நவராத்திரி மகிமைகள்..!

##~## |
உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல் மாநிலங்களில் 'ராமலீலா’ என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில், ராவணன் மீது ஸ்ரீராமர் அம்பு எய்து, தீயவை அழிக்கப்படுவதாகச் சொல்வது சிறப்பம்சம்.
கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயி லில் விஷ்ணு துர்கை எனப்படும் அஷ்டபுஜ துர்காதேவி அருள் புரிகிறாள். எட்டுக் கரங்களுடன் உள்ள இந்தத் துர்கையின் ஒரு கையில் கிளி இருப்பதுதனிச்சிறப்பு.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது பரவூர் எனும் திருத்தலம். இங்கே வெண்தாமரை பூத்துக் குலுங்கும் ஒரு சதுரக் குளத்தின் நடுவே அமைந்துள்ளது மூகாம்பிகா எனும் சரஸ்வதி கோயில். இவளை தட்சிண மூகாம்பிகா என்றும் கூறுகிறார்கள். குளத்தின் நடுவே உள்ள கோயிலுக்குச் செல்ல சிறிய பாலம் உள்ளது. இங்கே தினமும், இரவு நடை சாத்தும் முன்பு மூலிகைகளைக் கொண்டு தயாரித்த கஷாயத்தைப் பிரசாதமாகத் தருகிறார்கள். இதை வாங்கி உட்கொண்டால், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும் என்பது ஐதீகம்.

கல்விக்கு அதிபதி சரஸ்வதி. சரஸ் என்றால் 'பொய்கை’ என்றும், வதி என்றால் 'வாழ்பவள்’ என்றும் பொருள். சரஸ்வதி என்றால் 'மனம் எனும் பொய்கையில் வாழ்பவள்’ என்று பொருள்.
உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் நவராத்திரி விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின் ஒன்பது நாட்களும் கிருஷ்ணரையே துர்கையாக பாவித்து வழிபடுகிறார்கள். அப்போது, ஒவ்வொரு நாளும் ஒரு புடவை உடுத்தி ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்கிறார்கள்.
துர்கை என்றால் 'அகழி’ என்றும் பொருள். அதாவது, அடியார்களுக்கு அகழி போல் அரணாக இருந்து அவர்களைப் பாதுகாப்பவள். துர்க்கமன் என்ற அரக்கனைக் கொன்று அடியார்களைக் காத்ததால், நாம் அவளை துர்கை என்று அழைக்கிறோம். மூன்று சக்திகளின் ஒன்றிய வடிவமாகத் தோன்றியவள் துர்கை. துர்கையைத் தமிழில் 'கொற்றவை’ என்பர். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கு உரியதாகும்.
தொகுப்பு: ஜி.ஜெயலக்ஷ்மி, நெ.இராமன்,
ஆர்.ஜெயலட்சுமி, ஆர்.சௌமியா