
அபூர்வ நூல் தரும் அற்புதத் தகவல்
படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் மகாவிஷ்ணு, ஒடுக்கும் கடவுள் சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளும் வேண்டுதல்- வேண்டாமை இல்லாதவர்கள்; தயாள குணம் நிரம்பியவர்கள். அப்படிப்பட்ட மும்மூர்த்திகளுக்குக்கூட கடும் கோபம் வருமாம். அதுவும், யாரிடத்தில் என்கிறீர்கள்... மாதவம் செய்யும் முனிவர் களிடத்தில் கோபம் வருமாம். ஏன்?

முனிவர்கள், தம்மைப் பெற்ற தாய் தந்தையரை வணங்கி, அவர்களின் அனுமதி பெற்றுத்தான் துறவு மேற்கொள்ள வேண்டும். பெற்றோரை ஆதரவில்லாமல் தவிக்க விட்டுவிட்டு, ‘நான் துறவு மேற்கொண்டு தெய்வத்தை அடையப் போகிறேன்’ என்று கிளம்பினால், அவர்களிடம் தெய்வங்களுக்கே கோபம் வரும் என்கிறது, பன்னூற்றிரட்டு எனும் ஞானநூலில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்று.
பெற்றோர்களைக் காப்பாற்றாதவன் எப்படிப்பட்ட உயர்நிலையில் இருந்தாலும், அவனுக்கு நரகம்தான். அவன் மேல் தெய்வங்களே கோபம் கொள்ளும் எனும் தகவலைச் சொல்கிறது, அந்தப் பாடல்.
இந்த நூலில் இருக்கும் வேறொரு பாடல், பயனில்லாதவை எவையெவை என பட்டியல் இடுகிறது.
பொறுமை இல்லாத அறிவு, போகங்களை அனுபவிக்காத இளமை, இறங்கி நீராட வழியில்லாத குளம், அலங்காரங்கள் பல இருந்தாலும் நல்ல ஆடையில்லாதவனுடைய தூய்மை, வாசனை இல்லாத மாலை, நற்கல்வி (ஒழுக்கம்) இல்லாத புலவர்களின் புலமை, நல்லவர்களால் காவல் செய்யப்படாத நகரம், நீரில்லா ஊர், பிள்ளை இல்லாதவர்களின் பெருஞ்செல்வம் ஆகிய அனைத்துமே பயனில்லாதவை என்று விவரிக்கிறது அந்தப் பாடல்!
-கே.வள்ளி, கடலூர்