தொடர்கள்
Published:Updated:

கையில் கண்ணனை ஏந்தி வழிபட்டால்... சந்தான பாக்கியம் நிச்சயம்!

கையில் கண்ணனை ஏந்தி வழிபட்டால்... சந்தான பாக்கியம் நிச்சயம்!


ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி சிறப்பிதழ்
செல்லக் கண்ணா தாலேலோ...
கையில் கண்ணனை ஏந்தி வழிபட்டால்... சந்தான பாக்கியம் நிச்சயம்!

'கோயில் பாதி, குளம் பாதி' என பிரமாண்டமாகத் திகழும் ஆலயங்கள் பல உண்டு. குறிப்பாக, சோழ தேசத்தில் இதுபோன்ற பிரமாண்ட ஆலயங்களை, திரும்பும் திசையெங்கும் தரிசிக்கலாம். அந்த வரிசையில், முக்கியமான தலம்... மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி திருக்கோயில்!

தஞ்சாவூரில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது மன்னார்குடி. ராஜமன்னார் எனப்படும் ஸ்ரீராஜகோபாலன் குடிகொண்டுள்ள தலம் என்பதால், ராஜ மன்னார்குடி என்றும், மன்னார்குடி என்றும் ஊர்ப்பெயர் அமைந்ததாம். ஊரின் மையப்பகுதியில், பிரமாண்டமாகத் திகழ்கிறது ஸ்ரீராஜகோபால ஸ்வாமி ஆலயம்.

செண்பகாரண்ய க்ஷேத்திரம் என்றும், சர்வ தோஷ நிவர்த்தி தலம் என்றும் இந்தத் தலத்தைப் போற்றுகின்றனர் பக்தர்கள். ஸ்ரீரங்கத்துக்கு அடுத்து, 18 நாட்கள் பிரம்மோற்ஸவமும், 12 நாள் விடையாற்றியும் காணும் பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு. மேலும் வைணவ ஆச்சார்யரான மணவாளமாமுனிகளின் அபிமான ஸ்தலம் என்பது கூடுதல் சிறப்பு.

கையில் கண்ணனை ஏந்தி வழிபட்டால்... சந்தான பாக்கியம் நிச்சயம்!

கோப்பிரளயர், கோபிலர் எனும் முனிவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து, கடும் தவம் இருந்தனர்; அதில் மகிழ்ந்த பெருமாள், அவர்களுக்குக் காட்சி தந்தருளினார்; அடுத்து, முனிவர்களது வேண்டுகோளின்படி, இன்றளவும் பக்தர்களைத் தாமே தேடிச் சென்று, அருள்பாலித்து வருகிறார் ராஜகோபால ஸ்வாமி என்பது ஐதீகம். மூலவரின் திருநாமம்- ஸ்ரீவாசுதேவபெருமாள்; தாயாரின் திருநாமம்- ஸ்ரீசெங்கமலத் தாயார். இந்த ஆலயத்தின் உற்ஸவர் ஸ்ரீவித்யா ராஜகோபால ஸ்வாமி, அழகுத் திருமேனியராக, சேலையை வேஷ்டியாகவும், தலைக்கு முண்டாசாகவும் கட்டிக்கொண்டு காட்சி தரும் கோபாலனை வேறெங்கும் காண்பது அரிது என்கின்றனர்.

ஆம். பகவான் கிருஷ்ணர், கோபியர் 16,108 பேருடன் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது, விளையாட்டாக ஒரு போட்டி வைத்தாராம். அதாவது, குளித்துவிட்டுக் கரைக்கு வந்ததும், யார் வேண்டுமானாலும் யாருடைய ஆடையையும் உடுத்திக் கொள்ளலாம்; யார் வேகமாக உடுத்திக் கொள்கிறார் என்பதே போட்டி. அதன்படி, அனைவரும் குளித்துக் கரைக்கு வந்ததும், கையில் கிடைத்த ஆடையை எடுத்து வேகவேகமாக உடுத்திக்கொண்டனர். இதில், கிருஷ்ணருக்குக் கிடைத்ததோ சேலை! அந்தப் புடவையை அப்படியே வேஷ்டியாகவும், தலைக்கு முண்டாசாகவும் கட்டிக்கொண்டு, பெண்கள் அணியும் ஆபரணங்களையும் அணிந்துகொண்டாராம். இதனால் இங்கேயுள்ள மூலவருக்கு, ஸ்ரீவித்யா ராஜகோபாலன் எனும் திருநாமம் அமைந்ததாம். ஆகவே, இந்தத் தலத்தில்... ஒரு காதில் குண்டலம், மறு காதில் தோடு, இடுப்பில் கச்சம், தலையில் முண்டாசு, கையில் பொன்னாலான சாட்டை... எனக் காட்சி தருகிறார் ஸ்ரீவித்யா ராஜகோபாலன்.

கையில் கண்ணனை ஏந்தி வழிபட்டால்... சந்தான பாக்கியம் நிச்சயம்!

கல்வியில் மேன்மை, நல்ல இடத்தில் வேலை, வெளி நாட்டில் வேலைவாய்ப்பு, திருமண பாக்கியம், குழந்தை வரம்... என மனதில் என்ன குறை இருந்தாலும், இங்கு வந்து ஸ்ரீராஜகோபாலனை மனதாரப் பிரார்த்தித்தால், உடனே அவற்றை நிறைவேற்றி வைத்துக் காப்பார் என்பது நம்பிக்கை! ரோகிணி நட்சத்திர நாளில், இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்திப்பது கூடுதல் பலனைத் தரும் என்கின்றனர் பக்தர்கள்.

இங்கே... குழந்தை வடிவில் காட்சி தரும் ஸ்ரீசந்தான கோபாலனை, கைகளில் நாமே ஏந்திக்கொண்டு பிரார்த்திக்க (முடிந்தால் பால் மற்றும் தயிர் அபிஷேகம் செய்தும் பிரார்த்திக்கலாம்), கோபாலனைப் போலவே, அழகும் அறிவும் நிரம்பிய பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என அனுபவ சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பிரார்த்தனை பலித்த பெண்கள்.

- ராஜீவ்காந்தி, படங்கள் ந. வசந்தகுமார்