ஆண்டுக்கு ஆண்டு ஐயப்ப பக்தர்கள் பெருகிக் கொண்டே போவதில் இருந்தே ஐயப்ப சுவாமியின் மகிமையை எல்லோரும் உணர்ந்து இருக்கலாம். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீஐயப்பன், தன்னை வணங்கும் பக்தர்களையும் 'சாமியாக்கி' விடும் கருணை கொண்டவன். நமது சமயத்தின் ஒட்டுமொத்த இறைஉருவம் இந்த ஹரிஹர ஸ்வரூபத்தில் உள்ளது என்கின்றன புனித நூல்கள். அருவமும், உருவமுமான ஸ்ரீஐயப்பன், ஜோதி வடிவமாகவும இருக்கிறார். அதைக் கொண்டாடுவதே மகர ஜோதி வழிபாடு எனப்படுகிறது.
இந்த ஆண்டு மகரஜோதி விழா 14-1-2023 அன்று கொண்டாடப்படுகிறது. அன்று சபரிமலை ஸ்ரீஐயப்பன் காந்தமலையில் பொன்னம்பல மேட்டில் ஜோதிரூபனாக காட்சி அளிப்பான். அந்த திருக்காட்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று மெய்சிலிர்க்க தரிசிப்பார்கள்.
சென்னை பம்மல் பகுதியில் ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் (14-1-2023) மகரஜோதி நாளில், சனிக்கிழமை அன்று காலை 5 மணி முதல் இரவு வரையில் ஸ்ரீஐயப்ப ஆராதனைகள் நடைபெற உள்ளன. தொண்டைமண்டல சபரிமலை என்றே போற்றப்படும் இந்த ஸ்ரீஐயப்பன் ஆலயம் 2008-ம் ஆண்டு கேரள தாந்த்ரீக முறைப்படியே கட்டப்பட்டு அதே முறைப்படியே வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.
பெருமைகள் பல கொண்ட இந்த ஆலயம் எழும்பியதே ஒரு அதிசயம் என்று வியக்கிறார் இந்த ஆலயத்தைக் கட்டி எழுப்பிய ஸ்ரீகிருஷ்ணன் குருசாமி. "1994-ம் ஆண்டு இந்த ஆலயத்துக்கான இடம் தேடத் தொடங்கியதில் இருந்தே பல தொல்லைகள், தடங்கல்கள்! எல்லாவற்றையும் சரிப்படுத்தி இன்று பிரமாண்ட வடிவில் ஐயன் ஐயப்பன் இங்கு எழுந்தருளி இருப்பதே பெரிய கதை ஐயா. இன்றும் இங்கு வந்து மனமுருகி வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு உற்ற துணையாக இருந்து அனைத்தும் வழங்கி வருவது இந்த ஐயப்பனின் வழக்கம்.
இங்குள்ள நாகர் சந்நிதி விசேஷமானது. கேரளாவில் மன்னார்சாலை என்னும் இடத்தில் உள்ள சர்ப்ப காவு விசேஷமானது. இதுவே மண்ணுலகில் உண்டான முதல் சர்ப்ப தரவாடு எனப்படுகிறது. இதை பரசுராமர் பிரதிஷ்டை செய்தார் என்பார்கள். அதேவிதமான சாந்நித்யத்துடன் உருவானது இங்குள்ள சர்ப்ப சந்நிதி. இங்கு ஒவ்வொரு மாத ஆயில்ய நட்சத்திர நாளிலும் நூறும் பாலும் என்ற விசேஷ பூஜையை நடத்துகிறோம். இங்கு வந்து வழிபட்டால் நாக தோஷம் நீங்கும். ராகு-கேது தோஷங்கள் விலகும்."
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
இங்கு வந்து நோய்கள் தீர்ந்தவர்கள் அநேகம். எத்தனை பேருக்கு திருமண வரமும் பிள்ளை வரமும் அளித்தவன் இந்த மணிகண்டன். இவனை வணங்கி வேலை வாய்ப்பும் வெளிநாட்டு யோகமும் பெற்றவர்கள் இந்த கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்து இருக்கிறார்கள். இப்படி வேண்டியவருக்கு வேண்டியதை அளித்திடும் இந்த ஐயனை இங்கு பல்வேறு விதமாக ஆராதனை செய்து வழிபடுகிறோம். அதில் முக்கியமானது மகர ஜோதி வழிபாடு.
ஜோதியாகவும் வெளிப்பட்டு தனது பக்தர்களைக் காக்கும் ஐயப்பனுக்கு சபரிமலையில் செய்யப்படுவது போன்றே விசேஷ பூஜைகள் செய்து கொண்டாடுகிறோம். காலை 5.30 மகாகணபதி ஹோமம், 6 மணிக்கு ஐயப்பனுக்கு அஷ்ட அபிஷேகம், 3 மணி அளவில் இங்குள்ள பவானி அம்மன் கோயிலில் இருந்து திருவாபரணப் பெட்டி கொண்டுவரப்பட்டு மாலை 6 மணி அளவில் சபரிமலையில் செய்யப்படுவதைப் போன்றே அலங்காரங்கள் செய்கிறோம். பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு வரும் திருவாபரணப் பெட்டியைப் போன்றே இங்கும் செய்யப்பட்டு, அதை விரதமிருக்கும் பக்தர்கள் சுமந்து கொண்டு வருவார்கள்.
மாலை 6 மணிக்கு மேல் ஐயப்பன் கோயிலுக்கு பின்புறம் இருக்கும் சிவன் மலையில் மகர ஜோதி ஏற்றப்படும். சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் ஸ்ரீசக்ரத்தின் மீது ஜோதி தோன்றுவது போல, இங்கும் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதில் கோலங்கள் போட்டு அலங்கரித்து அங்கே மகர ஜோதியை ஏற்றுவோம். சபரிமலையில் ஜோதி தோன்றும் அதே வேளையில் இங்கும் ஐயப்பன் ஜோதியாக எழுவான். அந்த வேளையில் இங்குள்ள திடலில் பிரமாண்ட வாணவேடிக்கைகள் நடைபெறும். பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.
பெருகி வரும் இன்றைய பிரச்னைகள் யாவும் தீர்வதற்கு ஐயப்பனை மட்டுமே நம்பி வாருங்கள். நிச்சயம் உங்கள் கவலைகள் யாவும் நீங்கி சந்தோஷ வாழ்வைப் பெறுவீர்கள் என்கிறார் கிருஷ்ணன் குருசாமி. இந்த ஆண்டு சக்தி விகடன் வாசகர்களின் நன்மைக்காக சபரிமலையில் இருந்து ஸ்ரீஐயப்பனுக்கு அபிஷேகம் விசேஷ நெய்யும் விபூதியும், பம்மல் ஆலயத்தில் அளிக்கப்படும் ரட்சையும் அளிக்கப்பட உள்ளது.
வரும் மகர ஜோதி நாளில் இந்த விசேஷ பூஜையில் சங்கல்பம் செய்து கொள்ள சகலரையும் அழைக்கிறோம் வாருங்கள். ஐயன் ஐயப்பனின் அருளால் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று வாழ பிரார்த்திக்கிறோம்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஆராதனையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஆராதனைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆராதனை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஆராதனை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு சபரிமலையில் ஸ்ரீஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த நெய், விபூதி மற்றும் திவ்யரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஆராதனை வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஆராதனை வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஆராதனை வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404