சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டித் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் சட்டை நாதர் சுவாமி கோயிலில் உள்ள நான்கு கோபுர வாசல் வழிகளில் மேற்குக் கோபுர வாசல் மட்டும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய வைக்கப்பட்டு இருந்தது, மற்ற கோபுர வாசல்கள் வழியாக ஆக மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று மேற்குக் கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முன்னதாக பசு, யானை, ஒட்டகம், குதிரை ஆகியவைகளும் ஊர்வலமாக வந்தன. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மேற்குக் கோபுர வாசலை வந்தடைந்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டு மேற்குக் கோபுர வாசல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை அதன் வழியே உள்ளே சென்றன. அதன் பின்னர் மேள, தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றனர். 40 ஆண்டுகளாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த மேற்குக் கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு எதுவாக திறக்கப்பட்டுள்ளது. சீர்காழி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த மாதம் கும்பாபிஷேக யாகசாலைப் பணிக்காக மேற்குக் கோபுர வாசல் அருகே உள்ள நந்தவனத்தில் பள்ளம் வெட்டியபோது சுவாமி ஐம்பொன் சிலைகள் , தேவாரப் பதிகங்கள் தாங்கிய செப்பேடுகள் அதிக அளவில் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.