தொடர்கள்
Published:Updated:

ராமனின் மெய்யும்... கிருஷ்ணனின் பொய்யும்!

ராமனின் மெய்யும்... கிருஷ்ணனின் பொய்யும்!


ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி சிறப்பிதழ்
செல்லக் கண்ணா தாலேலோ...
ராமனின் மெய்யும்... கிருஷ்ணனின் பொய்யும்!
ராமனின் மெய்யும்... கிருஷ்ணனின் பொய்யும்!

ஸ்ரீகிருஷ்ணன்- இந்த ஒற்றைச் சொல்லுக்குள்தான் எத்தனை எத்தனை ஆனந்தம், குறும்புகள், பாடங்கள்?!

மனிதனை நல்வழிப்படுத்த பரம்பொருள் மேற்கொண்ட முயற்சிகளில் அவதாரங்களுக்குத் தனியிடம் உண்டு. 'அவதர தீதி அவதார' என்று வடமொழி அறிஞர்கள், அவதாரம் என்ற சொல்லின் பெருமையை உணர்த்துவர். அதாவது, 'மேலிருந்து கீழே வருதல்' என்ற செயலே அவதாரம் எனப்படுகிறது. பரம்பொருள் தனது மேன்மைக் குணங்களையெல்லாம் மறைத்துவைத்து நம்மில் ஒருவனாக, நம் குலத்தவனாக, நமது சொல் கேட்பவனாகத் தன்னை அமைத்துக்கொண்ட நீர்மைக் குணத்தால் அவதாரங்களுக்கு ஏற்றம். பெருமையிற் சிறந்த ஒருவன் தன் மேன்மையைப் பாராட்டாமல், தன்னிலும் தாழ்ந்தவர்களுடன் கலந்து பரிமாறுதல் 'சீலம்' எனப்படும். இதை 'லௌசீல்யம்' என்று அறிஞர்கள் போற்றுவர். இந்தச் சீல குணத்தின் வெளிப்பாடுதான் அவதாரங்கள்.

திருமகள் நாயகனான நாராயணன், சம்சாரக் கடலில் தத்தளிக்கும் ஆன்ம வர்க்கங்களை மீட்கவே மேலிருந்து கீழே வருகிறான். அதாவது, அவதாரங்கள் நிகழ்த்துகிறான். அத்தகைய அவதாரங்கள் கணக்கற்றவையாயினும், பத்து அவதாரங்களை நாம் சிறப்பித்துப் போற்றுகிறோம். அவற்றுள்ளும் ஸ்ரீ ராமாவதாரமும் ஸ்ரீகிருஷ்ணாவதாரமும் தனிச்சிறப்பு பெற்றவை. காரணம்... மற்ற அவதாரங்கள், அந்த அவதார காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு நன்மை புரிந்தன. ஆனால், ஸ்ரீராமன் மற்றும் கிருஷ்ணாவதாரங்கள், பிற்காலத்தவருக்கும் நன்மை பயப்பதாக இருப்பது சிறப்பு. ஏனெனில், மனிதர்களின்பொருட்டு பல்வேறு வார்த்தைகளை இறைவன் திருவாய் மலர்ந்தருளியிருப்பது முக்கியமாக இவ்விரு அவதாரங்களில்தான்.

ராமனின் மெய்யும்... கிருஷ்ணனின் பொய்யும்!

ஸ்ரீராமனை, 'மர்யாதா புருஷோத்தமன்' என்றும் ஸ்ரீகிருஷ்ணனை, 'லீலா புருஷோத்தமன்' என்றும் வட தேசத்தவர்கள் போற்றுவர். இந்த இரண்டு அவதாரங்களிலும் மிகச் சிறந்ததாக ஒன்றைக் குறிப்பிடவேண்டும் என்றால், நிச்சயமாக ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தையே சொல்லியாக வேண்டும். ஏனெனில், ஸ்ரீராமன் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில வார்த்தைகளையே தன்னுடைய அவதாரத்தில் நமக்காகப் பேசினான். ஸ்ரீகிருஷ்ணனோ ஸ்ரீபகவத்கீதா சாஸ்திரத்தையே நம்பொருட்டு வழங்கியுள்ளான். இது மட்டுமல்ல, நாத் தழும்ப நாம் உச்சரிக்கும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஸ்ரீ கிருஷ்ண சரித்திரத்தின் பொக்கிஷமாகும்.

தன்னால் விதிக்கப்பட்ட சாத்திரங்களின் பெருமை குலையாதபடி, அதன் வழியே நடந்தவன் ராமன். ராமனில் கண்ணன் சற்று வேறுபட்டவன். தான் நடப்பதையே, (தனது செயல்பாட்டையே) சாத்திரமாகக் கொள்ளும்படி முழங்கியவன் கிருஷ்ணன். இருவரும் தர்மத்தை நிலை நாட்டியவர்களே! எனவேதான், 'ராமோ விரஹவாந் தர்ம' என்றும், 'கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம்' என்றும் இந்த இருவரையும் தர்மங்களாகவே போற்றுகிறோம்.

கிருஷ்ணன் என்கிற வடமொழிச் சொல்லுக்கு 'பூமிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன்' என்று பொருள். ஸ்ரீகிருஷ்ண சரித்திரமே ஆனந்தம்தானே! ஸ்ரீகிருஷ்ணனும் ஸ்ரீகிருஷ்ண சரித்திரமும் வெவ்வேறல்ல. மற்ற நூல்களைப் படிப்பதை விட, ஸ்ரீபாகவதம் படிப்பது உயர்ந்தது. மகாபாரதத்தை இயற்றிய வியாஸர், ஸ்ரீபாகவதத்தையும் எழுதினார். அவரே, மகாபாரதத்தால் கிடைக்காத ஆனந்தம் பாகவதத்தால் தமக்குக் கிடைத்ததாகப் பரவசப் படுகிறார். பகவானைப் பற்றிப் பேசுவதால் ஸ்ரீகிருஷ்ண சரித்திரத்துக்கு பாகவதம் என்று பெயர். கேட்பவர் மற்றும் படிப்பவர் மனதில் பக்தியை விதைத்து, முக்தி மார்க்கத்துக்கு அழைத்துச்செல்லும் அற்புத பொக்கிஷம் பாகவதம். அவன் பிறப்பை, அதாவது அவதாரத்தை நன்கு நாம் உணர்ந்தால், நம் பிறப்பு இனி வரும் காலங்களில் நிகழாது. அதாவது, நாம் முக்தியடைவது நிச்சயம்.

ராமனின் மெய்யும்... கிருஷ்ணனின் பொய்யும்!

'கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரண்' என்று உபதேசிக்கிறார் நம்மாழ்வார். நாமெல்லாரும் பிறந்தது நமது கர்மங்களின், ஊழ்வினைகளின் காரணமாக! ஆனால், இறைவனார் பிறப்பது கர்மத்தின் காரணமாக அல்ல; நம்மிடம் கொண்டிருக்கும் அன்பின் காரணமாக.

நமது சரித்திரம், நமது வாழ்க்கை முறை, நமது நடத்தைகள் பல தருணங் களில் நமக்கே பிடிப்பதில்லை. ஆனால், பகவானது அவதாரங்கள் எப்படி நமக்கு ஆனந்தத்தைத் தருகின்றனவோ, அப்படியே அவனுக்கும் ஆனந்தத்தை விளைவிக்கின்றன. இதைத்தான் 'ஜந்ம கர்ம ச மே திவ்யம்' என்று கீதையில் சொல்கிறான் கண்ணன். எவனொருவன் அவதார ரகசியத்தைப் பற்றிய ஞானத்தை உடையவனோ, அவன் மீண்டும் பிறப்பதில்லை என்கிறது கீதை.

கண்ணனது லீலைகளே முக்திக்கான சாலைகள். இடைப்பெண்ணான யசோதையின் கையால் கட்டுண்ட பகவானுக்கு, இடையிலே தழும்பு உண்டாயிற்றாம். எனவேதான், தாமோதரன் என்று பெயர் பெற்றான். 'எத்திறம் உரலினோடு இணைந்திருந்தேங்கிய எளிவே' என்று உருகி உருகி, ஆறு மாத காலத்துக்குக் கண் விழிக்காமல் மயங்கிக்கிடந்தாராம் நம்மாழ்வார்.

பரம்பொருள் ஓர் அபலைப் பெண் கையாலே கட்டுப்பட்டுக் கிடந்தான். அவன் உரலிலே கட்டுண்டு கிடந்தான் என்று நினைத்தாலே, நமது சம்சாரக் கட்டு தானாக அவிழும் என்கிறார் பரமாச்சார்யரான நம்பிள்ளை.

கண்ணன் பிறந்ததே இரண்டு காரணங்களுக் காகத்தான் என்பார்கள் பெரியோர். ஒன்று வெண்ணெய்; மற்றொன்று பின்னை... அதாவது, நப்பின்னையை மணம் புரிய!

கை நிறைய வெண்ணெய் கொடுத்தாலும், திருடித் தின்பதில்தான் கண்ணனுக்கு விருப்பம். இன்றைக்கும் துவாரகை முதலான திருத்தலங்களில், பக்தர்கள் பரவசத்துடன் உரத்த குரலில் உச்சரிப்பது, 'மாகன் சோர்' (விகிரிபிகிழி சிபிளிஸி) என்ற திருநாமத்தையே! மாகன் சோர் என்றால், வெண்ணெய்த் திருடன் என்று பொருள். 'திருடா' என்று அழைத்தாலும் சிரிக்கிறது தெய்வம்!

பானையிலிருந்து வெண்ணெய் திருடுவது மட்டுமல்ல; மொத்த வெண்ணெய்யையும் விழுங்கிய பிற்பாடு, வெண்ணெய் இருந்த பானையை கீழே போட்டு உடைத்து, அந்த ஒலியைக் கேட்பதிலே அளவற்ற ஈடுபாடு கண்ணனுக்கு என்கிறார் பெரியாழ்வார். துள்ளிக்குதித்து தனது பிஞ்சுக் கைகளைத் தட்டி மகிழ்வான் கண்ணன்.

ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம் எனும் நூலில், கண்ணனின் லீலைகளை வெகுவாகப் புகழ்கிறார் லீலாசுகர்.

ஒருமுறை... கோபிகை ஒருத்தியின் வீட்டுக்குள், அவள் இல்லாத நேரம் பார்த்து, சகாக்களுடன் நுழைந்தான் கண்ணன். அவர்கள் பெரு முயற்சி செய்து பானையைக் கீழே இறக்கி, வெண்ணெயைப் பகிர்ந்துகொள்ளும் நேரத்தில் கோபிகை வந்துவிடுகிறாள். அவளைக் கண்டதும் மற்றவர்கள் எப்படியோ தப்பித்து ஓடிவிட, கண்ணன் மட்டும் அகப்பட்டுக் கொள்கிறான். அவளிடம் இருந்து எப்படிப் தப்பிப்பது என்று பகவான் யோசிக்க... அந்தப் பெண், கண்ணனிடம் 'நீ யார்?' என்று கேட்கிறாள்.

ராமனின் மெய்யும்... கிருஷ்ணனின் பொய்யும்!

சாலை விதிகளை மீறிய ஒருவர், காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டதும், தனக்குத் தெரிந்த அதிகாரிகள் அல்லது பிரபலங்களின் பெயர்களைச் சொல்லித் தப்பித் துக்கொள்வது வழக்கம் அல்லவா? கண்ணனும் அதே வழக்கத்தைக் கையாண்டான். பலராமனின் பெயரைச் சொல்லி, 'அவன் தம்பி கண்ணன் நான்' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்!

காரணம்... ஊருக்குள் பலராமனுக்கு நல்ல பெயர். எனவே, அவன் பெயரைச் சொல்லித் தப்பித்துவிடலாம் என்கிற எண்ணம் கண்ணனுக்கு. ஆனால், அவள் விடுவதாக இல்லை. 'இங்கு ஏன் வந்தாய்?' என்று தனது இரண்டாவது கேள்வியைக் கேட்டாள்.

சற்றும் யோசிக்காமல்... 'இந்த வீட்டை என்னுடைய வீடு என்று நினைத்து வந்துவிட்டேன்' என்று பொய் சொன்னான் கண்ணன். உடனே அவள், 'கண்ணா! உள்ளே நுழைந்தவுடனேயே இது உன் வீடு அல்ல என்று தெரிந்திருக்குமே..?' என்று மடக்கினாள். கண்ணனும் பொறுமையிழக்காமல், பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ''தாயே! இது என் வீடல்ல என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன். எனவேதான், இதோ, இவ்வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டேன்'' என்று நழுவப் பார்த்தான். கோபிகை விட்டுவிடுவாளா?!

''கண்ணா, நீ பலராமன் தம்பி என்பது சரி; உன் வீடு என்று நினைத்து என் வீட்டுக்குள்ளே நுழைந்ததுகூடப் பரவாயில்லை. ஆனால், வெண்ணெய்ப் பாத்திரத்துக்குள்ளே நீ எதற்காக கை விட்டாய் என்றுதான் புரியவில்லை. இதற்கென்ன காரணம் வைத்திருக்கிறாய்?'' என்று அவள் கேட்டதும், கண்ணன் வெலவெலத்துப் போனான்.

'ஏலாப் பொய்களுரைப்பான்' என்று ஆண்டாளால் விருதளிக்கப்பெற்ற கண்ணனுக்கே சவாலான கேள்வி இது. என்ன பதில் சொல்வது என்ற குழம்பிய கண்ணன், ''அம்மா! என் கன்றுக்குட்டி ஒன்று தொலைந்துவிட்டது. ஒருவேளை, அது இந்த வெண்ணெய்ப் பாத்திரத்துக்குள் ஒளிந்துகொண்டு இருக்குமோ என்று பார்க்கத்தான் கலத்தினுள் கை விட்டேன். கடைசியில் இங்குமில்லை. சரி, நான் வருகிறேன்'' என்று சொல்லிவிட்டு ஓடிப் போனான். கிருஷ்ணனின் லீலை எப்படி இருக்கிறது பாருங்கள்!

ராமனின் மெய்யும், கிருஷ்ணனின் பொய்யுமே நம்மை இந்தப் பிறவிக் கடலில் இருந்து காப்பாற்றவல்லன. கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையவர்களாக இருந்து, பேரானந்தத்தை அடைவோம்.