
நடராஜர் பத்து!
நடராஜர் பத்து!
மண்ணாதி பூதமொடு
விண்ணாதி அண்டம் நீ
மறைநான்கின் அடிமுடியும் நீ
மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ
அனலும் நீ மண்டலமிரண்டேழு நீ
பெண்ணும் நீ ஆணும் நீ
பல்லுயிர்க்குயிரும் நீ
பிறவும் நீ யொருவ நீயே
பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் தந்தை நீயே
பொன்னும் நீ பொருளும் நீ
இருளும் நீ ஒளியும் நீ
போதிக்க வந்த குரு நீ
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ
இந்தப் புவனங்கள் பெற்றவனும் நீ
எண்ணரிய ஜீவகோடிகளை
ஈன்ற அப்பனே
என் குறைகள் யார்க்குரைப்பேன்?
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட குண்டல மிரண்டாட
தண்டை புலி யுடையாட
குழந்தை முருகேசனாட
ஞான சம்பந்தரோடு இந்திரர்
பதினெட்டு முனி அட்ட பாலகருமாட
நரை தும்பை அறுகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
வினையோட உனை பாட
எனை நாடி இதுவேளை
விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
கடலென்ற புவிமீதில்
அலையென்ற உருக்கொண்டு
கனவென்ற வாழ்வை நம்பி
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்த நித்தம்
உடலென்ற கும்பிக்கு
உணவென்ற இரைதேடி
ஓயாமலிரவு பகலும் உண்டுண்டு
உறங்குவதைக் கண்டதே யல்லாது
ஒரு பயனடைந்திலேனே
தடமென்ற இடி கரையில்
பந்தபாசங்களெனும்
தாபமாம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று
ஏனென்று கேளாது
இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம்
தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம்
அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல
ஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல
அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி
கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி
இவரெலாம் கூறிடும் வையித்தியமல்ல
என்மனது உன்னடிவிட்டு
விலகாது நிலைநிற்கவே உளது கூற வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
நொந்துவந்தேனென்று ஆயிரம் சொல்லியும்
செவி யென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டோ
சந்ததமுன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுகனறு முகன்இருபிள்ளை இல்லையோ
தந்தை நீ மலடுதானோ
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்றும் அறிகிலேனே
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே
வேடிக்கை இதுவல்லவோ
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு
இனி உன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும்
வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதிலும்
மொழி எதுகை மோனையும்
இல்லாமல் பாடினும்
மூர்க்கனேன் முகடாகினும்
மோசமே செய்யினும் தேசமே கவரினும்
முழுகாமியே ஆகினும் பழியெனக்கல்லவே
தாய்தந்தைக்கல்லவோ பார்த்தவர்கள்
சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு
பாதியுடல் ஈந்த நீ பாலகனை காக்கொணாதோ
எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய்
அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
அன்னை தந்தைகள்
எனை ஈன்றதற்கு அழுவனோ
அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே
நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வினை செய்
என் மூட அறிவுக்கு அழுவனோ
முன்னில் என் வினை வந்து
மூளும் என்றழுவனோ
முத்தி வருமென்று உணர்வனோ
தன்னைநொந்தழுவனோ
உன்னை நொந்தழுவனோ
தவமென்ன என்றழுவனோ
தையலார்க்கு அழுவனோ
மெய்வளர்க்க அழுவனோ
தரித்திர திசைக்கழுவனோ
இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ
எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ
கன்னியர்கள் பழிகொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே
வயிறெரித்தனோ கிளை வழியில்
முள்ளிட்டனோ தாயாருடன்
பிறவிக்கென்ன வினை செய்தனோ
தந்த பொருளிலை யென்றனோ
தானென்று கெர்வித்து கொலை களவு
செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி
வீண்பொருள் பறித்தனோ
வானவரைப் பழித்திட்டனோ
வடவு போலே பிறரைச் சேர்க்காது அடித்தனோ
வந்தபின் என் செய்தனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ
எல்லாமும் பொறுத்தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
தாயார் இருந்தென்ன
தந்தையும் இருந்தென்ன
தன் பிறவி உறவு கோடி
தனமலை குவித்தென்ன
கனபெயர் எடுத்தென்ன
தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன
குருவாய் இருந்தென்ன
சீடர்கள் இருந்தும் என்ன
சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை
ஒன்றைக் கண்டு தடுக்க
உதவுமோ இதுவெல்லாம்
சந்தை உறவென்று தான்
உன்னிருபாதம் பிடித்தேன்
யார்மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்
கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
இன்னமும் சொல்லவோ உன்மனம் கல்லோ
இரும்போ பெரும் பாறையோ
இருசெவியும் மந்தமோ கேளாத அந்தமோ
இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ இது என்ன சாபமோ
இதுவோ உன் செய்கைதானோ
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும்
விழலாவனோ
நான் உனையடுத்துங் கெடுவனோ
ஓஹோ இது உன்குற்றம் என்குற்றம்
ஒன்றுமில்லை உற்றுப்பார் ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமாயினும்
இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
நிறைவு முத்திரை பாடல்...
சனி ராகு கேது புதன் சுக்ரன் செவ்வாய்
குரு சந்திரன் சூர்யன் இவரை
சற்றெனகுள்ளாக்கி ராசி பனிரெண்டையும்
சமமாய் நிறுத்தி யுடனே
பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும்
பக்குவபடுத்திப் பின்னால்
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும்
வெட்டிப் பலரையும் அதட்டி என் முன்
கனிபோலவே பேசி கேடுநினைவு
நினைக்கின்ற கசடர்களையுங் கசக்கி
கர்த்தநின் தொண்டராம்
தொண்டர்க்குத் தொண்டரின்
தொண்டர்கள் தொழும்பனாக்கி
சிறுமணவை முனுசாமி பாடியவை
இசைக்கும் எமை அருள்வது
இனியுன் கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

நாளும் நன்மை உண்டாகும் நடராஜர் பத்து!
ஆடலரசனாம் நடராஜரைப் போற்றும் துதிப் பாடல் நூல்களில் ஒன்று `நடராஜ பத்து’. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் சிறுமணவை என்ற ஊரில் வசித்த முனுசாமி என்ற சிவபக்தரால் எழுதப்பட்டது.
தில்லைக் கூத்தனை வியந்து எழுதப்பட்ட இந்தப் பாடல் திருவாசகம் போலவே பெரிதும் போற்றப்படுகிறது. எளியதும் ஆழமான கருத்துக் களைக் கொண்டதுமான இந்தப் பாடல், படிக்கும் அன்பர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும்.
புனிதமிகு மார்கழி மாதத்தில் அனுதினமும் நடராஜரை வழிபடும்போது, இந்தப் பாடலைப் படித்து வணங்கிட, வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்; நாளும் நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை.