தெய்வப் புலவரை வணங்கினால்... தேர்வில் வெற்றி நிச்சயம்!


##~## |
சென்னை- மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலை அடுத்து சில நிமிட நடை தூரத்தில் ஸ்ரீமுண்டகக்கண்ணி அம்மன் கோயில். அதையடுத்து அமைந்துள்ளது திருவள்ளுவர் ஆலயம். 11-ஆம் நூற்றாண்டில், காசி மன்னரால் எழுப்பப்பட்ட ஆலயம் இது. சிவஞான முதலியார் என்பவர், 1948-ஆம் வருடத்தில் இந்த ஆலயத்துக்குப் பொறுப்பேற்று நிர்வகித்து, திருவள்ளுவருக்கு பூஜைகள், ஆராதனைகள் செய்து வந்தாராம். இன்றளவும், தமிழகம் முழுவதிலும் இருந்து எண்ணற்ற பக்தர்கள் இங்கு வந்து வள்ளுவப் பெருந்தகையை வணங்கிச் செல்கின்றனர்.
வள்ளுவர் பிறந்தது இலுப்பை மரத்தின் அடியில் என்கின்றனர். செப்புத் தகடுகள் அமைக்கப்பட்டு, இரும்புக் கம்பிகள் சூழப் பாதுகாக்கப்பட்டு, வணங்கப்பட்டு வருகிறது அந்த மரம். கருவறையில், நீண்ட தாடியும் முடிந்த குடுமியுமாக, திருக்கரங்களில் எழுத்தாணியும் சுவடியும் கொண்டு அற்புதமாகக் காட்சி தருகிறார் திருவள்ளுவர். அவருடைய துணைவியார் வாசுகி அம்மையும் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

வைகாசி மாதம், அனுஷ நட்சத்திரத்தில் வள்ளுவர் அவதரித்ததாகச் சொல்வர். எனவே, இந்த நாளில் வள்ளுவருக்கு அபிஷேக - ஆராதனைகள் அமர்க்களப்படுமாம். சித்ரா பௌர்ணமியில்,வள்ளுவர்- வாசுகிதேவிக்கு திருமண வைபவத் திருவிழா!
பத்தாம் வகுப்பு முதல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். லட்சியம் உள்ளவர்கள் உட்பட, ஏராளமான அன்பர்கள் இங்கு வந்து வள்ளுவருக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து வழிபட்டுச் செல்கின்றனர். மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, திருவல்லிக்கேணி என சென்னையில் உள்ள மாணவர்கள் பலரும், தேர்வுக் காலங்களில் புத்தகங்களை எடுத்து வந்து, இங்கு அமர்ந்து படிப்பதைக் காண முடிகிறது.
திருவள்ளுவரை வணங்கி, அவரது சந்நிதிக்கு அருகில், அவருடைய கோயிலில் அமர்ந்து படித்தால், மனதுள் அமைதி நிலவுகிறது; பாடங்கள் மனதில் பதிகின்றன; தேர்வில் அதிக மார்க் எடுப்பது சுலபமாகிறது எனப் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர், மாணவர்கள். திருவள்ளுவர் கல்வி வரம் வழங்க... கல்யாண வரம் தந்தருள்கிறார் வாசுகி அம்மை.
தெய்வப் புலவரை வணங்குங்கள்; தேர்வில் வெற்றி நிச்சயம்!
- க.நாகப்பன் படங்கள்: பு.நவீன்குமார்