
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- சு.முருகேசன், அரிக்காரம்பாளையம்
சங்க காலப் புலவர் ஒட்டக்கூத்தர் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். அவரைப் பற்றிய விரிவான தகவல்கள் கொண்ட புத்தகம் எனக்குத் தேவைப் படுகிறது. ஒட்டக்கூத்தர் எங்கே திருச்சமாதியாகி இருக் கிறார் என்கிற தகவலும் வேண்டும். இதோடு, 'சாயாபுருஷ தரிசனம்’ என்றால் என்ன என்பதை அறியவும் ஆவலாக உள்ளேன். தகவல் தெரிந்தவர்கள் எனக்கு உதவலாமே..?
- சாது முத்துக்குமாரசுவாமி, பெரியசாமிமடம்
பவிஷ்ய புராணம், வராக புராணம், கர்ம விவாகம் மற்றும் சாந்தி ரத்னாகரம் என்கிற பரிகார புத்தகம் ஆகியவை எனக்குத் தேவைப்படுகின்றன. இவற்றை பிரபல எழுத்தாளர்கள் எழுதியிருக்க வேண்டும். எந்தப் பதிப்பகத்தார் இந்தப் புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார்கள், அவற்றை எங்கே வாங்கலாம் ஆகிய விவரங்கள் தெரிந்தவர்கள் எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
- ஏ.ஆர்.ஆர்.சுதர்ஸணன், சென்னை-26
ஸ்ரீராமர், சீதை, ஆஞ்சநேயர், லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னன் - இவர்களின் கவசங்களைப் படித்தால் கஷ்டங்கள் தீரும் என்று கேள்விப்பட்டேன். மேலும், இவை ஆனந்த ராமாயணத்தின் இணைப்புப் பகுதி என்றும் அறிகிறேன். மேற்படி கவசம் தனியாகவோ அல்லது ஆனந்த ராமாயணத்துடன் இணைந்தோ எங்கு கிடைக்கும் என்று தெரிவித்தால் மிகவும் மகிழ்வேன்.
- சுபத்ரா பாஸ்கர், சென்னை-20
எங்கள் வீட்டுக் குழந்தைக்குச் சமீபத்தில் கண்ணில் சிறு குறை ஒன்று ஏற்பட்டது. அதற்குப் பரிகாரம் செய்ய, சிவபெருமானை சூரிய பகவான் வழிபாடு செய்த கோயிலுக்கு செல்லுமாறு பெரியவர்கள் கூறினார்கள். அந்தக் கோயில், வேலூர் அல்லது திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதாக அறிகிறேன். ஆனால், உறுதியான தகவல் தெரியவில்லை. உங்களில் யாருக்கேனும் அந்தக் கோயில் பற்றித் தகவல் தெரிந்தால், எனக்குத் தெரிவித்து உதவ வேண்டுகிறேன்.
- சி.எஸ்.மூர்த்தி, சென்னை-24


கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகம் எங்கே கிடைக்கும் என்று, 24.7.2012 இதழில் திருப்பூர் வாசகி எஸ்.பி.இந்திராணி கேட்டிருந்தார்.
'கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில்களின் வரலாறு அடங்கிய புத்தகத்தை, 'எண். 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17’ என்ற முகவரியில் இயங்கிவரும் கங்கை புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது. 'கர்நாடக மாநில கோயில்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பவர் ஜெயா வெங்கட்ராமன். புத்தகத்தின் விலை 80 ரூபாய்' என்று, சென்னை சைதாப்பேட்டை வாசகி ராஜேஸ்வரி மதி தெரிவித்துள்ளார்.
'எனக்கு வில்வ மரக்கன்றுகள் தேவைப்படுகின்றன. 7, 9, 11 இதழ்கள் கொண்ட வில்வ மரக்கன்றுகள் எங்கே கிடைக்கும்?’ என்று, 7.8.2012 இதழில் காவேரிப்பாக்கம் வாசகர் ஏ.சிகாமணி கேட்டிருந்தார்.
'7, 9, 11 இலைகள் கொண்ட வில்வ மரக்கன்றுகள் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அடி அண்ணா மலை அருகில் அமைந்துள்ள சிவமடத்தில் கிடைக்கும். மேலும், மகா வில்வ மரம் அடி அண்ணாமலை கோயிலிலும் உள்ளது. சென்னை மீஞ்சூர் அருகில் உள்ள காட்டூர் வாலீஸ்வரர் கோயிலிலும் அந்த மரத்தைக் காணலாம்'' என்று, ஈரோடு மாவட்டம் காளிப்பட்டி வாசகர் எஸ்.முருகேசன் தெரிவித்துள்ளார்.
'எங்கள் மூதாதையர் வாழ்ந்த ஊர் கன்னாப்பட்டி. தெலுங்கு பிராமணர்களான நாங்கள் தற்போது புலம் பெயர்ந்து பெங்களுருவில் வசித்து வருகிறோம். சமீபத்தில் எங்களது குலதெய்வம் எது என்று பிரசன்னம் பார்த்ததில், கன்னாப்பட்டியில் கோயில் கொண்டுள்ள அங்காள பரமேஸ்வரி என்பது தெரியவந்தது. கன்னாப்பட்டியில் இப்போது அந்த அம்மனைக் குலதெய்வமாக வழிபடும் எங்களது முன்னோர் இருக்கிறார்களா?’ என்று, 24.7.2012 இதழில் பெங்களுரு வாசகர் ஸ்ரீகாந்த் கேட்டிருந்தார்.
'மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் இருந்து குச்சம்பட்டி வழியாக விருதுநகர் செல்லும் வழியில் கன்னாப்பட்டி அமைந்துள்ளது. அங்கே, தெலுங்கு பிராமண பிரிவினர் நிறையப் பேர் வசிக்கிறார்கள். அவர்கள் அங்கேயுள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன், வாலகுருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களை குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்...' என்று, மதுரை வாசகர் ஜி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
'கௌரு திருப்பதி ரெட்டி எழுதிய வாஸ்து சாஸ்திரத் தின் தமிழாக்கம் படிக்க விரும்புகிறேன். அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்? மேலும், தெளிவான விளக்கவுரை கொண்ட ராமாயணம், மகாபாரதம் ஆகிய புத்தகங்களையும் வாங்கிப் படிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் புத்தகங்களும் எங்கே கிடைக்கும்?’ என்று, 7.8.2012 இதழில் சென்னை வாசகர் கே.காளியப்பன் கேட்டிருந்தார்.
'கௌரு திருப்பதி ரெட்டி எழுதிய வாஸ்து சாஸ்திரத்தின் தமிழாக்கம் கொண்ட புத்தகம் எல்லா பெரிய புத்தக டிப்போக்களிலும் கிடைக்கும். தவிர, 'டாக்டர் ஜி.குணசேகரன், 24/34-1, என்.ஜி.ஓ. காலனி, புத்தூர்-517583, ஆந்திர மாநிலம்’ என்கிற, அந்தப் புத்தகத்தை தமிழாக்கம் செய்த ஆசிரியரின் முகவரியிலும் அதைப் பெறலாம்.
தெளிவான விளக்கவுரை கொண்ட ராமாயணம் புத்தகத்தை, 'தி லிட்டில் ஃபிளவர் கம்பெனி, 36, வடக்கு சாலை, மேற்கு சி.ஐ.டி. நகர், சென்னை-35’ என்ற முகவரியிலும், தெளிவான விளக்கவுரை கொண்ட ஸ்ரீவேதவியாச பகவானின் ஸ்ரீமகாபாரதம் புத்தகத்தை, 'ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன்ஸ், 14, வால்மீகி தெரு, பிளாட் எண்.78, செல்வராஜ் நகர் விரிவாக்கப் பகுதி-2, ஊரப்பாக்கம் மேற்கு, சென்னை-603211’ என்ற முகவரியிலும் பெறலாம்'' என்று, கோவில்பட்டி வாசகர் தளபதி கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.