
ஊட்டி ஹெல்க் ஹில் முருகன் கோயில்
மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் உலகப்புகழ் கொண்டவர். எனினும் நம்மில் அவரை நேரில் தரிசித்தவர்கள் குறைவாகவே இருப்பர். அந்த குறையைத் தீர்க்க அதே வடிவத்தில் ஊட்டி மான்குன்றில் முருகன் எழுந்தருளி இருக்கிறார் என்பது நாம் பெற்ற பேறு!

தமிழகத்தின் பத்துமலை என்று பக்தர்களால் சிறப்பிக்கப்படுகிறது, ஹெல்க் ஹில் (மான் குன்று) முருகன் கோயில். ஊட்டி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டரை கி.மீ. தொலைவில் உள்ளது, இந்த ஆலயம்.
வெகுகாலத்துக்கு முன்பு ஊட்டியிலிருந்து வருடம் தவறாமல் பாதை யாத்திரையாக சென்று பழநி முருகனை தரிசித்து வந்தனர் ஒரு தம்பதி. வயோதிகம் காரணமாக அவர்கள் பழநிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது, அவர்களுக்காக மான் குன்றில் பால தண்டாயுத பாணியாக முருகன் எழுந்தருளினார் என்ற செவி வழிச் செய்தி உள்ளது.




இயற்கை எழில் கொஞ்சும் மலையில் பிரமாண்ட உருவில் அருள்கிறார் முருகப் பெருமான். மூலவர் தண்டாயுதபாணியாய் தரிசனம் தருகிறார். குறிஞ்சி நிலத்தின் தலைவனான முருகனை, குறிஞ்சி பூக்கும் நிலமான இந்த மலையில் வைத்துக் கொண்டாடுவது விசேஷம் என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்!
தீர்த்தம், மூர்த்தி, தலம் மூன்றும் விசேஷமாக அமைந்த தலம் இது. இந்த ஆலயம் எவரால் எப்போது கட்டப்பட்டது என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை என்றாலும், புகழ் பெற்ற ஒரு ஜமீன் குடும்பத்தினர் மூலம் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடுகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் ஹெல்க் ஹில் முருகன் பாதத்தில் ஹால் டிக்கெட்டை வைத்து வழிபட்டுச் சென்றால், அதிக மதிப்பெண்ணுடன் தேர்வு பெறுவார்கள் என்பது நம்பிக்கை.திருமணத்தடை உள்ள அன்பர்கள், இந்த மான் குன்றம் முருகனை மனமுருகி வழிபட்டால் திருமண வரம் பெறுவர்; பிள்ளை வரம் வேண்டுவோர் இங்கு வந்து பிரார்த்திக்க, பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பங்குனி உத்திரத்தன்று மலையடிவாரத்தில் இருந்து பாத யாத்திரையாக, பால்குடம் ஏந்தி வரும் பக்தர்களுக்கு நினைத்தது நிறைவேறுகிறது என்பது இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று.அழகிய சோலைகளும் காட்டுப்பூக்களும் நிறைந்த மூலிகை மலையில் அமைந்துள்ள இந்த முருகன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் இங்கு தியானம் இருக்க மனத்தெளிவு பிறக்கும் என்பது கண்கூடு.