"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்பது பரம்பொருளின் திருவாய்மொழி. இறைவழிபாட்டிற்குரிய புனிதமான இந்த மார்கழி மாதம் பெண்களுக்கு மிகுந்த உற்சாகம் தரும் மாதமாக விளங்குகிறது.
மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாயிலிலும், முற்றத்திலும் அதிகாலையில் விளக்கேற்றி, வண்ணக் கோலமிட்டு அலங்கரித்தலும், பாவை நோன்பு நோற்றலும் பெண்களுக்கு உரியன. இம்மாதத்தில் பூசணி மருதநில தெய்வமாகிய இந்திரனுக்கு உகந்தவையாகச் சொல்லப் பெற்றிருக்கின்றன. கோலமிட்டு அலங்கரித்த வாயில் முற்றங்களில் பசுஞ்சாண உருண்டைகளில் பூசணிப்பூக்களைப் பொதிந்து வைத்து, அலங்கரிப்பது பண்டைய காலம்முதல் கடைபிடிக்கும் வழக்கமாகும்.

தங்கநிறப் பூக்களான பூசணிப் பூக்களை வைத்து கோலமிட்டு அலங்கரிப்பதன் மூலம் இந்திரனை மகிழ்விப்பதால், அவரருளால் வீட்டில் செல்வம் தழைத்திடும் என்பது ஐதிகம்.
இந்திரனின் முக்கிய ஆயுதமான இடியே, பூமியில் பூசணிப்பூக்களாக மலர்ந்தன என்றும், இந்திரனின் ஐராவத யானையே வெண்பூசணியாக பூமியில் காய்க்கிறது என்றும், கர்ண பரம்பரைக் கதைகளும் கிராமங்களில் உண்டு.
மார்கழி மாதம் என்பது பனிமழைக் காலம். நோய்கள் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் பெருக்கமடையும் காலம். எனவே இப்பருவக் காலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை வாசலிலேயே தடுத்தழித்திடும் முன்னேற்பாடாகவே, நோய்த்தொற்றுத் தடுப்பான்களாக பூசணிப்பூக்கள் பொதிந்த சாண உருண்டைகளை முற்றங்களில் வைக்கும்படிச் செய்தனர் முன்னோர்கள் என்றும் சொல்வார்கள்.

இப்படி அன்றாடம் வைக்கும் உருண்டைகளை வெயிலில் அடைகளாகத் தட்டிக் காயவைத்து சேகரித்து வைப்பர். அவற்றை எரியவைத்து பொங்கலன்று முற்றத்து அடுப்புகளில் பொங்கல் வைப்பது தொன்மையான வழக்கம்.