மகா சிவராத்திரி
உலக நன்மையின் பொருட்டு, ஒரு பிரளயம் முடிந்த இரவில் சிவபூஜை செய்தாள் உமையவள். அம்பிகை பூஜித்த அந்த நாளே மகா சிவராத்திரி.
மாலும் பிரம்மனும் சிவனாரின் அடிமுடி தேடிய கதை நாமறிந்ததே. இது நிகழ்ந்தது, மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி அன்று. அந்த நாளே சிவராத்திரி என்கிறது ஸ்காந்த மஹாபுராணம்.
அற்புதமான இந்தத் தினத்தில் நான்கு கால பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவதால் சகல நன்மைகளும் உண்டாகும்.
நான்கு கால வழிபாடுகள்!
முதல் காலம்: சிவபெருமானின் சோமாஸ்கந்த திருவடிவை தியானித்து, பஞ்சகவ்யத்தால் அபிஷேகித்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து, சிவமகா புராணம் பாடி வழிபடவேண்டும். பால் அன்னம் நிவேதிக்கலாம். இதனால் இல்வாழ்க்கை செழிக்கும்.
2-ம் காலம்: தட்சிணாமூர்த்தி திருவடிவை வழிபடவேண்டும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து, முல்லை மல்லிகையால் அர்ச்சித்து, கீர்த்தி திருஅகவல் பாடி, பாயசம் சமர்ப்பித்து வணங்கலாம். இதனால் ஞானமும் சிவப்புண்ணியமும் கிட்டும்.
3-ம் காலம்: லிங்கோத்பவ மூர்த்தத்தை வழிபடவேண்டும். தேனால் அபிஷேகித்து, வில்வம் சாதிமலர்களால் அர்ச்சனை செய்து, திருவண்டப் பகுதி மற்றும் லிங்கபுராணக் குறுந்தொகை பாடல்களைப் படித்து, எள் அன்னம் சமர்ப்பித்து வழிபடலாம். இதனால் இம்மையிலும் மறுமையிலும் சகல நன்மைகளும் உண்டாகும். நல்ல காரியங்கள் நடக்க சிவனருள் கைகூடும்.
4-ம் காலம்: ரிஷபாரூடர் வடிவை வழிபடவேண்டும். கருப்பஞ்சாறு கொண்டு அபிஷேகித்து, நந்தியாவட்டையால் அர்ச்சனை செய்து, வெண்சாதம் படைத்து, போற்றித் திருஅகவல் பாடி வழிபடலாம்; சகல சம்பத்துகளும் உண்டாகும்.

லிங்க புராணத் திருக்குறுந்தொகை
மகாசிவராத்திரி - லிங்கோத்பவ காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. லிங்கோத்பவ தத்துவ விளக்கத்தை, சிவலிங்கத் தத்துவம் எனலாம்.
திருமால் - பிரம்மனுக்கு,
சிவம் நெருப்புத் தூணாய் காட்சியளித்ததை நினைவுகூரும் அற்புத வடிவம் லிங்கோத்பவம். இந்த தருணத்தில் பெருமானைப் பிரம்மனும் திருமாலும் ஆயிரமாயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்களாம்.
இதனை நினைவுகூரும் விதம், ருத்ரம் ஓதி சிவனாரை வழிபடுவது விசேஷம். இயலாதவர்கள், அதியற்புத பலன்களைத் தரும் லிங்கபுராணக் குறுந்தொகைப் பாடல்களை ஓதி வழிபடலாம்!
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
புக்க ணைந்து
புரிந்து அலர் இட்டிலர்
நக்க ணைந்து
நறுமலர் கொய்திலர்
சொக்க ணைந்த
சுடரொளி வண்ணனை
மிக்குக் காணல்
உற்றார் அங்கிருவரே. 1
அலரும் நீரும் கொண்டு
ஆட்டித் தெளிந்திலர்
திலக மண்டலம்
தீட்டித் திரிந்திலர்
உலக மூர்த்தி ஒளிநிற வண்ணனைச் செலவு காணல்
உற்றார் அங்கிருவரே. 2
ஆப்பி நீரோடு
அலகு கைக்கொண்டிலர்
பூப்பெய் கூடை
புனைந்து சுமந்திலர்
காப்புக் கொள்ளி
கபாலிதன் வேடத்தை
ஓப்பிக் காணல்
உற்றார் அங்கிருவரே. 3
நெய்யும் பாலும் கொண்டு
ஆட்டி நினைந்திலர்
பொய்யும் பொக்கமும்
போக்கிப் புகழ்ந்திலர்
ஐயன் வெய்ய
அழல்நிற வண்ணனை
மெய்யைக் காணல்
உற்றார் அங்கிருவரே. 4
எருக்கங் கண்ணிகொண்டு
இண்டை புனைந்திலர்
பெருக்கக் கோவணம்
பீறி உடுத்திலர்
தருக்கினால் சென்று
தாழ்சடை அண்ணலை
நெருக்கிக் காணல்
உற்றார் அங்கிருவரே. 5
மரங்கள் ஏறி
மலர்பறித்து இட்டிலர்
நிரம்ப நீர்சுமந்து
ஆட்டி நினைந்திலர்
உரம்பொ ருந்தி
ஒளிநிற வண்ணனை
நிரம்பக் காணல் உற்றார் அங்கிருவரே. 6
கட்டு வாங்கம்
கபாலம் கைக்கொண்டிலர்
அட்ட மாங்கம்
கிடந்து அடி வீழ்ந்திலர்
சிட்டன் சேவடி
சென்று எய்திக் காணிய
பட்ட கட்டம் உற்றார் அங்கிருவரே 7
வெந்த நீறுவிளங்க அணிந்திலர்
கந்த மாமலர் இண்டை புனைந்திலர்
எந்தை ஏறுகந்து
ஏறு எரி வண்ணனை
அந்தம் காணல்
உற்றார் அங்கிருவரே. 8
இளவெ ழுந்த
இருங்குவ ளைம்மலர்
பிளவு செய்து
பிணைத்து அடி இட்டிலர்
களவு செய்தொழிற்
காமனைக் காய்ந்தவன்
அளவு காணல்
உற்றார் அங்கிருவரே. 9
கண்டி பூண்டு
கபாலம் கைக் கொண்டிலர்
விண்ட வான்சங்கம்
விம்மவாய் வைத்திலர்
அண்ட மூர்த்தி
அழல்நிற வண்ணனைக்
கெண்டிக் காணல்
உற்றார் அங்கிருவரே. 10
செங்க ணானும்
பிரமனும் தம்முளே
எங்கும் தேடித்
திரிந்தவர் காண்கிலார்
இங்குற்றேன் என்று
இலிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப்
புண்ணிய மூர்த்தியே. 11
பதிகத்தின் வழிகாட்டல்...
அன்பெனும் பிடியுள் எளிதில் அகப்படுபவர் சிவபெருமான். ஆனால் பிரம்மனும் திருமாலும் அவரைத் தங்கள் ஆற்றலால் அளக்க முயன்று தோற்றனர்.
பின்னர் பரமன், ‘நான் இங்கிருக்கிறேன்’ என்று லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு, அவர்களுக்கு அருள்பாலித்தார். இதை விளக்கி, இறைவனை பக்தி எனும் வலையால் மட்டுமே பிடிக்க இயலும் என்பதை அறிவுறுத்தி, ஒரு பதிகம் பாடினார் அப்பரடிகள். அதுவே லிங்க புராணத் திருக்குறுந்தொகை ஆகும்.
அற்புதமான இந்தப் பதிகம், பரமனின் அருள்பெற பக்தர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று அழகாக விளக்குகிறது. அந்த விளக்கங்கள் உங்களுக்காக...
மணம் மிகுந்த மலர்களைக் கொய்து சிவனுக்கு அர்ச்சனை புரிதல் வேண்டும்.
அவரை நன்னீரால் திருமுழுக்காட்டிப் பூக்களால் அலங்கரித்து வலம் வருதல் வேண்டும்.
சிவாலயங்களைச் சாணமிட்டு மெழுகி, நீர் தெளித்துப் பெருக்கி, கபாலியின் வேடத்தை நினைத்து உருகுதல் வேண்டும்.
பயனற்ற வார்த்தைகளைப் பேசாமல், நெய்யும் பாலும் கொண்டு அழல்மேனி அம்மானை அபிஷேகித்தல் சிறப்பு.
லிங்க மூர்த்திக்கு ஆடைகள் உடுத்தி, எருக்கு மலர்களாலான மாலையை அணிவித்தல் சிறப்பு.
ஒளி நிறைந்த பெருமானுக்காகக் குடம் குடமாக நீர் சுமந்து தருதல்; மரங்களில் ஏறி, மலர்களைக் கூடை கூடையாகப் பறித்துத் தருதல் சிறப்பு.
சிவதண்டமாகிய கட்டங்கம், கபாலம் ஏந்தி, அவனது புகழ் பாடி ஆடி, எட்டுறுப்புகளும் தோய வணங்குதல் சிறப்பு.
நல்ல மலர் மாலைகளைப் பூண்டு, விபூதி அணிந்து, பெருமானைப் போற்றவேண்டும்.
மன்மதனை எரித்த சிவனாரின் திருவடிகளில் குவளை மலர்களைக் கட்டி மாலையாக அணிவித்தல் சிறப்பு.
உருத்திராக்கங்களை
அணிதல்; சிவ சந்நிதியில் சங்கங்களை ஊதுதல் ஆகியவையும் சிறப்பு.