது. எனவே, ஏழாவது பிள்ளையார் எனப்படும் ஏழைப் பிள்ளையாரை வணங்கித் தொழுதால், சங்கீத ஞானம் கிடைக்கப் பெறலாம் என்பது உறுதி! ஏழு ஸ்வரங்கள் வணங்கியதன் அடையாளமாக இங்கு ஏழு மணிகள் அமைக்கப்பட்டுள்ளன.
##~## |
மாணவ- மாணவிகள், இங்கு வந்து ஏழை விநாயகரைக் கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்தால் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கலாம் என்பது நம்பிக்கை.
தெற்கு திசை நோக்கிக் காட்சி தரும் ஏழைப் பிள்ளையாரைத் தரிசித்தால், எம பயம், எம வாதனைகள் ஆகியவை விலகும்; மலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதாயுமானவரையும் அன்னையையும் பார்த்தபடி பக்தர்களுக்குக் காட்சி தருவதால், இந்த விநாயகரை வணங்கினால், கருத்து வேற்றுமை கொண்ட தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ்வார்கள்; பிரிந்தவர்களும் ஒன்று சேருவர் என்பது ஐதீகம்!
பிரார்த்தனை நிறைவேறிய அன்பர்கள், விநாயகருக்கு அபிஷேகம் செய்து, அருகம்புல் மாலை சார்த்தி, சிதறுகாய் உடைத்து தங்களது நேர்த்திகடனைச் செலுத்துகின்றனர்.
விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்துப் பிரார்த்தனை செய்வதும் இங்கு விசேஷம்!
- ச.மஞ்சுளா
படங்கள்: தே.தீட்ஷித்