'திருமீயச்சூர் ஆலயத்தில் பிரண்டைச் சாதம் பிரசாதமாக வழங்குவது ஏன்? என்ன தாத்பர்யம்?' என, 4.9.09 இதழில், சென்னை வாசகி ஹேமா பகவன்தாஸ் கேட்டிருந்தார்.
எமதர்மராஜன், தனது ஆயுள் விருத்திக்காக, தாமரை இலையில் சங்கு புஷ்பத்தை வைத்து, எமலோகத்தின் ஸ்தல விருட்சமான பிரண்டையை அன்னத்தில் கலந்து, நைவேத்தியமாகப் படைத்து அருள்பெற்றானாம்! எனவே, இங்கே தலத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீமேகநாத ஸ்வாமிக்கு, உச்சிக்கால பூஜையில், பிரண்டை சாதம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. ஸ்ரீமேகநாதரை பிரண்டை சாதம் நைவேத்தியம் செய்து வழிபட, ஆயுள் விருத்தி அடையும்; நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்பது ஐதீகம் என செகந்திராபாத் வாசகர் வி.வெங்கட்ராமன், சென்னை வாசகர் டி.கே.தேவநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
'திருச்சி மலைக்கோட்டை பகுதியில் வசித்து வருகிறோம். எங்களின் குலதெய்வம் ஸ்ரீசுடலைமாட சுவாமி என்றும், பனை மரங்கள் சூழ்ந்த பகுதியில் ஆலயம் இருப்பதாகவும் சொல்கின்றனர். இந்த ஆலயம் எங்கு உள்ளது?' என திருச்சி வாசகி வனிதா முத்துக்குமார் 20.8.09 இதழில் கேட்டிருந்தார்.
தூத்துக்குடி - திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது ஆத்தூர். இந்த ஊருக்கு அருகில் ஸ்ரீசுடலைமாட சுவாமி கோயில் உள்ளது (ஆறுமுகமங்கலத்தில் உள்ளது ஆலயம்). ஹைகோர்ட் மகாராஜா ஆலயம் என்றும் சொல்வர். வாசகி குறிப்பிட்டதுபோல், பனைமரங்கள் சூழ்ந்த பகுதியில் உள்ள ஆலயம் இது!
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்கள் பலரின் குலதெய்வம், இஷ்டதெய்வம், ஸ்ரீசுடலைமாட சுவாமிதான். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்துக்குச் சென்றால், பூசாரி இருப்பார்; வழிபாடு செய்ய ஏதுவாக இருக்கும் என சென்னை வாசகர் லியோ தங்கம், மதுரை வாசகர் நாராயணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
'என் முதல் குழந்தை, பிறந்த 15-ஆம் நாளில் இறந்துவிட்டது. அடுத்துப் பிறந்த குழந்தை, விஷக் காய்ச்சல் கண்டு, தனது 11-வது வயதில் இறந்து போனாள். மூன்றாவதாகப் பிறந்த குழந்தையும் இரண்டு வயதிலேயே இறந்துவிட... நிம்மதியே இல்லை. பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் வளர்ந்து, நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா? வாரிசு தங்குவதற்கு எந்த ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும்?' என திருமங்கலம் வாசகி ராஜேஸ்வரி, 13.5.10 இதழில் கேட்டிருந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது நயினார்கோவில். இங்கேயுள்ள ஸ்ரீசௌந்தர நாயகி சமேத ஸ்ரீநாகநாதர் கோயிலுக்குச் சென்று மனதாரப் பிரார்த்தனை செய்தால், குழந்தை நீண்ட ஆயுளுடன் வளரும் என்பது நம்பிக்கை.
மதுரை ஒர்க்ஷாப் சாலையில் உள்ளது ஸ்ரீபேச்சியம்மன் கோயில். இந்த ஆலயத்தில் பாம்புப் புற்று ஒன்று உள்ளது. இங்கே... புற்றுக்குப் பால் வார்த்து, பேச்சியம்மனை மனமுருகி வேண்டுங்கள்; உங்களையும் உங்களின் வாரிசையும் கட்டிக் காப்பாள் அம்மன்!
தஞ்சாவூருக்கு அருகில் உள்ள ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை ஆலயத்தையும் அம்பாளின் கருணையையும் அறியாதவர்கள் இருக்கிறார்களா, என்ன? இந்தக் கோயிலுக்குச் சென்று, அம்பாளை கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்யுங்கள். கருவில் உள்ள குழந்தையை மட்டுமின்றி, பிறந்த குழந்தையைக் கூடப் பேணிக்காக்கும் கருணைத் தெய்வம் இவள் என மதுரை வாசகி சுமதி தெரிவித்துள்ளார்.
திருச்சி - குணசீலம் சாலையில் உள்ளது திருவாசி. இந்த ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபாலாம்பிகையை, ஞாயிற்றுக் கிழமைகளில் அபிஷேகம் செய்து, அந்தத் தீர்த்தத்தை குழந்தைக்கு கொடுங்கள். எந்த நோயும் அண்டாமல், உங்கள் குழந்தையை பாலாம்பிகா பார்த்துக்கொள்வாள்.
'நமஸ்தே லலிதே! தேவி மந்ஸிம் ஹாசநேஸ்வரி' எனத் துவங்கும் ஸ்ரீஅபிராமி ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி வந்தால், வாரிசு தங்கும்; சீரும் சிறப்புமாகக் குழந்தைகள் வளர்வார்கள் என திருச்சி வாசகர் சி. ரெங்கராஜன் தெரிவித்துள்ளார்.
|