தொடர்கள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!


வாசகர் பக்கம்..
உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக - உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்' இதழிலேயே பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!' என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

கார்காத்த வேளாளர் (சைவம்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். எங்களின் குலதெய்வம், வெள்ளை குதிரையில் வீற்றிருக்கும் நல்லவீர பெருமாள் என மாமியார் கூறியுள்ளார். ஆனால் கோயில் எங்கே உள்ளது எனத் தெரியவில்லை. வாழ்வில், பல சந்தோஷங்களை இழந்து கஷ்டப்பட்டுவருகிறோம். குலதெய்வ வழிபாடு இல்லாததே காரணம் என்கின்றனர் பலரும்! எங்கள் குலதெய்வக் கோயில் எங்கே உள்ளது? அங்கே என்ன வழிபாடு செய்யவேண்டும்? விவரம் தெரிந்த அன்பர்கள் தகவல் தந்து உதவுங்களேன்!

- ராதா, (ஊர்ப்பெயர் வெளியிடவில்லை)

உதவலாம் வாருங்கள்!

ங்களது மருமகனின் பூர்வீகம் பரங்கிப் பேட்டை என்றும், இந்த ஊர் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் என்றும் சொல்கின்றனர். எங்களுக்குத் தெரிந்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகில் பரங்கிப் பேட்டை என்று உள்ளது. வேலூருக்கு அருகில் பரங்கிப்பேட்டை எனும் கிராமம் உள்ளதா? எப்படிச் செல்வது? தெரிந்தவர்கள் சொன்னால், சொந்த ஊரில் உள்ள கிராம தெய்வத்துக்குப் படையலிட ஏதுவாக இருக்கும்.

- த.கு. குமார், சென்னை-63

சோத நந்தன யதுகுலதிலகா, யாதவ வம்சா மாபாஹி என்ற பாடலும் மாமவரகுராமா மரகதமணி சியாமா எனும் பாடலும் சிறுவயதில் மனப்பாடமாகச் சொல்வேன். இந்தப் பாடல் தற்போது மறந்துவிட்டது. இந்தப் பாடல்கள் எந்த நூலில் உள்ளன? வாசக அன்பர்கள் பிரதி எடுத்து அனுப்பி உதவுங்களேன்.

- வி. சந்திரா, திருக்கோவிலூர்

சிறுவயதில், 'கற்பக விருட்சம்' என்றொரு பாடலை மனனம் செய்து பாடியிருக்கிறேன். தனை தனைதனை தந்தானம் எனத் துவங்கி, அரிவாள் பெட்டியாம் வாளுறையாம் முறுக்குத் தடியாம் செங்கோலாம்... என்று அந்தப் பாடல் இருக்கும். இந்தப் பாடல் தற்போது முழுமையாகத் தெரியவில்லை. இந்தப் பாடல் எந்த நூலில் உள்ளது? எங்கு கிடைக்கும்? அல்லது பாடலைத் தெரிந்த அன்பர்கள், பிரதி அனுப்பி உதவ வேண்டுகிறேன்.

- டி. செல்வபுஷ்பம், கோவை-1

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள் காதுலு பலிஜா வகுப்பைச் சேர்ந்தவர்கள் (வளையல்கார நாயுடு என்றும் சொல்வர்). எங்களின் கோத்திரம் - ஜனகல கோத்திரம். எங்களின் குலதெய்வம் தெரியாததால், குலதெய்வ வழிபாடோ அல்லது முன்னோர்களுக்குச் செய்யும் வழிபாடோ செய்யமுடியவில்லை.

எங்களின் குலதெய்வம் எது? அந்த ஆலயம் எங்கே உள்ளது? தெரிந்த அன்பர்கள் தகவல் தந்து உதவினால், குலதெய்வ வழிபாடு செய்ய ஏதுவாக இருக்கும்.

- பி.டி. வீரய்யன், சென்னை-82

ன்னுடைய தந்தையும் தாத்தாவும் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்தவர்கள். எங்களின் குலதெய்வமாக பல வருடங்களாக, திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதியை வணங்கி வருகிறோம்.

ஆனால் பலரும், எங்களின் குலதெய்வம் ஸ்ரீபாலமுருகன் என்கின்றனர். மயிலானது பாம்பை மிதித்துக்கொண்டிருப்பதுபோல் அல்லாமல், மயிலும் பாம்பும் தனித்தனியே, நட்புடன் இருக்குமாம்! இப்படியரு திருக்கோலத்தில் முருகப்பெருமான் காட்சி தரும் ஆலயம் எங்கேனும் உள்ளதா? விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

- து. ரவீந்திரன், சென்னை-40

உதவலாம் வாருங்கள்!

''எனக்கு உடலநலக்குறைவு ஏற்பட்ட போது, 'காயத்ரி மந்திரத்தை (108 முறை), 48 நாட்கள் சொல்லி வழிபடுங்கள்; விரைவில் குணம் அடைவீர்கள்' என்று சிலர் சொல்ல, அதன்படி ஸ்ரீகாயத்ரிதேவிக்கு காசு முடிந்து வைத்துவிட்டு, மந்திரம் ஜபித்து வந்தேன். 25-வது நாளிலேயே பூரண குணம் அடைந்தேன். தற்போது முடிந்துவைத்த காசை, காயத்ரிதேவிக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். தமிழகத் தில் ஸ்ரீகாயத்ரிதேவிக்கு ஆலயம் எங்கே உள்ளது? அல்லது, ஏதேனும் கோயிலில் தனிச்சந்நிதியில் எழுந்தருளி யுள்ளாளா? தகவல் தெரிவியுங்களேன்'' என 9.8.10 இதழில், சேலம் மாரமங்கலம் வாசகர் கா.மு. வெங்கடேஸ்வரன் கேட்டிருந்தார்.

உதவலாம் வாருங்கள்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஸ்ரீகாயத்ரி தேவிக்கு தனிக்கோயில் உள்ளது. சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இறங்கி, எவரிடம் கேட்டாலும் வழி சொல்வார்கள். மிகப் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில், ஸ்ரீகாயத்ரி ஹோமம் சிறப்புற நடைபெறுகிறது என சென்னை வாசகர் என். கணபதி, மும்பை செம்பூர் வாசகர் வீ. கோபாலன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தின் நகரப்பகுதியில் மகாத்மா காந்தி வீதியில் ஸ்ரீகன்னிகாபரமேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு அருகில் ஸ்ரீகாமாட்சியம்மனுக்கும் கோயில் உள்ளது. இங்கே, தன் கணவர் ஸ்ரீவிராட விஸ்வ பிரம்மாவுடன் ஸ்ரீகாயத்ரிதேவி சந்நிதி கொண்டுள்ளாள். புதுச்சேரியில் புகழ்பெற்ற ஆலயங்களில், ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலும் ஒன்று என புதுச்சேரி லாஸ்பேட்டை வாசகர் ப. வினோத் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீசோமநாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. சந்திரனின் க்ஷயரோகத்தைப் போக்கிய திருத்தலம் இது; இங்கு ஸ்வாமி சந்நிதிக்குப் பின்னே, ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராளின் அதிஷ்டானம் உள்ளது. இதன் அருகில், ஸ்ரீகாயத்ரிதேவியின் சந்நிதி உள்ளது. புராணப் பெருமைகள் பல கொண்ட இந்த ஆலயத்துக்குச் சென்று, ஸ்ரீகாயத்ரிதேவியை வணங்கி வழிபடுவது விசேஷம் என காரைக்குடி வாசகர் சங்கரசேது தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பழைய பல்லாவரம் பகுதியில், பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீசூரியநாராயணர் கோயில். இந்தக் கோயிலில் ஸ்ரீகாயத்ரிதேவி, தனிச்சந்நிதியில் அழகுறக் காட்சி தருகிறாள். பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உண்டு என சென்னை வாசகி பி. உமாதேவி, மதுரை வாசகி வி. அனுராதா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் இருந்து மருதமலை செல்லும் வழியில் (பேரூர் ஸ்ரீபட்டீஸ்வரன் ஆலயத்துக்குச் செல்லும் வழியில்), அஜ்ஜனூர் எனும் ஊர் உள்ளது. இங்கே, ஸ்ரீகாயத்ரிதேவிக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது. பேரூர் கோயிலில் இருந்து மினி பஸ் வசதி உண்டு என கோவை வடவள்ளி வாசகி கே. ஹரிணி மீரா, வீரகேரளம் வாசகி கலா தியாகராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். கோவை காந்திபுரம் மற்றும் ரயில்நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பஸ் வசதி உண்டு.

சென்னை பாரிமுனையில் உள்ள தம்புச்செட்டித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாளிகாம்பாள் திருக்கோயிலில் ஸ்ரீகாயத்ரிதேவியை தரிசிக்கலாம் என சென்னை வாசகர் வி.எம். ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ள சாலையில் (அரும்பாக்கம்) ஜெய்நகர் பகுதியில், ஸ்ரீசுந்தர விநாயகர் கோயிலில், ஸ்ரீகாயத்ரிதேவிக்கு சந்நிதி உள்ளது என சென்னை வாசகர் எம்.எஸ். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.