திருமலை திருப்பதியில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி? விடுதிவசதிகள் என்னென்ன? #DoubtOfCommonMan

மேல் திருப்பதியில் தனியார் விடுதிகள் எதுவும் கிடையாது. ஆனால், கோவர்த்தன், சப்தகிரி, கருடாத்ரி, வராகசாமி கெஸ்ட் ஹவுஸ், ராம் பகிஜா, பத்மாவதி கெஸ்ட் ஹவுஸ் என ஏராளமான தேவஸ்தான விடுதிகள் உள்ளன.
திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்பவர்களில் இரண்டுவிதமானவர்கள் உண்டு. காலையில் கிளம்பி, திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவே வீடு திரும்புபவர்கள் ஒருவகை. திருப்பதிப் பயணமா? கீழ்த்திருப்பதியில் ஒரு நாள்... மேல் திருப்பதியில் ஒரு நாள் எனத் தங்கிவிட்டு வந்தால்தான் மனதுக்கு நிறைவாக இருக்கும் என்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருபவர்கள் இன்னொரு ரகம்.

திருமலையில் தேவஸ்தான அறையில் தங்கி, புஷ்கரணியில் குளித்து, வராகசாமி தரிசனம் செய்து, பின்னர் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். ஒரு நாளாவது இரவில் திருமலையில் தங்கி எம்பெருமானின் அருளைப் பெற வேண்டும் என எண்ணும் பக்தர்கள் ஏராளம். ஆனால், நாள்தோறும் 60,000 முதல் ஒரு லட்சம் பேர் வரை வரும் திருமலையில் அறை எடுத்துத் தங்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் பிரதீப் பாண்டியன் என்கிற வாசகர், "திருமலையில் (மேல்திருப்பதி) தொடர்ந்து 3 நாள்கள் தங்குவதற்கான தனியார் ஹோட்டல்கள் அல்லது தேவஸ்தான தங்குமிடங்கள் உள்ளனவா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். இதே கேள்வி பெரும்பாலானவர்களுக்கு உள்ளது.


பொதுவாக, திருப்பதிக்குப் போவதென்று முடிவு செய்துவிட்டால், சிலநாள்களுக்கு முன்பாகவே முடிவெடுத்துவிடுங்கள். கீழ்த்திருப்பதி மேல் திருப்பதி (திருமலை) இரண்டு இடங்களிலுமே திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், ஏராளமான அறைகள், முறையான பராமரிப்புடன் பக்தர்களின் தேவைக்காகச் செயல்படுகின்றன.
கீழ்த்திருப்பதியில் பஸ்ஸ்டாண்டுக்கு எதிர்புறம் 'சீனிவாசம் காம்ப்ளக்ஸ்' மாதவம் கெஸ்ட் ஹவுஸ் ஆகிய இரண்டு தேவஸ்தான விடுதிகள் உள்ளன. ரயில் நிலையத்துக்கு எதிரே 'விஷ்ணு நிவாஸம்' எனும் காம்ப்ளக்ஸ் உள்ளது.
'சீனிவாசம் காம்ப்ளக்ஸில் ரூ.200, ரூ.400, ரூ.600 கட்டணத்தில் அறைகள் கிடைக்கின்றன. மாதவம் கெஸ்ட் ஹவுஸில் ரூ.800, ரூ.1,000 கட்டணத்தில் அறைகள் கிடைக்கின்றன. இவை பாதுகாப்புடன் முறையாகப் பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

திருப்பதி ரயில்வே ஸ்டேஷனின் எதிர்புறம் உள்ளது, விஷ்ணு நிவாஸம் காம்ப்ளக்ஸ். இங்கே, ரூ.300, ரூ.500, ரூ.800, ரூ.1,300 ரூபாயில் அறைகள் கிடைக்கும். இதில் தங்குவதற்கு முன்பதிவு கிடையாது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் அறைகள் பக்தர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. கீழ்த்திருப்பதியில் ஏராளமான தனியார் விடுதிகளும் உள்ளன.
மேல் திருப்பதியில் தனியார் விடுதிகள் எதுவும் கிடையாது.
ஆனால், கோவர்த்தன், சப்தகிரி, கருடாத்ரி, வராகசாமி கெஸ்ட் ஹவுஸ், ராம் பகிஜா, பத்மாவதி கெஸ்ட் ஹவுஸ் என ஏராளமான தேவஸ்தான விடுதிகள் உள்ளன.
இவற்றிலும் அதிகபட்சமாக இரண்டு நாள்கள் மட்டுமே தங்க முடியும்.

திருமலையில் மொத்தம் 6,000 அறைகள் பக்தர்கள் தங்குவதற்காக உள்ளன. இங்கே, ரூ.50, ரூ.100, ரூ.150, ரூ.500, ரூ.600, ரூ.750, ரூ.1000, ரூ.1500, ரூ.2000 கட்டணத்தில் அவரவர் வசதிக்கேற்ப அறைகளைத் தேர்வு செய்து தங்கலாம். நாம் செலுத்தும் கட்டணத்துக்கேற்ப அறைகளில் வசதி வாய்ப்புகள் செய்யப்பட்டிருக்கும். எல்லா அறைகளிலும் டபுள் காட் பெட் போடப்பட்டு தூய்மையாக இருக்கும். ஒதுக்கீடு செய்யப்பட்ட அறைகளில் 24 மணி நேரம் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ரூ. 500 க்கு மேல் கட்டணம் உள்ள அறைகளில் ஹீட்டர் வசதி உண்டு.
இவற்றில் தங்க வேண்டுமென்றால், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் மாவட்டத்தில் இருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் தம்பதியாகச் சென்று முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். ஒருவர் மட்டும் தனிநபராகச் சென்று கேட்டால், அறைகள் ஒதுக்கித் தரமாட்டார்கள். முன்பதிவு செய்யாமல் சென்று திருமலையிலும் அறை எடுத்துத் தங்கலாம். சி.ஆர்.ஓ ஆபீஸ் எதிர்புறம் இருக்கும் க்யூவில் காத்திருந்தால் காலை 6 மணி முதல் அறைகளைப் பெறலாம்.

கோடைக்கால விடுமுறை நாள்களில் பலரும் முன்பதிவு செய்வார்கள். 90 நாள்களுக்கு முன்பாகவே முன்பதிவு தொடங்கிவிடும். உங்கள் பயணத்தை முன்பே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். சனி, ஞாயிறு, அரசு விடுமுறை இல்லாத நாள்களில் கூட்டம் குறைவாக இருக்கும். குறிப்பாக செவ்வாய், புதன் ஆகிய நாள்களில் பயணத் திட்டத்தை வகுத்துக்கொண்டால் உங்கள் பயணம் இனிமையாகும்.
