மகாபாரத போரையும், யுத்தத்தில் உயிரை விட்டவர்களையும் நமக்கு தெரியும். ஆனால் பாண்டவர்களின் வெற்றிக்காக போருக்கு முன்னரே, தன் உயிரை கொடுத்த வீரன் அரவாண் பற்றியும் அறிவீர்கள். அவனைப் பற்றிய விசேஷ செய்திகளை அறிந்து கொள்வோமா?
இறந்துபோனாலும் குருக்ஷேத்திர போரை முழுமையாக பார்த்தவன் அவனே என்கிறது புராணம். தட்சகனின் வாழ்விடமான காண்டவ வனத்தை, கிருஷ்ணரின் துணையுடன் அருச்சுனன் எரித்து, தட்சகனையும் அவன் குலத்தினரையும் விரட்டி அடித்து, அங்கு இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை அமைத்தான். எனவே தக்ஷன் பழிவாங்க எண்ணினான். அப்போது இந்திரப்பிரஸ்தத்தில் அஸ்வமேதை யாகம் செய்ய ஆயிரம் பசுக்கள் வரவழைக்கப்பட்டன. சகுனியும் துரியோதனனும் தக்ஷகனை அழைத்து பசுக்களை கவர்ந்து பாண்டவர்களை பழிவாங்க சந்தர்ப்பத்தை உருவாக்கினார்கள். தக்ஷகனும் அவ்வாறே பசுக்களை கவர்ந்து சென்றான். அவற்றைக் காப்பாற்ற அர்ஜுனன் தனது காண்டீபம் எடுக்க யுதிஷ்டிரனும் திரௌபதியும் இருக்கும் அறைக்கு சென்றான்.

திரௌபதியோடு பாண்டவர் ஒருவர் இருக்கு, வேறொருவர் நுழையக்கூடாது என்ற ஒப்பந்தத்தை அர்ஜுனன் மீறியதால் ஒரு வருட காலம் வனவாசம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. அவ்வாறாக தனஞ்ஜெயன் தமிழகத்தின் ஒரு காட்டில் ஒரு நதிக்கரைக்கு அருகில் குடில் அமைத்து வாழ்ந்து வந்தார். அப்போது அவரது குடிலுக்கு அருகே ஒரு நாகலோகம் இருந்தது. அந்த நாகலோகத்தை கௌரவியன் என்ற நாகராஜன் ஆண்டு வந்தான். அவனுக்கு உலுப்பி என்ற மகள் இருந்தாள். அவள் அர்ஜுனரைக் கண்டதும் காதல் வயப்பட்டாள். இருவரும் திருமணம் செய்தனர். இருவருக்கும் சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையே அரவான்.
அரவான் மட்டும் கிருஷ்ணரால் பலியிடாமல் இருந்தால், அந்த போரை அவன் 60 விநாடிகளில் முடித்திருப்பான் என புராணக்கதை ஒன்று சொல்லும். அரவான் தவ வலிமையால் சிவ பார்வதியிடம் வரமாக பெற்ற மூன்று அம்புகளை இது சாத்தியம் என்று கூறும். அதை அரவான் கிருஷ்ணரிடம் நிரூபித்தும் காட்டினார். அப்போது ஸ்ரீகிருஷ்ணர் “உனது தந்தையின் அணி வெற்றி பெறுவதற்காக உன் உயிரை களத்தில் பலி கொடுத்து கொள்ள வேண்டும்” என்று கூறினார். அதற்கு அரவான் ஒப்புக்கொள்ளவே, உனது கடைசி ஆசையை கூறுமாறு கிருஷ்ணர் கேட்க, அரவான் இரண்டு வரங்களை கேட்டார். முதலாவதாக மணம் முடிந்து திருமண வாழ்க்கையில் ஒரு நாளேனும் ஈடுபட வேண்டும் என்றும் இரண்டாவதாக நான் போரை முழுவதுமாக காண வேண்டும் என்றும் கோரினான். கிருஷ்ணர் இந்த வரங்களை வழங்குவதாக ஒப்புக்கொள்கிறார்.

அதன் படி கிருஷ்ணர், கிருஷ்ணையையாக அவதாரம் எடுத்து அரவானை திருமணம் முடித்தார். ஒரு நாள் இல்லற வாழ்விற்குப் பின் பலிக்களம் புகுகிறான் அரவான். இந்நிகழ்வே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. இந்தக் கதையின் அடிப்படையில் மோகினியாய் தம்மை உணரும் அரவாணிகள் கூடி வரும் நிகழ்வாகக் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா உள்ளது.
அதன் படி திருநங்கைகள் முதல் நாள் அரவானை கணவனாய் ஏற்று தாலி கட்டி ஆடிப்பாடி மகிழ்வர். அடுத்த நாளே கணவன் பலியானதை உணர்த்தும் விதமாக தாலி அறுத்து அழுது அவர்கள் விதவைக் கோலம் கொள்கின்றனர். இரண்டாம் வரம் நிறைவேற “உன்னை பலியிட்ட பிறகு உன் தலைக்கு மட்டும் உயிர் இருக்கும், குருக்ஷேத்திரத்திற்கு அருகில் உள்ள குன்றின் மீது உன் தலை வைக்கப்படும். உன் கண்களால் போர் முழுவதையும் நீ காணலாம்” என்று கிருஷ்ணர் கூறினார். பின், அரவான் தன்னையே பலியிட்டு கொண்டான். அவனது தலை மட்டும் குன்றின் மீது வைக்கப்பட்டது. 18 நாள் போரையும் முழுவதுமாக பார்த்த பெருமையை கொண்டவன் அரவான். இந்த நிகழ்வை மையமாகக் கொண்டே திரௌபதி வழிபாடு மரபு தோன்றியது. அதன் படி 18 நாள் திருவிழாவில், மகாபாரதப் போரைச் சித்தரிக்கும் சடங்குகளைப் பார்க்கும் வண்ணம் அரவானின் தலை கம்பத்தின் மேல் உயர்த்தி வைக்கப்படும்.

தமிழ்நாட்டில் 48 இடங்களில் அரவான் வழிபாடு நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் மட்டுமின்றி இந்தோனேசியாவிலும் அறியப்படுகிறார். இங்கு அவரை “இரவன்” என்ற பெயரால் வழங்கப்படுகிறார். சாவகத் தீவுகளில் உள்ள அரவானுக்கென்று தனிப்பட்ட மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அரவானை பற்றிய செய்திகள் 9-ஆம் நூற்றாண்டில் தமிழில் பெருந்தேவனாரால் இயற்றப்பட்ட பாரத வெண்பாவில் கூறப்பட்டிருக்கிறது. அரவான் அற்புதங்கள் நிறைந்த ஒரு ஆதித்தமிழன் என்றே அறியப்படுகிறார்.
- திவ்ய பாரதி. சு