அமுத மொழிகள்!
நித்யம் வேதத்தை ஓது. அந்த வேதத் துக்கு இணங்க, கர்மத்தை நன்றாகச் செய்யுங்கள். அந்தக் கர்மானுஷ்டத்தைக் கொண்டே ஈசனை பூஜியுங்கள். இவற்றைத் தவிர, வேறு காம்ய பலனில் புத்தியைச் செலுத்தாதீர்கள். ஆசையற்ற பூஜையினால், தன்னல பற்றிலிருந்து விரைவில் மீண்டு வாருங்கள்.
நல்லவர்களிடத்தில் உறவும் நட்பும் கொள்ளுங்கள். அசையாத அன்பை நிலை நிறுத்துங்கள். புலன்களை அடக்குதல் முதலான உத்தமக் குணங்களைத் தீவிரமாகப் பழகிக்கொள்ளுங்கள்.
ஆத்மஞானியரைக் குருவாக நாடி அவரது திருவடித்தொண்டை இடையறாமல் மேற்கொள்ளுங்கள். வேதத்தின் முடிவான பொருளைக் கூறும் வாக்கியங்களைக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

வீணான தர்க்க வாதங்களில் ஈடுபட வேண்டாம். வேதத்தின் முடிவான பொருளை அடைவதற்குரிய நியாயமான காரணங்களை மட்டும் நன்கு ஆலோசித் துக்கொள்ளுங்கள்.
எங்கும் நீக்கமற நிறைந்த பரம் பொருளே, இந்த உடலில் `நான்' எனும் அறிவுப் பொருளாக நிற்கிறது என்ற உண்மையை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள்.
நான் ஞானவான் என்ற கர்வத்தை விட்டொழியுங்கள். `நான்' எனும் எண்ணத்தை விலக்குங்கள். படித்த மேதாவிகளுடன் வாதம் செய்ய வேண்டாம். நாள்தோறும் பிடிக்கும் பசி எனும் பிணிக்கு, பிக்ஷையாம் அன்னத்தை மருந்தாக உட்கொள்ளுங்கள். ருசியுள்ள உணவைத் தேடாதீர்கள். தெய்வப் பற்றினால் கிடைத்ததைக் கொண்டு மகிழ்ந்திருங்கள்.
(ஸ்ரீஆதிசங்கரரின் அருளிய ஞான நூல்களிலிருந்து...)
- வேதநாயகி, சென்னை-45
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘கடவுள் எங்கே?'
சீடன் ஒருவன் குருவிடம் கேட்டான்:
‘`கடவுள் எங்கே இருக்கிறார்?''
பதிலுக்குக் குரு, சீடனிடம் கேள்வி கேட்டார். ``சீடனே, ஒரு டப்பாவில் உள்ள மாவை எடுக்க வேண்டும் என்றால், நீ என்ன செய்வாய்?''
சீடன், கரண்டிகள் உள்ள இடத்துக்குச் சென்று ஒரு கரண்டியை எடுத்து வந்து, அதை மாவு டப்பாவில் போட்டான்.
அடுத்து, ``மரத்திலுள்ள முருங்கைக்காயை பறிக்க என்ன செய்வாய்?'' என்று குரு கேட்க, சீடன் நீளமான ஒரு துரட்டியை எடுத்து வந்து, முருங்கைக்காயைப் பறித்தான்.
இப்போது குரு கேட்டார்: ``இதிலிருந்து நீ என்ன புரிந்துகொண்டாய்?''
‘`ஐயனே, கடவுள் எங்கும் இருக்கிறார். நாம் நினைக்கும்போது, நாம் நினைக்கும்
பொருளாக, உருவாக அவர் நம்மிடம் வந்து சேருவார் என்ற உண்மையை, உங்களின் மேலான போதனையால் புரிந்துகொண்டேன்'' என்ற சீடன் குருவுக்கு தன் நன்றியையும் காணிக்கை ஆக்கினான்.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை;
ஓவியம்: ரமணன்

விவேகானந்தரைக் கண்ட தாகூர்
ரவீந்திரநாத் தாகூருக்கு 30 வயது இருக்கும்போது, நண்பர் ஒருவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் நரேந்திரரைப் (விவேகானந்தர்) பற்றி எழுதியிருந்தார். தீர்க்கதரிசனம் வாய்ந்த அந்தக் கடிதத்தின் வரிகள்...
`நடுநடுவே ஊருக்குப் போய் நிலபுலன்களைக் கவனித்துக்கொள்கிறேன். இயற்கை அன்னையின் அருள் முற்றும் கிடைக்கிறது. இசைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இன்னும் ஒன்று, சமீபத்தில் கல்கத்தா போயிருந்தேன். அங்கே மகரிஷியின் தந்தையுடன் பிரம்ம சமாஜ கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
தூப மணம் கமழும் கூடத்தில் எல்லோரும் மகரிஷியின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். பின்னர், அவர் உள்ளே நுழைந்ததும் சுற்றிலும் பார்த்துவிட்டு ‘எங்கே நரேந்திரனைக் காணவில்லையே’ என்றார். அதேநேரம் ‘நமஸ்காரம்’ என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். நெடிய உருவமும், பரந்த அழகிய முகமும், விசாலமான கண்களும் கொண்ட ஒரு வாலிபர் நின்றிருந்தார். பணிவுடனும், புன்சிரிப்புடனும் மகரிஷியின் கால்களைத் தொட்டு ஒற்றிக் கொண்டார். அந்த முகத்தை என்னால் மறக்கவே முடியாது.
மகரிஷியுடன் எல்லோரும் ரத்தினக் கம்பளத்தில் அமர்ந்தோம். ‘நரேன் ஆரம்பிக்கிறாயா?’ என்றார் மகரிஷி. வாலிப நரேந்திரர் கைகூப்பி வணங்கிவிட்டு, தம்பூராவை மீட்டியபடி ‘ஹே நிராகார பரப்பிரம்ம’ என்ற பிரம்ம கீதத்தை மிகவும் உருக்கமாகக் கல்யாணி ராகத்தில் பாடலானார். மகரிஷி கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தார். அது தெய்விக அனுபவம் என்றுதான் சொல்வேன். சபை கலைந்து, நரேந்திரர் என்ற அந்தக் கல்லூரி மாணவர் புறப்படும் வரை, கண்கொட்டாமல் எல்லோரும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். அவருடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று என்னுள்ளே ஏதோ ஒன்று சொல்கிறது!'
- ஆர்.சி.சம்பத், ஓவியம்: ரமணன்

வாய் வினைகள் நீங்கிட...
`யாகாவாராயினும் நாகாக்க...' என்பது வள்ளுவன் வாக்கு. அறிந்தோ அறியாமலோ நாம் சொல்லும் கடுஞ்சொற்கள், நமக்குப் பெரும் பாவத்தை அளிக்கும் என்கிறார்கள் பெரியோர்கள்.
முறைதவறிப் பேசுதல், அடுத்தவர் மனம் புண் படும்படி பேசுதல் முதலானவை கல்விக் கடவுளாம் கலைவாணியையே பழிக்கும் செயலாகும். இப்படியான செயல்களால் பேச்சுவன்மையை இழக்கும் நிலையும் ஏற்படலாம் என்கின்றன ஞானநூல்கள்.
சரி! பேச்சால் ஏற்பட்டுவிட்ட தோஷங்களைப் போக்க என்ன செய்யலாம்? இனி, அப்படிப் பேசுவது இல்லை என்று சங்கல்பித்துக்கொள்வதே முதல் பரிகாரம். அடுத்து, இதற்கு விமோசனம் தரும் வழிபாடுகளைப் பார்ப்போம்.
வேதாரண்யம் சிவாலயத்தில், `யாழைப் பழித்த மொழியாள்' எனும் திருப்பெயருடன் அருள்கிறாள் அம்பிகை. நவமி, புனர்பூச, புதன்கிழமை ஆகிய நாள்களில் இந்தத் தலத்துக்குச் சென்று, சரஸ்வதி தேவிக்கும் அம்பிகைக்கும், 12 தைலங்கள் சேர்ந்த கூட்டுத் தைலத்தால் 64 தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். அத்துடன், முழு முந்திரிப் பருப்பு கலந்த பால் பாயசத்தைத் தானம் அளிக்கவேண்டும்.
இதன் மூலம், நம்மையுமறியாமல் நாம் பேசிய வன்சொற்களால், கடுமையான பேச்சுகளால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
அதேபோல், அடிக்கடி அபசகுனமாகப் பேசுவோர், மற்றவர்களைப் பேச்சால் அவமதிப்பவர்கள், தீயச் சொற்களை அதிகம் பயன்படுத்துவோர் ஆகியோருக்கு `மிருத்யு' தோஷங்கள் நிறையச் சேர்ந்து விடுமாம். இப்படியானவர்கள், இனி அதுபோன்று பேசுவது இல்லை என்று தீர்மானித்துக் கொள்வது அவசியம்.
மேலும், மரண யோகம் வரும் நாளில் முதலாவது காலகட்டத்தில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை இடை விடாது ஓதி சிவனாரை வழிபடவேண்டும்.
இந்த மந்திரத்தைக் கூறி வழிபட இயலாதவர்கள், தமிழ்ப் பாடல்களைப் பாடி வழிபடலாம்.
அந்த வகையில், தேவாரத்தில் திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடவூர் மயானத் துதிகளையும், அப்பர் சுவாமிகளின் ‘போற்றித் திருத்தாண்டகம்’ பாடல் களையும் பாடி சிவனாரை தியானித்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும்; சந்தோஷம் பெருகும்.
- ஞான ரமணன், சென்னை-70